Thursday, 30 March 2023

எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ

எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?

துயிலெடையாக வரும் பாடல்களில் இது கடைசியான பாடல். நமது வீடுகளில் கூட சிறுவர்கள் கடைசியாகத்தானே எழுந்துக் கொள்வர். அப்படியே எழுப்பினாலும் உடனே எழுவார்களா? அண்ணன் எழுந்து விட்டானா? அக்காள் எழுந்தாளா என சினுங்கமாட்டார்களா?

அப்படித்தான் இப்பெண்ணும், பக்தியில் சிறியவள். உலக விஷயங்களில் நாட்டம் விடாமல் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாள். ஆனால் இறை அனுபவம் பெற மிகவும் உகந்தவள் இவளையும் அழைத்துக் கொண்டுதான் செல்லவேண்டும்.

இதோ பாடுகிறாள் ஆண்டாள். இப்பாடல் வெளிப்படையான உரையாடலாக அமைந்த அழகான பாடல்.

முந்தைய பாசுரங்களில் பொழுது புலர்ந்ததற்கான அடையாளங்களெல்லாம் தெரிகின்றன. இன்னமும் எழாமல் இருக்கும் தோழியரை சிறிது கேலி பேசுகிறாளல்லவா” இங்கும் அது தொடர்கிறது. இவள் தூங்கவில்லை, எழாமல் கிடக்கிறாள். அதனால்

தோழிகள் : எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?

உறங்குபவள்: சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்

தோழிகள் : வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்

உறங்குபவள்: வல்லீர்கள் நீங்களே!

உறங்குபவள்: நானேதான் ஆயிடுக.

தோழிகள் : ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை

உறங்குபவள்: எல்லாரும் போந்தாரோ?

தோழிகள் : போந்தார்

தோழிகள் : போந்தெண்ணிக்கொள்

தோழிகள் : வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்!

இப்படித்தான் இவர்களின் உரையாடல் செல்கிறது. பெண்கள் சிலர் சேர்ந்து பேசும் பொழுது பேசும், கிண்டல் கலந்த பேச்சை மிக அழகாக காட்டியிருப்பாள் ஆண்டாள்.

எல்லே! என்பது தென் தமிழகத்தின் ஆழகான வட்டார பேச்சு. ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவளாயிற்றே!

இளங்கிளியே! இவள் இளையவளில்லையா? அது மட்டுமல்ல இவள் கிளிபோல அழகாக பேசக்கூடியவள். முன்பு பாவை நோன்பிற்கு வருவதாக நிறையா பேசியிருப்பாள் போல!

இன்னம் உறங்குதியோ? என்னவோ நேற்று மிக அழகாக பேசினாய். எழாமல் இன்னமுமா தூங்கிக் கொண்டிருக்கிறாயே? பொடி வைத்த பேச்சு. பெண்களல்லவா!

உள்ளே இருப்பவளுக்கு இப்பொழுது வெட்கமாகிவிடுகிறது. இப்படி சில்லென்று என்னை அழைக்காதீர், நங்கைமீர், போதர்கின்றேன்.

உறக்கத்திலிருந்து எழும் போதே கேலி செய்யப்பட்டால், சிறிது எரிச்சலடைவது இயல்புதானே! பனிப்பெய்யும் அக்காலை பொழுதில் இவர்களின் அழைப்பு வேறு இவளுக்கு மேலும் சில்லென்று குத்துவதாக உள்ளது. அழைக்காதீர் வந்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று சொன்னவள், அவளது வார்த்தைக்குள்ளும் சிறிது கிண்டலை வைக்கிறாள். வந்தவர்களை நங்கைமீர் என்றழைக்கிறாள்.

முந்தைய பாசுரத்தில் தோழிகள் உறங்குபவளை, நங்காய் எழுந்திராய் என்றார்களல்லவா! இப்பொழுது அதையே உறங்குபவள் தோழிகளைப்பார்த்து ‘நங்கைமீர்’ என்று சொல்கிறாள்.

நங்கை என்றால் பெண்களில் சிறந்தவள் என்று பொருள். ஆண் மகனில் சிறந்தவர் நம்பி’ எனக் குறிக்கப்படுவர்.

கம்பராமாயாணத்தில் சீதையையும் இராமனையும் நங்கை, நம்பி என அழைத்திருப்பார் கம்பர். கோலம் காண் படலத்தில் ஒரு பாடல். சீதையின் அழகைக் கண்டு பெண்களே வியப்பதான அழகான பாடல்.

சங்கு அம் கை உடைமையாலும்,
தாமரைக் கோயிலாலும்,
எங்கு எங்கும் பரந்து வெவ்வேறு
உள்ளத்தின் எழுதிற்று என்ன,
அங்கு அங்கே தோன்றலாலும்,
அருந்ததி அனைய கற்பின்
நங்கையும் நம்பி ஒத்தாள்;
நாம் இனிப் புகல்வது என்னோ?

பெண்களில் சிறந்தவள் சீதை, ஆடவரில் சிறந்தவன் இராமன். இவர்களுக்கு ஒப்புமைக் கூற வேறு யாருமில்லையாதலால், மிக அழகாக ஒருவருக்கு மற்றவரை ஒப்புமை படுத்தும் அழகு கம்பனின் தனித்திறம். இங்கு இராமனை ஒத்தாள் சீதை என்று கூறவில்லை. நங்கையும் நம்பி ஒத்தாள் எங்கிறாள். இப்படி நங்கை என்னும் சொல் மிகச் சிறந்த பெண்ணான சீதையைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

சிலப்பதிகாரத்திலும் கவுந்தி அடிகள் கண்ணகியை ‘சீர்சால் நங்கை’ என்றே குறிப்பிடுகிறார்.

திருப்பாவையில் இப்பெண்களும் மிகச் சிறந்தவர்களே! நங்கையர் என அழைக்கப்பட வேண்டியவர்களே! என்றாலும் சிறிது மாயையில் சிக்கி இருக்கிறார்கள். அதனால் இப்பெண்கள் சற்று கேலி பேசுகிறார்கள். இப்பொழுது உறங்குபவளும் ‘நீங்களெல்லாம் மிகச் சிறந்தவர்கள், நானே குறைபாடுடையவள் என்பதாக தன் கோபத்தைக் காட்டவே ‘நங்கைமீர் எங்கிறாள்.

இதைக்கேட்டவுடன் பேச்சு இன்னமும் நீள்கிறது. நீ மிகுந்த பேச்சு வல்லமை மிக்கவள். வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன்வாயறிதும். இங்கு அவளது சொல்லை கட்டுரைகள் என்று குறிப்பது அறிய தக்கது. கட்டுரை என்றால் பொருள் பொதிந்த சொல் என்று பொருள். உன் உள்ளர்த்தம் கொண்ட பேச்சுத் திறமையை முன்பே அறிவோம் எனக்கூறுகிறார்கள். உள்ளிருப்பவளும் சளைத்தவளல்லவே. வல்லீர்கள் நீங்கள் தான். இவர்கள்தானே முதல் பாசுரத்தில் ’எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்’ என்றழைத்து கேலி பேசத் துவங்கினார்கள். அதனால் பேச்சில் வல்லவர்கள் நீங்களே என சொல்கிறாள். மேலும் நீடிக்க விரும்பாமல், நானேதான் ஆயிடுக! நானாகவே இருந்துவிட்டுப் போகிறேன் என்றும் கூறுகிறாள். விவாதத்தை தடுக்கும் ஒரு உத்தி இது.

தோழிகளோ இன்னமும் விட்டப் பாடில்லை. உனக்கு மட்டும் என்ன சிறப்பு இவ்வளவு எழுப்ப வேண்டுமோ, என கேட்க, உள்ளிருப்பவள் எல்லோரும் வந்தார்களோ, ஆமாம் வந்து விட்டார்கள். வேண்டுமானால் நீயே வந்து எண்ணிபார்த்துக் கொள்ளேன். நாமெல்லோருமாக, வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாடுவோம் வா என அழைக்கிறார்கள். இப்படி இவர்கள் உரையாடல் நிகழ்கிறது. இதோபோல் உரையாடலுடன்

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்

என்ற திருவெம்பாவைப்பாடல் இப்பாடலுடன் ஒப்பு நோக்கத் தக்கது. தோழிகள் உறங்குபவளை ‘முத்துப் போன்ற சிரிப்புடையவளே!’ என்றழைக்க, அவளோ தோழிகளை ‘வண்ணக் கிளி மொழியார்’ எனக்கூறி எல்லோரும் வந்தாரோ எனக் கேட்க, வந்து நீயே எண்ணிக் கொள், குறைந்தால் மீண்டும் உள் சென்று தூங்கி விடு என்று கேலியும் கிண்டலுமாக அமைகிறது இப்பாடலும்.

இங்கு எல்லோரும் வந்து விட்டாரா என்றெல்லாம் கேட்டு ‘கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதைத்தான் இருப்பாடல்களிலும் உறங்கும் தோழிகள் செய்கிறார்கள். எழுந்திருக்க மனமில்லை. தேவையில்லாத கேள்விகள் கேட்டு காலத்தை போக்குகிறார்கள்.

இங்கு தோழிகளை எழுப்புதல் என்பது நம் மனத்தினை எழுப்புதல் அல்லவா! மனம் இப்படித்தான் தேவையற்றவற்றில் கவனம் செலுத்தி உண்மைப் பொருளை பிடித்துக் கொள்ளாமல் வழுக்கிச் செல்லும். மனமே மனித வாழ்க்கை எனபது அரியது, தூக்கம் என்ற மாய வலையில் சிக்குண்டு காலத்தை வீணாக கழிக்காதே! என்பதுதானே ஆண்டாளும், மாணிக்கவாசகரும் நமக்குச் சொல்வது.

இதோ மாணிக்க வாசகர் விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைப்பாட அழைக்கிறார்.

ஆண்டாள் திருப்பாவையில், வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாட அழைக்கிறாள்.

வல்லானை என்ற சொல் வலிமைமிக்க யானையையும், வல்லவன் என்ற பொருளிலும் வந்து பல பொருட் ஒருமொழியாக அமைந்திருப்பது அழகு.

வலிமைப் பொருந்திய யானையான குவாலைய பீடம் என்ற கம்சனின் யானையை கொன்றவன் அல்லவா கண்ணன்!

சிலப்பதிகாரத்திலும் யானையைக் கொன்ற நிகழ்வு குறிக்கப் படுகிறது. கடலாடு காதையில் மாதவியின் பதினொரு வகையான ஆடல்கள் சொல்லப்பட்டிருக்கும். அதில்

கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத் தொகுதியும்

குவாலய பீடம் என்ற யானையை கொன்ற அஞ்சன வண்ணனான கண்ணன் ஆடிய ஆட்டம் அல்லியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாட்டத்தை மாதவி ஆடுகிறாள் எங்கிறது சிலப்பதிகாரம்.

இப்படி குவாலய பீடம் என்ற யானையைக் கொன்றவனும், தன் பகைவரின் பகையை செருக்கை அழிக்க வல்லவனும், புரிந்துக் கொள்ள முடியாத மாயம் நிறைந்தவனும் ஆகிய கண்னனைப் பாடுவோம் வாருங்கள் எங்கிறாள். தன்னை எதிர்த்தவரின் பகையை அழிப்பானே அன்றி அவரை அழிக்கமாட்டான். மாற்றாரின் மாற்றழிக்க வல்லான். வாலி, கும்பகர்ணன் போன்றவர் பகைவராயினும் பகையை அழித்து ஆட்கொண்டவனல்லவா! அவனது செயல்கள் மனிதரால் புரிந்து கொள்ள இயலாதல்லவா, அதனால் மனமே தேவையற்ற கேள்விகளை விடுத்து, அந்த மாயனைப் பாடி பரவுவாயாக என இப்பாடலில் நமக்கெல்லாம் வழி காட்டுகிறாள் ஆண்டாள்.

இந்த பாடலுடன் தோழியர் அனைவரும் எழுந்து சேர்ந்துக் கொள்ள, பாவை நோன்பிருக்க, கண்ணனிடம் பறை கொள்ள அவன் மாளிகை வாசல் அடைகிறாள் ஆண்டாள்.

Sunday, 26 March 2023

செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்

செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்

இன்னும் இத் துயிலெடைப் பாடல்களில் மிக அற்புதமான சில இயற்கை நிகழ்வுகளை ஆண்டாள் பதிவு செய்திருக்கிறாள். வெள்ளி (வீனஸ்) கிரகமும் வியாழம் (ஜீபிடர்) கிரகமும் ஒன்றாக தெரிவது குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழக்கூடிய ஒரு வானியல் நிகழ்வு. இது சற்று அடிக்கடி நிகழக்கூடியது. ஆனால் வெள்ளி அதிகாலையில் கிழக்கில் எழும் போது வியாழன் மேற்கில் மறைவது பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை நிகழக்கூடியது, இது மார்கழி மாதத்தில் விடியலுக்கு முன்பாக துல்லியமாக நடைபெறும் என்று அறிவியல் கூறுகிறது, இந்நிகழ்வு 8 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்ததாக வரலாறு உண்டு. இதனைக் கொண்டே ஆண்டாளின் காலமும் வயதும் கணக்கிடப்பட்டுள்ளது.

வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளுஞ் சிலம்பினகாண்

என்று இவ்வரிய நிகழ்வைத் தன் பாடலில் வைத்துள்ள ஆண்டாளின் ஞானம் வியக்கத்தக்கது. இன்று, சமகாலத்தில் நிகழும் பல அரிய நிகழ்வுகளில் தம் கவனத்தைச் செலுத்துவோரும் அதை அருமையாக படைப்புகளில் படைப்போரும் மிக அரிதே.

மேலும் பாவை தன் பாடலில்

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

இதுவும் விடியலுக்கு முன் தோன்றும் ஒரு அற்புத காட்சி. செங்கழுநீர் மலர் வைகறையில் மலரும். ஆம்பல் குவியத் துவங்கும். பகலில் ஆம்பல் குவிந்திருக்கும். இரண்டும் நீர்நிலை பூக்கள்.

இதே போன்ற காட்சியை மாலையில் கம்பன் காட்டுகிறான். மிதிலையில் இராமன் நடந்து வருகையில் அண்ணலும் நோக்குகின்றான் அவளும் நோக்குகின்றாள். இருவரும் மாறிபுக்கு இதயம் எய்தினர். அன்று மாலை வருகின்றது. இதை

விரை செய் கமலப் பெரும் போது
விரும்பிப் புகுந்த திருவினொடும்,
குரை செய் வண்டின் குழாம் இரியக்
கூம்பிச் சாம்பிக் குவிந்துளதால்,
உரை செய் திகிரி தனை உருட்டி
ஒரு கோல் ஓச்சி உலகு ஆண்ட
அரசன் ஒதுங்கத் தலை எடுத்த
குறும்பு போன்றது அரக்கு ஆம்பல்.

என்று காட்டுகிறான் கம்பன். மாலையில் சந்திரன் தோன்றுகிறது. தன்னிடம் குடியிருந்த இலக்குமியும் ஒலிக்கும் வண்டுகளின் கூட்டமும் தன்னிடமிருந்து நீங்கியதால் தாமரை, வாடி குவிந்ததாம். வலிமையோடு அரசாண்ட ஒரு மன்னன் வீழ்ந்துவிட ஒரு குறுநில மன்னன் தலையெடுத்ததைப் போல் சந்திரன் மேலெழும்பியதாம். அதுபோல் ஆம்பல் மலர்ந்ததாம்.

ஆமாம், சீதைக்கு இம்மாலை துன்பத்தையல்லவா தந்தது! சீதையின் தாமரை முகம் சூரிய குல திலகனாம் இராமனை காணமுடியாததால் வாடியதல்லவா!

கம்பன், சீதையின் மனநிலையை எடுத்துக் கூற இந்த இயற்கை நிகழ்வை உவமையோடு எடுத்தாண்டிருக்கும் அழகும், இதே இயற்கை நிகழ்வை, காலை மலர்வதை குறிக்க ஆண்டாள் காட்சி படுத்தியிருக்கும் அழகும் அறிந்து மகிழத் தக்கது.

இன்னும் நாம் முன்பே காண்டோம், கோவில்களில் கோவில் நடை திறந்துவிட்டதை அறிவிப்பதற்காக சங்கு முழங்கப்படும் என்று. இப்பொழுது பல கோவில்கள் திறந்துவிட்டன. அப்படி சங்கு முழங்க, காவி உடை அணிந்த துறவியர் அவரவர் கோவிலுக்குச் செல்கின்றனர்.

செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

இத் துறவிகள் காவி நிற உடையை அரையில் அணிந்திருப்பர், ஆனால் அவர் பற்கள் வெண்மை நிறத்தினவாய் இருக்கும். அவர்கள் அனைத்தும் துறந்தவர். எனவே இல்லதிலிருப்போர் பயன் படுத்தும் வெற்றிலை போன்ற பொருட்களை உபயோகபடுத்த மாட்டார்கள். அதனால் அவர் பற்கள் வெண்ணிறத்தனவாய் இருக்கும். ஆயின் இல்லத்திலிருப்போர் வெற்றிலைப் பாக்கு பயன் படுத்துவதால் அவர் தம் பற்கள் காவி நிறத்திலும், அவர் உடை வெண்ணிறத்திலும் இருப்பதைக் காண முடியும். இப்படி மிகத் துல்லியமாக பல நிகழ்வுகளை தன் பாடலில் பதித்து அதிகாலை வேளையை நம் கண்முன்னே காட்டும் அழகு அறிந்து இன்புறதக்கது.

இப்படி பங்கைய கண்ணானை, தன் மனத்திற்கினியானைப் பாட தோழிகளை எல்லாம் துயிலெழுப்புகிறாள் ஆண்டாள். எல்லே, இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ? எனக் கேட்க, இதோ அவள் முதன் முறையாக மறு மொழி கூறுகிறாள். இவர்களிடையேயான அழகிய உரையாடலை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Friday, 24 March 2023

கண்ணன் கண்ணழகும், கன்னியர் கண்ணழகும்

கண்ணன் கண்ணழகும், கன்னியர் கண்ணழகும்


புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

போதரிக் கண்ணினாய், போது என்றால் மொட்டு மலரும் போது காணப்படும் சற்றே விரிந்த நிலை. அரி என்றால் வண்டு இவள் விழிகள் சற்றே திறந்திருக்கின்றன. மலரில் கரிய வண்டிருப்பது போல் இவள் விழியில் கரிய கண்மணிகள் தெரிகின்றன. அதனால் தான் போதரி கண்ணினாய் எங்கிறாள். பெண்ணே உன் கண் சொல்கிறது நீ தூங்க வில்லை. கட்டிலில் படுத்துக் கிடக்கிறாய். உன் கள்ளம் தவிர்த்து எழுந்திராய் எங்கிறாள். மலர்களின் வெவ்வேறு நிலைக்கான பெயர்கள் அறிந்து உணரத்தக்கவை.

அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை
நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை
முகை - நனை முத்தாகும் நிலை
மொக்குள்-"முகை மொக்குள் உள்ளது நாற்றம்"-திருக்குறள்
(நாற்றத்தின் உள்ளடக்க நிலை)
முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்
போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
மலர் - மலரும் பூ
பூ - பூத்த மலர்
வீ - உதிரும் பூ
பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்
செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை

இதேபோன்று கண்ணழகை இன்னும் ஒரு இடத்திலும் ஆண்டாள் காட்டுகிறாள். இது கண்ணனின் கண்ணழகு. கண்ணன் பையத் துயின்ற பரமன் அல்லவா! இது இப்பெண் போல் பொய் தூக்கமன்று. நப்பின்னையுடன் கட்டிலில் உறங்கும் அமைதியான உறக்கம். கண்ணனை எழுப்பி ஆண்டாள் பறை கொள்ள வேண்டும், இதோ பாடுகிறாள்.

22ஆம் பாடலில்

கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ?

சதங்கை, கொலுசு போன்ற ஆபரணங்களில் ஒலி எழுப்பும் கிங்கிணி சற்று விரிந்திருக்கும். அப்பொழுதுதான் ஒலி மென்மையாய் ஒலிக்கும். அப்படி கிங்கிணிப் போல் கொஞ்சமாய் விரிந்த நிலையில் தாமரைப்பூ இருக்கிறதாம். அத்தாமரை மலரைப்போல் கண்ணனின் கண்கள் இருக்கிறதாம். அடடா என்ன அழகு! எண்ண, எண்ண, அழகு இந்த உவமை நயம். செயற்கையான கிங்கிணியின் அழகும் இயற்கையான தாமரையின் அழகும் இணைந்து, எல்லாமுமான கண்ணனின் கண்ணழகில் தெரிந்தது பொருத்தம் தானே!

கண்ணனின் கண்கள் தாமரைப் போல் சிவந்த நிறங்கொண்டவை, முதல் பாடலிலேயே கார்மேனி, செங்கண் என்றாளல்லவா? அவையும் சிறியதாக விரிந்திருக்கின்றன. சிலர் உறங்கும் போது கண்கள் முழுமையாக மூடிக் கொள்ளாமல் இமைகள் பிரிந்த நிலையில் இருக்கும் அல்லவா. அப்படித்தான் கண்ணன் உறங்குகிறான். ஆண்டாள் கண்ணனின் கண்களைக் காண்கிறாள். சற்றே இமைகள் பிரிந்த நிலையில் கண்மணிகள் தெரிவது கிங்கிணி போன்று தெரிகிறது. அவன் கண்களோ சிவந்த நிறமானவை. விரிந்த நிலையில் கிங்கிணி போலிருந்தாலும் நிறத்திலும் பண்பிலும் வடிவிலும் அவை தாமரையை ஒத்திருக்கின்றன. அதனால் கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல’ விளங்கும் உன் சிவந்த கண்களால் எம்மேல் மெல்ல விழியாவோ! என்று மென்மையாய் எழுப்புகிறாள். கண்ணன் மெல்ல எழுவானா? நம்மை நோக்குவானா? என்று அவன் கண்ணழகில் நம்மனமும் ஒன்றிவிடுகிறதல்லவா?

இன்னும் இப்பாடலை படிக்கும் போது

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே

என்ற வரிகள் நமது செவியில் பின்னனி இசையாக ஓலிப்பதை நாம் கேட்கலாம். யாரால் மறக்க இயலும் இவ்வழகிய பாடலை. ஆண்டாள் எழுத்தோவியமாக வடித்த இந்த விடிந்தும் விடியாத காலைப் பொழுதும், மலர்ந்தும் மலராத பாதி மலர்போல கண்வளரும் அழகும் கண்ணதாசன் போன்ற ஒரு பெரும் கவியரசனை பாதிப்பது இயல்பு தானே! அதன் பயனாய் நம் புலங்களுக்கு இனிய விருந்தாய் பல பாடல்கள் கிடைத்திருப்பது நமது பாக்கியம் அல்லவா!!

இதோடு முடியவில்லை அவன் கண்ணழகை இன்னமும் வியக்கிறாள் ஆண்டாள். கிங்கிணியும் தாமரையும் நம்கைகளில் ஏந்தி பார்க்கக்கூடியவை. குட்டி குதூகலம் அவை. ஆனால் கண்ணனின் கண்பார்வை நம்மேல் பட்டாலோ நம் பாபங்களெல்லாம் போகும் அல்லவா! அவ்வளவு பெருமைவாய்ந்தவை அல்லவா அவன் கண்கள். அக்கண்களின் பெருமையை நினைக்கும் போது ஆண்டாளுக்கு மிகப்பெரிய விஷயங்களான சூரியனும் சந்திரனும் நினைவிற்கு வருகின்றன, ஒருகண் திங்களைப் போல் தண்ணளி தரும் அதேநேரத்தில் மறுகண் சூரியனைப் போல் உயிர்களைக் காக்கும் வெப்பத்தையும் அல்லவா தருகின்றது! அதனால் தான்

திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

என்று பாடுகிறாள். செயற்கையானதோ இயற்கையானதோ, சிறியதோ பெரியதோ, அனைத்திலும் அவனையேக் காண்பது தானே ஆண்டாளின் அன்பு. அந்த அன்பால் நம்மையுமல்லவா கண்ணனிடம் கொண்டு சேர்க்கிறாள் ஆண்டாள்.

Monday, 20 March 2023

கும்பகர்ண தூக்கம்

கும்பகர்ண தூக்கம்



நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

பொழுது புலர ஆரம்பித்து விட்டது. ஆயர் பெண்களும் ஆண்களும் தத்தம் கடமையைச் செய்யத் துவங்கிவிட்டனர். பாவை நோன்பிற்காக செல்வோரின் தலையில் பனி பெய்து கொண்டிருக்கிறது. அதை பொருட்படுத்தாமல் தோழியின் முற்றத்தில் நின்று எழுப்புகிறார்கள். இதற்கு பிறகும் உறங்கிக்கொண்டே இருக்கும் பெண்களிடம் ஆண்டாள் சற்று கேலியாக பேசத் துவங்குகிறாள்

எங்களுக்கெல்லாம் நோன்பிருந்து வழிகாட்டுவதாக கூறிய நீ இன்னும் எழுந்திருக்காமல் உறங்குகிறாயே? கதவைத் திறக்கவில்லை என்றாலும், மறுமொழியாவது பேசக்கூடாதா! முன்பு இராமனால் வதைக்கப்பட்ட கும்பகர்ணன் தன் பெருந்துயிலை உன்னிடம் தந்துவிட்டுச் சென்றானோ என கேட்கிறாள். அதுவும் கும்பகர்ணன் போட்டியில் இவளிடம் தோற்று தன் பெருந்துயிலை இவளுக்குத் தந்துவிட்டானாம். தூக்கத்தில் கும்பகர்ணனையே வென்றவள் என்று கேலி பேசுகிறாள். அதிக நேரம் தூங்குபவர்களை கும்பகர்ணன் என்று இன்றும் சொல்கிறோம் அல்லவா? இந்த கேலி பேச்சை ஆண்டாள் அன்றே கூறியிருக்கிறாள்.

கும்பகர்ணன் தனது தவ வலிமையால் நித்தியத்துவம், மரணமில்லாவாழ்வை பெற விரும்புகிறான். ஆனால் சரஸ்வதி அவன் நாவை பிரளச் செய்ய நித்திரைத்துவத்தை, நீண்ட தூக்கத்தை வரமாக பெறுகிறான். அதனால் அவன் ஆறு மாதம் தூங்குவான் ஆறு மாதம் விழித்திருப்பான். அதனால் அவனது உறக்கம் பெருந்துயில்.

மனிதராகிய நாமும் கிட்டத்தட்ட வாழ்நாளில் பாதியை தூக்கத்தில் தானே கழிக்கிறோம். அதனால் தானே தொண்டரடி பொடியாழ்வாரும்

"வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்
பாதியு முறங்கிப் போகும் ……..."

எனவே எனக்கு மனிதப்பிறவி வேண்டாம் என்கிறார். என்றாலும் நமது உறக்கம் என்பது பெருந்துயில் அல்லவே! இவள் வெகுநேரம் உறங்குகிறாள். எனவே இவளது பேருறக்கம் கும்பகர்ணன் தந்துச் சென்றதுதானோ!

இப்பாடலில் கண்ணனை, நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியன் என்கிறாள். பெருமாளுடைய கிரீடம் மிகுந்த மதிப்பு வாய்ந்தது. நவரத்தினங்களும் அரிய மணிகளும் பதிக்கப்பட்டு இருக்கும். என்றாலும் எளிமையான வாசனை மிக்க துளசியை தன் தலையில் சூடிக் கொள்ளவதைத்தான் விரும்புவானாம் கண்ணன். இறைவன் எளிமையானவன். அவன் நாமம் சொல்லி போற்றினாலே நமக்கருளும் புண்ணியன் அவன்.

Saturday, 18 March 2023

மாமன் மகளே! மாமீர்

மாமன் மகளே! மாமீர்

ஆயர் பாடி அவளது சொந்த ஊர் என காட்ட எண்ணிய ஆண்டாள் மாமன் மகள் என்றும் மாமீர் என்றும் அழைத்தாளல்லவா!! அவள் எழவில்லை.

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

கிழக்கு வெளுத்து சிறிது வெளிச்சம் தெரிகிறது! அதுமட்டுமல்ல அத் தோழியின் மாடத்தில் சுற்றும் விளக்கெரிகிறது. அவ்விளக்கு தனக்குத் தானே சுற்றிக் கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டதாக தோன்றுகிறது. மாடத்தைச் சுற்றி விளக்கெரிவதாகக் கொண்டால் பல விளக்குகள் என்று தானே இருக்கவேண்டும். தூங்கும் போது பலவிளக்குகள் ஏற்றியிருக்காதல்லவா? இங்கும் ‘விளக்கெரிய’ என்று தானே வருகிறது. அதனால் இன்று உள்ளது போல் பலவித விளக்குகள் அன்றும் இருந்திருக்கலாம் என வைத்துக் கொள்ளலாம். இரவில் சிறிய விளக்கேற்றி வைப்பது பண்டைய பண்பாடு. இன்றும் சிலரிடம் இப்பழக்கம் இருக்கிறது.

விளக்கு வெளிச்சத்தில் அவள் படுத்திருப்பது இவர்களுக்குத் தெரிகிறது. அம்மாடம் நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட மாடம். இருள் அகலா காலையில் அம்மாணிக்கங்கள் ஒளிவீசுகின்றன. மாடத்தின் கதவுகளும் மணிகள் பதிக்கப்பட்டுள்ளது. இவளும் மிகுந்த செல்வச் சிறுமியாய் இருக்கிறாள் என்பது தெரிகிறது. இப்படி இருள் அகல காத்திருக்கும் அதிகாலை பொழுதை கண்முன் காட்டுகிறாள் ஆண்டாள்.

இவள் இன்னும் எழுந்திருக்கவில்லை. ஆனால் இவள் தாய் எழுந்து விட்டாள் போலும். மாமீர் உம்மகளை எழுப்பீரோ? என்று கேட்கிறாள் ஆண்டாள். மாமீர் உம்மகள் என்ன ஊமையோ, பதிலிருக்காமலிருக்கிறாளே! அல்லது நம் வார்த்தைகள் அவள் காதில் விழவில்லையோ, அவள் செவிடோ! மயக்கத்தில் இருக்கிறாளோ அல்லது மந்திரத்தால் பெருந்தூக்கத்தில் கட்டுண்டாளோ! மாமீர் அவளை எழுப்பீரோ எங்கிறாள்.

நாமும் நமக்கு நல்வழி காட்டும் ஆச்சார்யர்களின் சிந்தனைகளை செவி மடுக்காது, அவர்கள் காட்டும் வழி செல்லாது, உலக இன்பத்தில் கட்டுண்டு கிடக்கிறோம். என்பதே இங்கு காட்டப்படுகிறது.

இப்பாடல்களில் பொழுது புலர்வதின் அடையாளமாக பறவைகள் ஒலிக்கின்றன. அடர்ந்த இருள் மெல்ல மெல்ல விலக வெளிச்சம் பரவுகிறது. இருள் இன்னும் முழுமையாக அகல வில்லை என்றாலும் ஒளி பரவ துவங்குகிறதாக காட்டுகிறாள். நம் மனத்தில் அறியாமை இருள் படர்ந்து இருக்கிறது. ஆச்சாரியர்களின் உபதேசத்தை நாம் கேட்கத் துவங்க, பொழுது புலர்வதைப்போல் மனம் தெளிவடையத் துவங்குகிறது. ஹரி நாமம் சொல்லி, அன்றாட கடமைகளைச் செய்து வந்தாலே அவ்விருள் முழுமையாய் விலகும் படி நம்முள் ஞான வெளிச்சம் பரவும் என்பதே இங்கு சொல்லப்படுகிறது.

Thursday, 16 March 2023

கீழ்வானம் வெள்ளென்று

கீழ்வானம் வெள்ளென்று

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

‘மா’வாய் பிளந்தான், குதிரை வடிவில் வந்த அசுரனை அவன் வாயைப்பிளந்து அழித்தான் அதனால் ‘மா’ வாய் பிளந்தான்.

கிருஷ்ண அவதாரமே கம்சனை அழிக்கத் தானே! என்றாலும்

வஸுதேவ ஸுதம் தேவம்-
கம்ச சாணூர மர்த்தனம்-
தேவகி பரமானந்தம்
க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.

என்று சாணூரன் என்ற மல்லனை அழித்ததையுமல்லவா சேர்த்து சொகிறார்கள். அவ்வளவு வலிமை வாய்ந்தவர்கள் சாணூரன் மற்றும் முஷ்டிகன் என்ற மல்லர்கள். இவர்கள் கம்சனின் தனி பாதுகாவலர்கள். இன்றைய கருப்பு பூனை, சிறப்பு பாதுகாப்பு படை என்றெல்லம் சொல்கிறோமே! அப்படிப் பட்டவர்கள். ஆனால் குழந்தை கண்ணனும் பலராமனும் இவர்களை மல்யுத்தத்தில் அழிக்கிறார்கள். அதனால் அவன் மல்லரை மாட்டிய தேவாதி தேவன். அவன் அறிவால் அறிய இயலாத மாயன். அவனை மாமாயன், மாதவன், வைகுந்தன் என்று நாமங்களைச் சொல்லி வணங்குவோம், நமக்கு வேண்டியதை அவனே ஆராய்ந்து தருவான் என்றழைக்கிறாள்.

இறைவனிடம் நாம் கேட்போமேயானால் நமக்குத் தெரிந்ததைத் தான் கேட்போம். ஆனால் அவனாக அருள்வானேயாகில் அது சிறந்ததாக இருக்குமல்லவா!

அடுத்து

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்

இங்கு புள்ளின் வாய் கீண்டான். கொக்கு வடிவத்தில் வந்த அசுரனை அவன் வாயைப்பிளந்து கொன்றான். அதனால் புள்ளின் வாய் கீண்டான்.

இங்கு பொல்லா அரக்கன் என்பது யாரை குறிக்கிறது. கம்சனையா? இல்லை. கம்சனை கிள்ளிக் களைய வில்லை கண்ணன். பின் யாரைக் குறிக்கிறது? பொல்லா அரக்கன் யார்? நல்ல அரக்கர்கள் இருக்கிறார்களா?

இங்கு இராமாவதாரம் பேசப்படுகிறது. இந்த பொல்லா அரக்கன் இராவணனே! ஏன்னென்றால் கம்சனோ அல்லது இரண்யனோ ‘தான்’ என்ற அகங்காரம் கொண்டவர்கள். அதனால் அழிந்தவர்கள். ஆனால் இராவணனோ பிறன் மனை கவர்ந்தவன். என்வே அவன் பொல்லா அரக்கனானான். கிள்ளி களைதல் என்பது, ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டால், உயிர் பிழைக்கச்செய்ய பாதிக்கப்பட்ட உறுப்பை களைவதில்லையா? ஒரு செடியில் அழுகிய இலையை கிள்ளி எறிந்து அச்செடியை காப்பதில்லையா? அவ்வாறே அறம் காக்க கிள்ளிக் களையப்படவேண்டியவன் இராவணன் என்பதால் அவன் பத்துத் தலைகளையும் களைந்து அழித்தான் இராமன்.

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்

அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை என்று வள்ளுவரும் கூறவில்லையா? எனவே இங்கு இராவண்னே குறிக்கப்படுகின்றான் என கொள்ளலாம்.

பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தவனின் கீர்த்திகளை பாடி மற்றப் பிள்ளைகள் எல்லாரும் பாவை களம் சென்றுவிட்டனர் என்கிறாள் ஆண்டாள். மீண்டும் மீண்டும் திருப்பாவையின் அடி நாதமான நாமார்ச்சனை இங்கு வலியுறுத்தப்படுகிறது.

முந்தைய பாடல்களில் பறவைகள் ஒலிக்க, முனிவரும் யோகியரும் ‘ஹரி’ நாமம் சொல்ல, பெண்கள் தம் அணிகுலுங்க தயிர் கடைய ஆயர்பாடியில் அழகான காலைப் பொழுது புலர்வதைப் பார்த்தோம். இப்பொழுது அங்கு கீழ் வானம் சற்று வெளுத்து விட்டது.

சாதாரணமாக உதய காலத்தில் வானம் ‘செவ்வாடை’ அல்லவா கட்டிக் கொள்ளும்? ஆனால் கதிரவன் தன் கரம் நீட்டாத காலைப் பொழுது இது. விடியலுக்கு முன் கீழ் வானம் வெளுத்திருக்கும் நேரமிது.

அப்படி மெல்லிய வெளிச்சம் பரவியதால் அடர்ந்த இருள் சற்று நீர்த்துப் போனது போல் இருக்கிறது. செடியோடும் மரத்தோடும் இருள் இணைந்திருக்க பரந்த வெளியில் வெளிச்சம் பரவியிருக்கிறது.

பனிப்பெய்யும் சில்லென்ற அக்காலைப் பொழுதில், சிறுவீடு மேய எருமைகளை அவிழ்த்து விடுகிறார்கள் ஆயர்கள். அவை புல்வெளி எங்கும் பரந்து நின்று அங்கொன்றும் இங்கொன்றுமாக பசும்புல் மேய்கின்றன.

எருமைகளும் இருள் நிறத்தின அல்லவா! அவை பரந்து அங்குகொன்றும் இங்கொன்றுமாக மேய்வது, அங்குமிங்குமாக இருள் குவியல் குவியலாக கவிழ்ந்து இருப்பதை ஒத்ததாக இருக்கிறது என்று எருமைகள் சிறுவீடு மேயப்புகும் அச்சிறுப் பொழுதை ஆண்டாள் தன் பாடலில் அழகாகக் காட்டியிருப்பாள்.

நகரில் வாழும் நாம் இவ்வழகை அனுபவிக்க முடிவதில்லை. இரவை பகலாக்கும் விளக்கு வெளிச்சம் இயற்கையை இருட்டடிப்பு செய்து விடுகிறது. ஆண்டள் பாடலில் அதை அனுபவிக்கலாம்.

சிறுவர்கள் படிக்கும் போது, நுனிப்புல் மேயாதே, ஆழ்ந்து படி என சொல்வது வழக்கமில்லையா. நுனிப்புல் மேய்வதுதான் சிறுவீடு மேய்தல். இரவு முழுதும் தொழுவத்தில் கட்டப்பட்ட மாடுகளை, பால் கறப்பதற்கு முன் வீட்டின் அருகிலுள்ள புல் வெளிகளில் மேய விடுவார்கள். அவை பனித்துளி படர்ந்த பசும் புற்களை மேயும். அதிக நேரம் விடமாட்டார்கள் இது அவ்வெருமை மாடுகளுக்கு சிற்றுண்டி போல். இப்படி சிறிய மேய்ச்சலுக்குப் பிறகு அவை அதிக பால் கொடுக்குமாம்.

பால் கறந்து கன்றுகளுக்கும் காட்டிய பிறகு மதிய நேரத்தில் தான் மேய்ச்சல் காட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். அங்கு கண்ணனின் குழலோசையுடன் அவை அதிக நேரம் மேயும். அது அவைகளுக்கு மதிய உணவு என்று வைத்துக் கொள்ளலாம்.

இங்கு எருமை மாடுகள் தான் சிறுவீடு மேய கிளம்பியிருக்கின்றன. பசுக்கள் மென்மையானவை. அக்காலைக் கடுங்குளிரை தாங்க இயலாதவை.

எருமைகள் சற்று கடினமான தோல் கொண்டவை. நமக்குத் தெரியாதா. எவ்வளவு முறை எருமைமாடு என்று திட்டியருப்போம் அல்லது திட்டு வாங்கியிருப்போம்.

ஆனால் இனி எருமை என்று திட்டுவாங்கினாலும் மிகவும் மகிழலாம். ஆண்டாள் வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் (பாடல் 3), மாற்றாதே பால் சொறியும் வள்ளற் பெரும் பசுக்கள் (பாடல் 21) என்று பசுக்களை செழிப்பான வள்ளல்களாக அடையாளம் காட்டினாளல்லவா? அதைவிட கூடுதலான சிறப்புடன் இவ்வெருமை மாடுகளை நமக்கு அடையாளம் காட்டுகிறாள். 12ஆவது பாடலில்

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும்

என்று காட்டுகிறாள். இவ்வெருமை மாடுகள் கன்றுகளை நினைத்த மாத்திரத்திலேயே அதன் முலைகளில் பால் வழியுமாம். அவ்வளவு தாய் பாசம் எருமைகளுக்கு.

சில வருடங்களுக்கு முன் கூட நம் நகரில் பசுக்களை இல்லத்திற்கு அழைத்து வந்து பால் கறந்து தருபவர் இருந்தனர். ஒரு வேளை அப்பசுவின் கன்று இறந்துவிட்டால் அவர் ஒரு வைக்கோல் அடைத்த கன்றை மாட்டின் முன் கட்டிவிட்டு பால் கறப்பார். பசுக்கள் கன்றை பார்த்தால் தான் கறக்கும். ஆண்டாள் கூட 11ஆம் பாடலில் ‘கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து’ என்று தானே சொல்கிறாள். ஆனால் எருமைகளோ கன்றை நினைத்த மாத்திரத்திலேயே பால் சொறியும். அதனால் தான் எருமைகளை ‘நினைத்து முலைவழியே நின்றுபால் சோர’ என்று காட்டியிருக்கிறாள்.

கம்பனும் பாலகாண்டத்தில் கோசல நாட்டின் அருமை கூறும் போது ‘மேதி கன்று உள்ளிக், கனைப்பச் சோர்ந்த பால்’ என்று கன்று என்று நினைத்த மாத்திரத்திலேயே பால் சுரந்ததாக எருமையைக் காட்டுகிறார். மேதி என்பது எருமையைக் குறிக்கும்.

பெரியாழ்வார் பெற்ற பெண்தானே இவள். இவ்வளவு நுனுக்கமாக பசுக்களையும் எருமைகளையும் அறிந்து வைத்திருக்கிறாளே! என்று ஆச்சரியப்படாதிருக்க முடியாது. இப்பாடல் திருப்பாவையில் ஆண்டாள் ஆய்குலப் பெண்ணாகவே வாழ்ந்தாள் என்பதற்கான அருமையான அடையாளம். அது மட்டுமல்ல அடுத்த பாடலில் மாமன் மகளே! மாமீர்! என்றழைத்து ஆயர்பாடியில் ஒரு சொந்தத்தை உண்டாக்கிக் கொள்கிறாள் ஆண்டாள்.

இதோ இம்மாமன் மகளுக்கு காலை எப்படி புலர்கிறது என்பதை காட்டுகிறாள் ஆண்டாள். பார்ப்போமே!

Monday, 13 March 2023

பிள்ளாய் எழுந்திராய்

பிள்ளாய் எழுந்திராய்

ஆண்டாள் உள்ளே உறக்கிக்கொண்டிருக்கும் தோழியை வாசலில் நின்று எழுப்புகிறாள். முதல் தோழி, இவள் சற்று குழந்தைத் தனம் கொண்டவள் போலும், பிள்ளாய் எழுந்திராய்! என்று எழுப்புகிறாள். கண்ணனைக் குழந்தையாக இரசிப்பதில் மகிழ்பவள் அதனால் தான் அவளிடம் பூதகியைப்பற்றியும் கள்ளத்தனத்துடன் வந்த சகடனைப் பற்றியும் பேசுகிறாள். குழந்தை கண்ணனுக்கு மீண்டும் சங்கடம் வந்துவிட்டதோ என உடனே எழுவாளாம் அவள்.

வீட்டில் சிறுவர்களை எழுப்பும் போது, முதலில் நிதானமாக எழுந்திரு என்போம். சற்று நேரம் கழித்து நேரமாகி விட்டதே, இன்னும் எழவில்லையா என கேட்போம். அப்பொழுதும் எழவில்லை என்றால் இதோ ஆசிரியர் வந்துவிட்டார் என்றோ அப்பா வந்துவிட்டார் என்றோ, அப்பிள்ளையை சற்று பயமுறுத்துவோம் அல்லது அக்குழந்தைக்கு பிடித்த ஒன்றை சொல்லி எழுப்புவோம் அல்லவா.

இந்த முறையைத் தான் ஆண்டாள் கையாளுகிறாள். பிள்ளாய் எழுந்திராய் என்று கூப்பிட்டும் அவளிடமிருந்து பதில் இல்லை. பறவைகள் ஒலிக்கின்றன, சங்கோசை கேட்கிறதே இன்னும் எழவில்லையா ஏன கேட்கிறாள். பதில் இல்லை. பேய் முலை நஞ்சுண்டு, கள்ள சகடனை காலால் அழித்து, வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்தில் கொண்ட முனிவரும் யோகிகளும் ஹரி எங்கிறார்களே! அவ்வோசை உள்ளத்தில் புகுந்து குளிர்விக்க வில்லையா எங்கிறாள். கண்ணன் லிலைகளைக் கேட்டதும், உள்ளத்தில் அவனை கொண்டவளாதலால் அவன் நாமம் கேட்க உடனே எழுந்து விடுகிறாள்.

இங்கு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி என்பது சகடாசுரனை அழித்ததை மட்டுமல்லாமல் புணரபி ஜனனம் புணரபி மரணம் என்னும் நமது பிறவி சக்கரத்தை தனது திருவடி நிழல் தந்து இல்லாதாக்குவான் என்பதையும் குறிப்பதாக உள்ளது.

அடுத்தப் பாடலில் தோழியை பேய்ப் பெண்ணே என்றழைக்கிறாள். பேய்த் தனம் என்று நாம் எதைச் சொல்லுவோம். ஏதாவது ஒரு விஷயத்தில் மிகவும் தீவிரமாக இருந்தால், உனக்கென்ன பேயா பிடிச்சிருக்கு இப்படி நடந்து கொள்கிறாயே என்போம். அதீதமான நிலையது. இந்த தோழி, இறை பக்தியில் பேய்த்தனம் கொண்டவள். கண்ணனைப் பற்றி பேசுவதிலே அதீதமான ஈடுபாடு கொண்டவள் என்பதால் பேய்ப்பெண்ணே என்கிறாள். முனிவரும் யோகியரும் பேசுவதை நினைவு படுத்தினாலே எழுந்துவிடுவாள் என்பது ஆண்டாளுக்கு தெரியுமல்லவா?

அதுமட்டுமல்ல பொழுது புலர்ந்து விட்டது, ஆயர்பெண்கள் தமது அன்றாட வேலைகளை துவங்கி விட்டனர். இனி அவள் தூங்க இயலாது. தூக்கம் கலைந்தும் இன்னும் அவள் படுக்கையில் கிடக்கிறாள். அதனால் தான் நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ என்கிறாள்

இப்பெண்ணை ஆண்டாள் இன்னும் இரண்டு விதமாக அழைக்கிறாள். நாயக பெண்பிள்ளாய், தேசமுடையாய். இவள் தலைமை ஏற்கும் பண்புள்ளவள். இவள் பக்தியில் சிறந்தவள். வழிகாட்ட நல்லதுணை என்பதால் நாயக பெண்பிள்ளாய் என்று கூறுகிறாள். அதுமட்டுமல்ல அவள் ஞானத்திலே சிறந்தவள். ஞான ஒளி அவள் உள்ளத்தில் வீசுவதால் அவள் தேசமுடையாள் என்கிறாள்.

அடுத்தப்பாடலில் கோதுகலமுடைய பெண்ணே! என்றழைக்கிறாள். கோதுகலம் என்பதைத்தான் குதூகலம் என்று இப்பொழுது சொல்கிறோம். அப்படி மிகுந்த உற்சாகத்துடன் இருப்பவள் இவள். முந்தைய பாசுரத்தில் கண்ணனைப் பற்றி பேசினாலே உற்சாகம் கொண்டவளாய் எழுந்தாளல்லவா ஒரு தோழி. இவள் அவளையும் மிஞ்சி குதூகலமுடையவளாகிறாள்.

அன்பு கொண்டவர்கள் பற்றிய நினைப்பே உற்சாகம் தரும். அப்படி இருக்கையில் அவர்களை நேரில் காணப்போகிறோம் என்றால் மிகுந்த உற்சாகமாயிருக்குமல்லவா. அதுதான் குதூகலம். இவள் மிகுந்த பக்தியின் காரணமாக கிருஷ்ணானுபவத்தில் திளைப்பவள். கண்ணனும் இவளிடத்தில் அன்பை பொழிகிறான் என்பதால் இவள் குதூகலத்தில் இருக்கிறாள் எனலாம். அப்படிப்பட்டவளை அழைத்துக் கொண்டு சென்றால் கண்ணன் நமக்கும் அருள்வானல்லவா!

எனவே, கோதுகலமுடைய பெண்ணே! உன்னை அழைத்துக் கொண்டுச் செல்ல வேண்டும் என்பதாற்காக, பாவை களத்திற்கு செல்கின்ற மற்ற பெண்களையும் போகாமல் நிறுத்தி உன்னை வந்து அழைக்து நிற்கிறோம். எழுந்திரு.

அடுத்த பாடல்களில் தோழிகள் எல்லோரும் வந்து உன் முற்றத்தில் நின்று முகில் வண்ணன் பேரை பாடவும் நீ அசையாமலும் பேசாமலும் இருக்கிறாயே. இப்படியுமா உறங்க முடியும். பனி எம் தலையில் பெய்தாலும் பொருட்படுத்தாமல் உன் வாசலில் வந்து நிற்கிறோம். நம் மனத்திற்கினியானை பாட நீ வாயைக்கூட திறக்க மாட்டேன் என்கிறாயே. இனிமேலும் பொறுக்க மாட்டோம், எழுந்துவிடு. அப்படி என்ன அவ்வளவு பெருந்தூக்கம். அனைத்து இல்லத்தவரும் எழுந்து விட்டனர். இனியாவது எழுந்திரு என அழைக்கிறாள்.

இவ்வளவுக் கூறியும் எழவில்லை என்றால் அது துயில் அல்ல. அது பொய்த் தூக்கம், படுக்கையில் கிடக்கிறாள். துயிலவில்லை. எனவே உன் கள்ளத்தை தவிர்த்து எழு, எங்களை முன்னம் எழுப்புவதாய் வாய்மட்டும் பேசுபவளே, வெட்கமில்லாதவளே எழு என்று சொல்கிறாள்.

பிள்ளாய் எழுந்திராய் என்று துவங்கியவள் நாணாதவளே, வெறும் வாய்ப்பேச்சு பேசுபவளே, உன் கள்ள தூக்கத்தை ஒழித்து எழு என்று கடிந்தவாறு எழுப்புகிறாள். இது இயல்பு தானே!

இருந்தாலும் இப்பெண் இறை பக்தியில் சிறந்தவள். அதனால்தான் அருங்கலமே என்றழைக்கிறாள். நல்ல பாத்திரமாக இருந்தால் தானே பாலை பெற முடியும். இவள் மிகச் சிறந்த பக்தியுடையவள், இறையருள் பெற உகந்தவள் என்பதே ஆண்டாள் இங்கு காட்டுவது.

இங்கு எழுப்பப்படுவது நமது மனம். இறைவன்பால் அதைக் கொண்டு செல்லவேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. மனதில் உறுதி வேண்டும், வைராக்கியம் வேண்டும். மனம் உலக இன்பங்களில் கட்டுண்டு எழ மறுக்கும். அதை எள்ளி நகையாடித் தான் மாற்ற வேண்டும். இதைத்தான் இப்பாடல்கள் உணர்த்துகின்றன. இறைவனை அடைவதே வாழ்வின் பயன் என்பதை அறியா சிறு பிள்ளையாய் இருக்கிறாயே, பிள்ளாய் எழுந்திராய், உண்மையை உணர்ந்தாலும் சாக்கு போக்கு சொல்லி காலம் தாழ்த்துகிறாயே உன் கள்ளத்தனம் விடுத்து எழு என்பதாக அமைகிறது பாடல்.

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

இங்கு குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே! என்றழைக்கிறாள். அரிது அரிது மானிடராதல் அரிதல்லவா? அப்படி மானிடராய் பிறந்து, குற்றங்கள் இல்லா மனத்தினராய் இறைவனை நினைத்தல் சிறப்பானது.

புன மயிலே! இவ்வார்த்தையை கம்பனும் எடுத்தாளுகிறான். ஆரண்ய காண்டத்தில் இராவணன் சீதையைக் காணும் காட்சியில் சீதை வனத்தில் உலவும் மயிலைப் போல் இருந்தாள் என்கிறார்.

அஃதாவது வனம் தான் மயிலுக்கு இயற்கையான வாழ்விடம். அங்கு தான் மிகுந்த அழகுடன் அது மிளிரும். ஆனால் கானகம் சீதையின் இடமல்ல என்றாலும் இராமனுடன் இருந்தாளல்லவா! இராமன் இருக்கும் இடம் அவளுக்கு அயோத்தியல்லவா, அதனால் இயல்பாக, வன மயிலின் சாயலுடன் அழகாக இருந்தாள்.

கண்ணனின் ஆயர்பாடியில் வாழும் இப்பெண்ணும் தனது உண்மையான தேஜஸுடன் விளங்குகிறாள். அதனால் தான் புன மயிலே என்கிறாள். இப்படி ஆண்டாள் தன் தோழிகளை அழைக்கும் விதம் அறிந்துணரத்தக்கது.

இப்பெண்கள் ஆச்சாரியர்களைக் குறிக்கிறனர். ஞானத்தில் திளைப்பவராகிய ஆச்சாரியர் துணையுடன் அவனை அடைதல் வேண்டும் என்பதே கருத்து.

அதுமட்டுமல்ல துயிலெடையின் முதல் பாடல் ஆண்டாளின் ஆச்சாரியரான பெரியாழ்வாரைக் குறிப்பதாக சொல்வதுவும் உண்டு. அவர் மிகுந்த குழந்தை உள்ளம் கொண்டவர். பிள்ளைத்தமிழ் என்ற இலக்கியம் வடிவு பெறாத அக்காலத்தில் இறைவன் மேல் கொண்ட பக்தியின் மிகுதியால் அவனுக்கு கண்ணேறு கழித்தவர் இவர். அவனை தாலாட்டி சீராட்டி, விளையாட்டி, நீராட்டி பாடல்கள் இயற்றியவர். இதனால் இப்பாடல் அவரை அணுகி வழிகாட்ட வேண்டுவதாய் அமைந்திருப்பதாகவும் சொல்வர்.

பாவையின் ஏழாம் பாடல் பேய்யாழ்வார் மற்றும் குலசேகராழ்வாரைக் குறிப்பதாகச் சொல்வர். பாடலின் சொற்களைக் கொண்டே அப்பாடல் எந்த ஆழ்வாரைக் குறிக்கிறது என்பதைக் காட்டுவார்கள். இப்படி பத்து துயிலெடை பாடல்களும் எந்த எந்த ஆழ்வார்களை குறிக்கிறது என்பதில் பல கருத்துகள் உண்டு என்றாலும் ஒவ்வொன்றும் திருப்பாவையின் சொல், பொருள் நயத்தை நமக்கு காட்டுவதாகவே உள்ளது.

Sunday, 12 March 2023

பாவை’ பாடலில் ஓசை நயம்

பாவை’ பாடலில் ஓசை நயம்


கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

இப்பொழுது சற்று புலர்ந்து விடுகிறது. இருள் சற்று பழகிவிடுகிறது. அதனால் வெளியில் இருப்பவர்களுக்கு. ஆனைசாத்தன் தான் பேசுகிறது என்று தெரிந்து விட்டது பறவைகள் ஒலி எழுப்பும். பேசுமா? அதுவும் ஒன்றுடன் ஒன்று கலந்து பேசுமா? பேசுகின்றன. கீசு கீசு என்று பேசுகின்றன.

இங்கு பறவைகள் என்பது முன்பாடலில் சொன்ன முனிவர்களையும் யோகிகளையும் குறிப்பதாக வைத்துக் கொள்ளலாம். இவர்கள் வேதங்களும், மந்திரங்களும் சொல்லும் விஷயங்களையெல்லாம் தங்களுக்குள் கலந்து பேசி ஐயங்களை தீர்த்துக் கொள்வதும் அனுபவிப்பதுமாக இருக்கிறார்கள். இதுவே இங்கு பறவைகள் கலந்து பேசுவதாக இருக்கிறது.

கண்ணனைப் பற்றி அவர்கள் பேசுவதை கேட்பதே நமக்கு மிகுந்த இன்பம் தரக்கூடியதல்லவா? இந்த பேச்சுக்கூடவா உனக்கு கேட்க வில்லை பேய்ப் பெண்ணே! என்றழைக்கிறாள்.

இன்னும் பதிலில்லை. மற்றொரு நிகழ்வையும் அவளுக்கு உரைத்து எழுந்திருக்க மாட்டாளா என பார்க்கிறாள் ஆண்டாள்.

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

காசு, பிறப்பு என்பன ஆயர்குல மகளிர் அணியும் அணிகலன். காசு என்பது வட்டமாக இருப்பது. காசு மாலை என்பதில்லையா. வட்டமான தகடுகளை இணைத்து செய்யும் அணிகலன் இன்றும் பழக்கத்திலுள்ளது. பிறப்பு என்பது மணி போல் இருக்கும் தாலி. அதன் துளை வழியே இணைத்து கட்டிக் கொள்வார்கள். இவை ஒன்றுடன் ஒன்று உராய்ந்து கலகலவென ஓசை எழுப்புகின்றன. ஏன் தெரியுமா? அப்பெண்கள் தங்கள் கைகளை அசைத்து அசைத்து கடைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆயர்பாடியில் வெண்ணை கடையும் பானை மிகப் பெரியது. வள்ளல் பெரும் பசுக்கள் குடங்கள் நிறைய கொடுத்திருக்கின்றன அல்லவா? அதனால் பெரிய பானைகளில் தயிர் கடைவார்கள். மத்தும் சிறியதாக இருக்குமா. பெரியது, அதனால் ஒரு பெண்ணால் கடைய இயலாது. அதனால் குடத்தை நடுவில் வைத்து இருபெண்கள் இருபுறமும் நின்று கொண்டு மத்தில் கயிறுகளை பிணைத்து பிடித்துக் கொண்டு, முன்னும் பின்னுமாக கைகளை அசைத்து தயிர்கடைகிறார்கள். அதனால் அவர்கள் அணிந்துள்ள அணிகலங்கள் எல்லாம் கலகலக்கின்றன. அதனுடன் அம்மத்து முன்னும் பின்னும் உருள்வதால் எழுந்த மத்தின் ஓசையும் கேட்கிறது. அதுமட்டுமா அவர்கள் கடையும் தயிர் இருக்கிறதே, அதுவும் மிகவும் கெட்டியானது அதை மத்தால் உடைத்து சிலுப்ப தயிர் உடையும் ஓசையும் கேட்கிறது. இந்த ஒலிகளெல்லாம் நீ கேட்டிலையோ? என கேட்கிறாள் ஆண்டாள்

அதன் கூடவே, இப்படி கெட்டியான தயிரைக்கடையும் ஆய்ச்சியரின் கூந்தல் மணமும் வீடெங்கும் வீசுகிறது.

காலையில் எவ்வளவு எழுப்பினாலும் சினுங்கிக் கொண்டே தூங்கும் கணவன் கூட காபி வாசம் வந்ததும் எழுந்துவிடுவார் தெரியுமா? ஆழ்ந்த தூக்கத்தில் வாசம் தெரியாது. ஆனால் சற்று புலர்ந்தும் புலர்ந்த நேரத்தில், சுற்றி ஒலிகள் கேட்டாலும், கண்கள் திறக்காமல், தூங்கியும் தூங்காத நிலையில், நம்மால் வாசத்தை உணரமுடியுமல்லவா? அதனால் தான் ஆயர் பெண்களின் கூந்தல் மணம் பரவியிருக்கிறதே! உன்னை அது எழுப்பவில்லையா எனக் கேட்கிறாள்.

தயிர் கடைந்து வெண்ணை எடுப்பதற்கு புலர்ந்தும் புலராத அதிகாலை நேரம் தான் உகந்தது. இவ்வளவு நேரம் வெளியில் கேட்ட ஒலிகளைச் சொல்லிவந்தவள் இப்பொழுது வீட்டினுள் கேட்கும் ஒலிகளைச் சொல்கிறாள்.

முதலில் எங்கோ பறவை சிலம்பியது. பின் அருகே ஆனைசாத்தன் பேசியது பிறகு பெண்களின் அணிகலன் ஓசை கலகலக்கிறது. இன்னும் சன்னமான ஒலியான மத்தோசையும் கேட்கிறது. அதற்கும் மேலாக மிகச் சன்னமான தயிரரவம் கேட்கிறது. இப்பெண்களின் கூந்தல் வாசம் வேறு வீசுகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக கேசவனை இவர்கள் பாடவும், அப்பாட்டோசையும் கேட்கிறதே. அதை கேட்டவாறே படுத்துக்கிடக்கிறாயோ! எனக் கேட்கிறாள். முன் பாசுரத்தில் ஹரி என்று சொல்லும் ஒலி கேட்டு உன் உள்ளம் குளிரவில்லையா? என்று கேட்டவள் இப்பாசுரத்தில் கேசவனை நாங்கள் பாடுகின்றோமே! அதைக் கேட்டும் நீ படுத்தேக் கிடக்கிறாயே! உன் பொய் தூக்கத்தை கலைத்து எழுந்திரு எங்கிறாள்.

திருவெம்பாவையிலும் இப்படித்தான் கோழியும் குருகும் சிலம்புகின்றன. வெண்சங்கும் இயம்புகிறது. கேழில் விழுப் பொருளை இவர்களும் பாடிக்களிக்கிறார்கள்.

கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?

என்னே ஒரு அழகு! இறைவனை நினைக்கின்ற பொழுது இயற்கை அழகு இவர்கள் முன்னே விரிவது எவ்வளவு பொருத்தம். அதிகாலைப் பொழுதின் அழகை நம்மையும் உணரவைத்து விடுகிறார்களல்லவா!

தமிழ் இலக்கியங்களின் தாக்கம் கண்ணதாசனிடம் மிகுந்து இருந்ததை அவரது திரைப் பாடல்களில் கூட நாம் அதிகம் கேட்டிருப்போம். இந்த ஓசை நயம் இருக்கிறதே, இது கண்ணதாசனை வெகுவாக ஈர்த்திருக்கிறது அவரது ‘தைப்பாவை’ என்ற இலக்கியத்தில் ஒரு அழகான பாடல்

காளை மணியோசை களத்துமணி நெல்லோசை
வாழை யிலையோசை வஞ்சியர்கை வளையோசை
தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை
கோழிக் குரலோசை குழவியர்வாய்த் தேனோசை
ஆழி யலையோசை அத்தனையும் மங்களமாய்
வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ!
தோழியர் கைதாங்கத் தூக்கியபொன் னடிநோக
மேழியர்தம் இல்லத்து மேலெழுவாய் தைப்பாவாய்

என்ன ஒரு சந்த நயம். பாவை பாடலுக்கு இணையாக மிகச் சிறந்த பாடலல்லவா இது. களத்து மணி நெல்லோசை, வாழை இலையோசை தாழை மடல் ஓசை இதையெல்லாம் நாம் செவியால் கேட்பதைவிட இயற்கையை இரசிக்கும் மனத்தால் கேட்டால் அதிகம் உணரமுடியும். காளையின் கழுத்தில் மெல்லிய மணி கட்டியிருப்பார்கள். ஒரே ஒரு காளையின் கழுத்தில் உள்ள சிறிய மணி மெல்லிய ஒலி எழுப்பும். வயற்காட்டில் ஓங்கி வளர்ந்த நெற்பயிற்கள் அசையும் போது சலசலவென்ற ஓசை எழுப்பும். வாழை இலை ஓசை. கண்டிப்பாக அடுத்த முறை காற்றடிக்கும் போது வாழைமரத்தினருகில் சென்று இதை கவனிக்க வேண்டும். கோழிக் குரல் நம்மை எழுப்பும். குழவியர் வாய் தேனோசை நம்மை மயக்கும். கண்ணதாசன் இவ்வோசையில் மயங்கி இருப்பதை நம்மால் உணரமுடிகிறதல்லவா. வீட்டிற்குள் குழவியரின் மழலை ஒலியில் மயங்கி இருந்தவர், அப்படியே பரந்த ஆழியின் அலையோசையை இரசிக்க சென்று விடுகிறார். அதிகாலை கடலலையின் ஓசையைக் கேட்டிருக்கிறீர்களா? காற்றோடு அலைபேசும் அந்த அற்புத ஓசை நம் மனத்தினை அமைதி படுத்தும் அதிசய ஓசை. தைப்பாவை என்ற இப்பாவைப் பாடலையும் முழுதும் படித்து அதன் இனிமையை சுவைக்க வேண்டும்.

Saturday, 11 March 2023

புள்ளும் சிலம்பின

புள்ளும் சிலம்பின

துயிலெடைப் பாடல்களான அடுத்த பத்து பாடல்களில் ஆண்டாள் மிக அற்புதமாக அதிகாலை நிகழ்வுகள் மற்றும் ஓசைகளை பதிவு செய்கிறாள் மையிருட்டு வானம் மெல்ல மெல்ல புலர்ந்து கிழக்கு வெளுப்பதை இந்த பத்து பாடல்களில் நாம் உணரமுடியும். பறவைகளும், விலங்குகளும் மனிதரும் எழுந்து தத்தம் கடமையைச் செய்ய, அழகாக ஒரு நாள் மலர்வதை எழுத்தோவியமாய் தீட்டியிருப்பாள் ஆண்டாள்.

திருப்பாவையின் ஆறாவது பாடல், துயிலெடையில் முதல் பாடல். இதில் மூன்று விதமான ஓசைகளை காட்டுகிறாள் ஆண்டாள்.

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

முதலில் புட்கள் சிலம்புகின்றன. சிலம்புதல் என்றால் ஒலி எழுப்புதல். பறவைகள் ஒலி எழுப்புகின்றன. இது அதிகாலை நேரம். அடர்ந்த மையிருட்டு என்பதால் எந்த பறவை என அடையாளம் தெரியவில்லை. அவ்வொலி கூட எங்கிருந்தோ வருகிறது. இருள் அகலா காலை நேரம் என்பதை மிக அழகாக காட்டுகிறாள்.

அடுத்ததாக புள்ளரையன் கோவிலில் வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்கிறது. புள்ளரையன் என்றால் புட்களுக்கெல்லாம் அரசன், கருடன் என்றும் கொள்ளலாம். அல்லது புள் கருடனை குறிப்பது என்பதால் கருடனின் தலைவனான பெருமாளைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

காலை ஆலயம் திறந்துவிட்டது, பக்தர்கள் வரலாம் என அறிவிக்க பெருமாள் கோவில்களில், குறிப்பாக கருடார்வாழ் சன்னதியின் அருகில் இருந்து சங்கு ஒலிப்பார்கள். அடர்ந்த இருள் கொண்ட அதிகாலை நேரத்தில் அவ்வெள்ளையான சங்கு பளிச்சென்று தெரியும். இதன் ஒலி வெகுதூரம் கேட்கும். இவள் கோவிலின் அருகில் இருக்கிறாள். எனவே அது பேரரவமாக கேட்கிறது. வேறு எந்த சத்தமும் இல்லாத அந்நேரம் இச்சங்கின் சத்தம் அதிகமாகக் கேட்பது இயல்புதானே! இது அனைவரையும் அழைப்பதால் விளிச்சங்கு எங்கிறாள்.

மூன்றாவதாக வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்தில் கொணடவர்களான முனிவர்களும் யோகிகளும் கூறும் ‘ஹரி’ எங்கிற ஒலி. பேரரவம் கேட்கிறது. இதை பேர் சொல்லும் அரவம் அல்லது பேரரவம் என்று இரண்டு விதமாகவும் கொள்ள முடியும்.

முனிவர்கள் முற்றும் துறந்தவர்கள், யோகிகள், இல்லறத்தில் இருந்தாலும் அதில் பற்றற்றவர்கள். இவர்கள் உள்ளத்தில் எப்பொழுதும் இறைவனை எண்ணி இருப்பவர்கள். இல்லறத்தில் இருக்கும் சாமான்ய மனிதரைக்காட்டிலும் முதலில் எழுபவர்கள். இவர்கள் மெள்ள எழுந்து ஹரி நாமத்தைச் சொல்கிறார்கள். அந்நாமத்தில் ஒலி கேட்கிறது. மீண்டும் இங்கு நாமம் சொல்வதை வலியுருத்துகிறாள் ஆண்டாள். அதுமட்டுமல்ல இவர்கள் மெள்ள எழுந்துதான் ஹரி என்று சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் பலராக இருப்பதால் பலரின் ஓசை ஒன்றாக பேரரவமாகக் கேட்கிறது.

இம்மூன்று ஓசையுமே இருள் விலகாத அதிகாலை நேரத்தைக் குறிக்கின்றன. இக்காலை நேரத்தில் பாவை நோன்பிருக்க நீராட வேண்டும் பெண்ணே எழுந்திராய் எனத் தன் தோழியை எழுப்புகிறாள்.

அடுத்த பாடலில் இந்த ஓசைகளின் நயம் இன்னும் அழகாக சொல்லப்பட்டிருக்கும்.

Wednesday, 8 March 2023

போய பிழையும், புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்

போய பிழையும், புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

இந்தப் பாடலில் கண்ணனை பலவாறாக அழைக்கிறாள் ஆண்டாள். மாயனை, வடமதுரை மைந்தனை, யமுனைத் துறைவனை, ஆயர்குல அணிவிளக்கை, தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனை என்று ஐந்து நாமங்களில் அழைக்கிறாள்.

இறைவன் மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாதவன், அறிவிற்கு அரியவன் என்பதால் மாயன். இதையே ஆண்டாள் முதல் பாசுரத்தில் நாராயணன் என்ற நாமத்தால் குறிக்கிறாள் என்று பார்த்தோம்.

வடமதுரை மைந்தன், வடமதுரையில் தானே வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாக அரச வம்சத்திலே பிறந்தான். எனவே வடமதுரை மைந்தன்.

அடுத்து தூயப்பெருநீர் யமுனைத் துறைவன். ஓர் இரவிலேயே யமுனை கரைக்கு வந்து நந்த கோபன் மகனாக யசோதையின் இளஞ்சிங்கமாக வளர்ந்தானல்லவா. அதனால் யமுனைத் துறைவன்.

இது சாதாரன யமுனை அல்ல தூயப் பெருநீர் யமுனை. இரவோடிரவாக கண்ணனை வசுதேவர் ஆயர்பாடிக்கு எடுத்து வருகிறார். வழியிலே யமுனை ஓடுகிறது. பெருக்கெடுத்து ஓடுகிறது. என்றாலும் வசுதேவருக்கு வழி விட்டு விடுகிறது. அதேநேரம் யமுனைக்கு ஒரு ஆசை, தனது கருணையால் மிகப்பெரியவனான இறைவன் கண்ணனாக இறங்கி வந்து பிறந்திருக்கிறானல்லவா! அவனது பாத மலர்களை ஒருமுறை தொட்டுவிட வேண்டும் என்று எண்ணியதாம் அது. அதனால் மெதுவாக பெருகுகிறது. கூடையில் கண்ணனாக படுத்திருந்த அவன் சின்னப் பாதங்களை ஒரு முறை தொட்டதும் கிடு கிடுவென்று வடிந்து வழி விட்டு விட்டதாம். அதனால் தான் அது தூயப் பெருநீர் யமுனையாகிறது.

அப்படி ஆயர்குலம் செய்த தவத்தால் அக்குலத்தின் விளக்காக வந்தவனை, ஆயர்குல அணி விளக்கே என்றழைக்கிறாள்.

தாயை குடல்விளக்கம் செய்த தாமோதரன். இவனைப் பெற இவன் தாய் என்ன தவம் செய்தாளோ என்றென்னும் படி தேவகியின் கருவில் உதித்தானல்லவா கண்ணன். ஒரு தாயின் வயிற்றில் பிறப்பது வினைப்பயன். தாயின் நல்வினை, நல்ல பிள்ளைகளை கொடுக்கும். பிள்ளைக்கும், எங்கு யாருக்கு பிறக்க வேண்டும் என்பதும் வினைப்பயனே.

ஆனால் கண்ணன் வினையால் பிறந்தவனல்ல. தானே அவதரித்தவன். தேவகியின் கருவில் தோன்றியதால் அவள் குடல் விளக்கம் பெற்றது. இன்னும் ஒரு பிறவிக்கு காராணமாக இல்லாமல் பிறவி பிணி தீர்த்தவன், அவளை ஆட்கொள்ளவே அவள் கருவில் தோன்றினான். குடல் விளக்கம் செய்தான்.

ஆனால் தாமோதரன் என்று இங்கு ஏன் சொன்னாள்?

தாமோதரன் என்றால் கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன் என்பது பொருள். ஆயர்பாடியில் கோவலர்கள் மேய்ச்சலுக்கு போகும் போது கன்றுகளை கட்ட பயன்படுத்தப்படும் கயிற்றை இடுப்பில் ஒரு கயிறு கட்டி அதில் தொங்க விட்டிருப்பார்கள். எனவே இடையர்களிடையே தாமோதரன் என்ற பெயர் உண்டு. கண்ணன் இடைகுலத்தில் வளர்ந்தவன். எனவே அவன் தாமோதரனாகிறான்.

அவன் யசோதையிடம் தானே வளர்ந்தான்? என்ன தவம் செய்தனை யசோதா, எங்கும் நிறை பரப்பிரம்மம் ‘அம்மா’ என்றழைக்க என்ன தவம் செய்தனை என வியக்கும் படியாக யசோதையிடம் குட்டு பட்டு கயிற்றால் கட்டப்பட்டு நின்றானல்லவா கண்ணன். அவள் மீண்டும் பிறவி கடலில் வீழாத வண்ணம் அவளையும் ஆட்கொண்டான். அதனால் தாயை குடல்விளக்கம் செய்தவனாகிறான். யசோதை கண்ணனை கயிற்றால் கட்டினாள். அவனோ அவளை பிறவி கட்டிலிருந்து விடுவித்தான் என்பது எவ்வளவு அழகு!

இப்படி ஐந்து விதமாக கண்ணனை இப்பாடலில் அழைப்பது நோக்கத் தக்கது.

இறைவனின் ஐந்து நிலையை முன்பே பார்த்தோம். இறைவன் பரமபதம் என்று சொல்லப்படுகிற வைகுண்டத்தில் நாராயணனாக இருக்கிறார். ஆனால் சாதாரண மனிதரின் அறிவிற்கு அகப்படாதவனாய் அரியவனாக, மாயனாக இருக்கிறார். அடுத்ததாக பாற்கடலில் பள்ளி கொண்ட பரமனாக இருக்கிறான். அப்பொழுதும் மனிதர்களால் நெருங்க இயலாதவனாகவே இருக்கிறார். மூன்றாவது அவதார நிலையில் ஓங்கு உலகளந்த பெருமானாக இருக்கிறார். அவதார காலத்தில் இருந்தவர்கள் அவனை அனுபவித்திருப்பார்கள் ஆனாலும் இன்னும் சாதரண மனிதருக்கு எட்டாதவனாகவே உள்ளார். நாங்காவதாக எங்கும் வியாபித்திருக்கும் நிலை. காற்றை போல, மழையைப் போல எங்கும் இருக்கிறான் என அறிய முடிந்தாலும், மனிதருக்கு அதுவும் உணரமுடியாததாகவே உள்ளது.

ஆனால் ஆயர்குல அணிவிளக்காக, கண்ணனாக அவன் வந்து பிறந்தவுடன் ஆயர் குல மக்களுக்கு அவன் எளிதில் அடையக் கூடியவனாக இருக்கிறான். ஆயர்குல அணி விளக்கை இடையர்கள் எளிதாக அனுபவித்தார்கள் அல்லவா! ஆண்டாளும் ஆயர் குல பெண்ணாகத் தானே இப்பொழுது இருக்கிறாள். அவளால் கண்ணனை அனுபவிக்க முடிகிறது.

இன்று கலியுகத்தில் நாம் கண்ணனை எப்படி உணர்வது. எப்படி அவனை சரணடைவது. மிக அழகாக சொன்னார்கள்

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா (இராஜாஜி)

இன்று நமது இஷ்ட தெய்வமாக ஒவ்வொரு கோவிலிலும் அவனே அருள்கிறான். கலியுகத்தில் பக்தி செய்து அவன் நாமம் பாடி நாம் அவனை அடைய முடியும். அதுதானே ஆண்டாள் நமக்கு காட்டுவதும்.

அப்படி அவன் நாமம் பாடினால் நாம் அடைய கூடியது என்ன என்பதையும் மிக அழகாக ஆண்டாள் காட்டுகிறாள். அவனை மனம், மெய், மொழிகளால் வணங்கினால், போயப் பிழையும், நாம் இவ்வளவு நாள் செய்த வினைகளும், புகுதருவான் நின்றனவும், இனி விதிவசத்தால் நாம் செய்ய கூடிய வினைகளும் தீயினிற் தூசாகும். அதனால் தூய மனத்துடன் அவன் நாமம் செப்புவீர் எங்கிறாள்.

நாம் தூய மனத்துடன் மெய்யால் வணங்கி தொழுதால் கூட அருள்வான். மலர்களை முறையாக சூடத் தெரியாமல் தூவினால் கூட அவன் ஏற்றுக் கொள்வான். வாயினால் அவன் நாமம் பாடினாலே அவன் அருள்வான். அவனைத் தேடி எங்கும் செல்லத் தேவையில்லை, மனத்தால் சிந்தித்து தியானித்தாலும் போதும் அவனை அடையலாம் என்கிறாள்.

நம் வீட்டில் கூட பூசை அறையில் சிறுவர்களை மணி ஒலிக்கச் செய்வோம், பூ போடச் சொல்வோம். இப்படி சில சின்ன சின்ன காரியங்களைச் செய்யும் போது அது பழக்கமாகும். சற்று பெரியவர்களானதும், சில பாடல்களை மனப்பாடம் செய்து பாடச் செய்வோம். அறிந்து கொள்ளும் வயதானால் இப்பழக்கமே அவர்களைச் சிந்திக்கச் செய்யும். மனத்தினால் சிந்தித்து தியானிப்பது உயர்நிலை. இப்படி பக்தியில் சிறியவர்கள் உயர்நிலை அடைய நல்வழியை ஆண்டாள் காட்டுகிறாள்.

அப்படி அவனைச் சரணடைந்தால் நம் வினைகள் எல்லாம் தீயிட்ட தூசாகும் என்று கூறுகிறாள். நாம் நீரினால் ஒரு அழுக்கை கழுவினால், அழுக்கு போகும் ஆனால் நீர் அசுத்தமாகும். இன்றைய தொழில் நுட்ப காலத்தில் காற்றால் சுத்தம் செய்தாலும் அழுக்கு இடம் மாறுமே தவிர முழுதும் அழியாது. ஆனால் தீயால் ஒரு பொருளை எரிக்கும் பொழுது அப்பொருள் முழுவதுமாக அழிகிறது. அதேசமயம் தீ அசுத்தப்படுவதில்லை. நமது மன அழுக்கையெல்லம் இறைவன் தீயாக இருந்து நீக்குவான் என்று கூறுகிறாள்.

இப்படி நோன்பைப் பற்றியும் பலன் பற்றியும் சொன்ன ஆண்டாள் அடுத்தப் பாடல்களில் துயின்று கொண்டிருக்கும் தமது தோழியரை எழுப்பி இறைவனை நாட அழைக்கிறாள். மிக அற்புதமாக மொழி வளத்தை இப்பாடல்களில் இரசிக்க முடியும். காண்போம்.

Friday, 3 March 2023

வாழ உலகினில் பெய்திடாய்

வாழ உலகினில் பெய்திடாய்


ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாயிர பாடல்களாக அமைந்திருக்கக்கூடிய முதல் ஐந்து பாடல்களில் நான்காவதாக அமைந்துள்ள இந்த பாடலில் ஆழிமழைக்கண்ணா! என்று மழைக் கடவுளை அழைத்து ‘வாழ உலகினில் பெய்திடாய்’ என வேண்டுகிறாள் ஆண்டாள். இதில் சிறப்பாக மழைப் பெய்தலின் அறிவியல் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அழகான உவமைகள் கையாளப்பட்டிருப்பதும் அறிந்து மகிழ தக்கது.

‘ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்’. ‘கரவேல்’ என்ற சொல்லை நமக்கு வெகுவாக பரிச்சயமான இரண்டு இலக்கியஙகளில் படித்திருப்போம்.

ஆத்திச்சூடியில் – ‘இயல்வது கரவேல்’

திருக்குறளில்

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள

கரவல் என்றால் மறைத்தல், ஒளித்துக் கொள்ளுதல் என்று பொருள். இயல்வது கரவேல் என்றால் முடிந்ததை, இயன்றதை மறைத்துவைத்துக் கொள்ளாமல் கொடுக்க வேண்டும். பொருள் மட்டுமல்ல நேரம், கவனம், அக்கறை, உழைப்பு எதுவானாலும் இயன்றதை மறைக்காமல் மற்றவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் அல்லவா? காக்கையானது இரையை கண்டால் தான் மட்டும் மறைத்து உண்ணாது தன் இனத்தை அழைத்து கரைந்து பின்னே சேர்ந்து உண்ணும்.

அப்படியே மழைக்கு அதிபதியே! ஒன்றையும் நீ மறைத்துக் கொள்ளாதே! உன்னால் இயல்வதை கரவாதே!!

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

என்பது குறள். உலகில் உயிர்கள் வாழ வேண்டும் என்றால், உலகம் செழிக்க வேண்டும் என்றால் மழை வேண்டும்.

வருணனே! ஒளித்துக் கொள்ளாமல் அனைத்தையும் முழுவதுமாகக் கொடு என்கிறாள் ஆண்டாள். அதுவும் சார்ங்கத்தின் சரமழைப் போல் கொடு. வில்லிலிருந்து எய்யப்பட்ட அம்பினை, எய்தவன் கூட திரும்பப் பெற முடியாது. அது போல் இடையில் நிற்காதவாறு கடைசி சொட்டு நீர்வரை பெய்து கொடு என்கிறாள்.

வருணனே! நீ கடலில் புகுந்து நீரை முகந்து கொண்டு ஆர்த்து ஏறி, நீரை நிறைத்துக் கொண்டு மேலே சென்று, ஊழி முதல்வனாகிய கண்ணனின் வண்ணம் போல் உன் மெய் கறுத்து பத்மநாபன் கையில் உள்ள ஆழி என்ற சுதர்சன சக்கரம் போல் மின்னி, பஞ்ச சன்னியம் போல் நின்று அதிர்ந்து முழங்கி, சார்ங்கம் என்ற வில்லிலிருந்து பொழியும் சரமழைப்போல் இவ்வுலகில் உயிர்கள் வாழ்வதற்காக மழையை பெய்விப்பாயாக என்கிறாள்.

இங்கு மற்றொரு பாவைப் பாடலான திருவெம்பாவையில் 16 ஆவது பாடல் ஒப்பு நோக்கத் தக்கது.

முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

கார்கால மழை பொழியும் ஒரு ஆற்புதமான இயற்கை காட்சியைக் கண்டதும் ஆண்டாளுக்கு கண்ணனே கண்முன்னே தெரிகிறான். இதோ கார் மேகம் வானம் முழுதும் பரந்து கண்ணன் உடல் நிறம் போல் கறுத்திருக்கிறது, அவன் கையில் சுதர்சன சக்கரம் ஒளிவீசுவதைப் போல் மின்னலடிக்கிறது, பாஞ்ச சன்னியமாகிய அவன் சங்கு முழங்கும் போது அதிர்வதைப் போல் இடிக்கிறது, விஷ்ணுவின் சார்ங்கம் என்ற வில் எப்படி அம்பு மழை பெய்யுமோ அப்படி மழை பொழிகிறது என காண்கிறாள்.

இதே இயற்கை நிகழ்வு, மாணிக்க வாசகருக்கு உமையவளை நினைவூட்டுகிறது. மழையே! முதலில் இக்கடலை அணுகி அதன் நீரைச் சுருக்கி மேகமாக மேலெழுந்து, எம்மை அடியவராக உடைய உமையவளின் மேனி நிறம் போல் கறுத்து, அவளின் இடையைப் போல் மின்னி, பொலிவுடன் காட்சி அளித்து அவள் திருவடிகளில் இருக்கும் பொன்சிலம்பினைப் போல் இடித்து முழங்கி, அவளது திருப்புருவம் போல் வானவில்லாக தோற்றமளித்து, தன்னை என்றும் பிரியாத சிவபெருமானின் அடியவருக்கு பெருமானைக் காட்டிலும் முன்னே தான் வந்து உமையாள் பொழியும் அருளைப் போல் நீ பொழிவாயாக! என்கிறார்.

நாம் ஒருவர் மேல் அன்பு வைத்துவிட்டால் அவர் நினைவு நம்மை முழுவதுமாக ஆட்கொள்ளுமல்லவா? எக்காரியம் செய்தாலும் அவர் நினைவு வருமல்லவா? சாதாரண மனித காதலுக்கே அவ்வளவு வலிமை என்றால், ஆண்டாளும் மாணிக்கவாசகரும் கொண்ட அன்பு தெய்வீகமானதல்லவா? எதைச் செய்தாலும் அவனுக்காகவே செய்வதும் எதைப் பார்த்தாலும் அவனாகவே பார்ப்பதும் பக்தியின் உச்சநிலை. அதனால் தான் ஆண்டாளுக்கு காண்பதெல்லாம் கண்ணனாகவும், மாணிக்கவாசகருக்கு காண்பதெல்லாம் எம்பெருமானும் எம்பிராடியுமாகவே தெரிந்தனர்.

அதுமட்டுமல்ல இவ்விருப்பாடல்களிலுமே, மழை பெய்யும் நிகழ்ச்சி அறிவியல் பூர்வமாக சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் கடல் நீர் ஆவியாகி மேலே சென்று, மேகங்களாகத் திரண்டு, நீர் நிறைய நிறைய கருமை நிறம் கொண்டு, மின்னி அதன் பின் இடியோசை கேட்க மழையாகப் பொழியும் என்று மழைப் பொழியும் நிகழ்வு வரிசை கிரமமாக சொல்லப்பட்டிருப்பது அறிந்து போற்றத்தக்கது.

ஆண்டாள் கண்ணனாக பார்க்க, மாணிக்க வசகரோ உமையாளாக பார்க்க, கம்பன் மழைப் பொழிவை எவ்வாறு காண்கிறான் பார்ப்போமே!

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில்
சேறு அணிந்த முலைத் திரு மங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே

நீறணிந்த கடவுள் சிவபெருமானைப் போல் வெண்மையான மேகங்கள் வான் வழிக்கு அழகு சேர்த்தவாறு மிதந்து கடல் நீரை உட்கொண்டபின் அகிற் பூசிய மார்பினைக் கொண்ட இலக்குமி தேவியால் பெருமைபெற்ற திருமாலின் நிறம் போல் கறுத்து மேலெழும்பினவாம்… என்ன ஒரு கற்பனை.

சிவனைப் போல் வெண்மையான மேகங்கள் கடலில் புகுந்து திருமாலைப் போல் கறுத்து வெளிவந்தனவாம்.

கம்பன் காலத்திற்கு முன் சமய சண்டைகள் இருந்தன. பக்தி இலக்கியங்களில் கூட இதன் தாக்கத்தைப் பார்க்க முடியும். இந்த பின்னனியில் சமய ஒருமைபாடு, கடவுள் ஒருவனே என்கிற தனது கருத்தை மழைப் பெய்யும் வானியல் நிகழ்வில் ஏற்றி கூறியிருப்பது நயமிக்கது. மேகம் ஒன்றுதான் அதுவே சில காலங்களில் வெண்மையாகவும் சில காலங்களில் கறுத்தும் இருப்பது உண்டு. அது போலவே பரம்பொருள் ஒன்றுதான், அவனே பல வடிவங்களில் காட்சியளிக்கிறான் என்பதை குறிப்பால் காட்டியிருப்பார்.

சங்க இலக்கியங்களில் கூட இந்த மழை பெய்யும் நிகழ்வு மிக அழகாக கூறப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியத்தில் திருமாலும் அவர் அவதார காட்சிகளும் மிகவும் அதிகமாக பேசப்பட்டிருக்கும். ‘மாயோன் மேய காடுறை உலகம்’ என்று முல்லை நிலத்திற்கு மாயோன் அல்லது திருமாலே கடவுளாக சொல்கிறது தொல்காப்பியம்.

சங்க இலக்கியமான பத்துப்பாட்டு தொகுப்பில் முல்லைப்பாட்டில்

நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல,
பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி,
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை

இந்த உலகம் முழுவதும் நிறைந்து, வலப்புறமாக சுழி கொண்ட வலம்புரிச் சங்கையும் சக்கரத்தையும் கையில் கொண்டு மகாபலி சக்கரவர்த்தி இட்ட நீரைப் பெற்றதும் விஸ்வரூபமெடுத்து நின்ற திருமாலைப் போல் முகிலானது ஒலி முழங்குகின்ற குளிர்ந்த கடலிலிருந்து நீரைப்பெற்று வலப்புறமாகச் சுழன்று மலைகளை இடமாகக் கொண்டு எழுந்து மிகுந்த மழையைப் பொழிந்த சிறிய புல்லிய மாலை நேரம் என்று முல்லை நில கடவுள் திருமாலின் தோற்றமும் கார்கால மழைப் பொழிவும் அழகாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

மேலும்

நிறைகடல்முகந்துஉராய், நிறைந்து, நீர்துளும்பும்தம்
பொறைதவிர்புஅசைவிடப்பொழிந்தன்று, வானம்;


கடலில் நீரை முகந்து சென்ற மேகம் உரசும் போது தன்னிடமுள்ள நீர் தளும்பித் தாங்கமாட்டாமல் மழையாகப் பொழிந்தது என்று பரிப்பாடலும்

பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகிக்
காலை வந்தன்றால் காரே (அகம் 183)


கடல் முகந்து கொண்ட காமஞ் சூல்
மாமழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு (அகம். 43)
என்று அகப்பாடலும் மழைப் பொழிவைக் குறிப்பிடுகின்றன.


அடுத்ததாக திருக்குறளில் வள்ளுவரும்


நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

கடலிலிருந்து பெறப்பட்ட நீரை மழையாக பொழியாவிட்டால், அக் கடலும் கூட தன்தன்மை கெடும் என்பதைக் காட்டுகிறார்.

இது மழை பொழிதல் பற்றிய அறிவியல் அறிவு தமிழரிடையே அன்றே இருந்தமையைக் காட்டுகின்றது.

‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து’, வாழ உலகினில் பெய்திடாய்’ என்று வலியுருத்திச் சொல்லும் ஆண்டாளின் சிந்தனையும், வான் சிறப்பு என்று ஒரு அதிகாரத்தையே எழுதிய வள்ளுவரின் சிந்தனையையும் சற்று ஒப்பு நோக்குவோமே!!

வள்ளுவர் கடவுள் வாழ்த்திற்கு அடுத்ததாக ‘வான் சிறப்பு’ பற்றி கூறுவதே மழையின் முக்கியத்துவம் கருதியே! வானின்று பெய்யும் மழை உலகில் உயிர்கள் வாழ காரணமாயிருப்பதால் அதனை ‘அமிழ்தம்’ என்று கூறுகிறார். அதுமட்டுமல்ல

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

என்று கெடுக்கவல்லதும் மழை, கொடுக்கவல்லதும் மழை என்பதை காட்டுகிறார். அதை உணர்ந்தவளாதலால் ஆண்டாளும், தீங்கின்றி, வாழ உலகினில் பெய்திடாய்’ என்றுதானே கேட்கிறாள்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

மழை பொய்க்குமேயானால், பூமியில் மனிதர் செய்யும் விழாக்கள், பூசனைகள் எதுவும் நடைபெற இயலாது என்பது குறள். எனவே தான் ஆண்டாளும் நாங்கள் மார்கழி நீராடி மகிழ்ந்து நோன்பிருக்க மழையே பொழிவாயாக! என்கிறாள்.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

வானம் மழையை தராது போனால், பிறருக்காக செய்யப்படும் தானம், தமக்காகச் செய்யப்படும் தவம் இரண்டும் செய்ய இயலாமல் போகும். தானம் பிறருக்காக செய்யப்படும் சிறப்பு கருதி முதலில் கூறப்பட்டது. தவம் தமக்காகச் செய்யப்படுவதால் பிறகு கூறப்பட்டது. ஆண்டாளும் பாவைப்பாடலில்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

என்று முதலில் உலகம் வாழ வேண்டும் என்று பிறருக்காகவும் பின் நாங்களும் மார்கழி நீராடி மகிழ வேண்டும் என்று தங்களுக்காகவும் மழை வேண்டியிருக்கிறாள்.

இங்கு நாங்களும் என்று உம்மை இட்டுச் சொல்வதால் திருப்பாவையின் முதன்மையான நோக்கம் மனிதர் உய்யவேண்டும் என்பதாகக் கொள்ளலாம். திருக்குறளும் மனிதர் வாழ பாடிய அற நூல் அல்லவா!! இப்படி தமிழ் இலக்கியங்கள் சிறப்பான சிந்தனைகளை வெளியிட்டிருப்பது அறிந்து மகிழ மட்டுமின்றி பின்பற்றவும் தக்கது.

இப்பாவைப்பாடலில் ஆண்டாள் கையாண்டிருக்கும் உவமைகளின் அழகும் அறிய தக்கது. வடிவம், நிறம், வினை, பயன் என்ற நான்கு விதமாகவும் மழையை கண்ணனோடு ஒப்புமைப்படுத்துகிறாள்.

முதலில் ‘ஊழி முதல்வன் உருவம் போல்’ இங்கு வடிவ உவமை சொல்லப்படுகிறது. ஊழி காலத்தில் இறைவன் அனைத்தையும் தன்னுள் அடக்கியவனாக எங்கும் வியாபித்திருப்பான். அதுபோல் நல்ல மழைக்காலத்தில் வானமே கவிழ்ந்தது போல் இருட்டிக் கொண்டு பெய்வதை நாம் நினைத்துப் பார்த்தோமேயானால் இந்த உவமையின் அழகை நம்மால் உணரமுடியுமல்லவா? இன்று சாதாரண மழைக்கூட பொய்த்து போகிற காலத்தில் இவ்வியற்கை நிகழ்வை நாம் கற்பனைதான் செய்ய வேண்டியிருக்கிறது.

அடுத்ததாக ‘மெய் கறுத்து’ என்று நிறத்தில் உள்ள ஒற்றுமை சுட்டப்படுகிறது. முதல் பாடலில் ‘கார்மேனி செங்கண்’ என்று கார்கால மேகத்தைப் போன்று கரிய நிறம் கொண்டவன் கண்ணன் என்று சொன்ன ஆண்டாள், இப்பாடலில், கண்ணனின் நிறம் போல் நீயும் கறுத்து பெய் என மேகத்திற்கு அதிபதியான வருணனிடம் சொல்கிறாள்.

ஆயர்பாடி சிறுமிகளுக்கு மழை மிகவும் பரிச்சயமானது. மழையினால் தானே புற்கள் நிறைந்து பசுக்கள் செழுமையாக வளர்ந்தன. அதனால் தானே வருடா வருடம் இந்திரனுக்கு விழா எடுத்தார்கள். அதுமட்டுமல்ல அவர்கள் கண்ணனோடு வளர்ந்தவர்கள்! அவன் லிலைகளையும், கருணையையும் பேசுவதில் ஆர்வம் கொண்டவர்கள். எனவே, மழை போல் கரிய நிறம் கொண்டவனான கண்ணனைப் பாடுவோம் வாருங்கள் என்று முதல் பாடலில் அச்சிறுமிகளை அழைக்கிறாள்.

ஆனால் இப்பாடலில் மழைக்கு அதிபதியான வருணனனிடம் பேசுகிறாள். இயற்கை எல்லாம் கண்ணன் படைப்பல்லவா? கண்ணனை போல் அல்லவா மழை இருக்கிறது. எனவே மழைக்கதிபதியே! உன்னை படைத்தவனும் ஊழி முதல்வனுமான கண்ணனின் நிறத்தைப் போல் நீயும் கரிய நிறம் கொண்டு பொழி என சொல்வதுதானே தகும்.

மேலும் நீ அவன் கையில் கொண்ட சுதர்சன சக்கரத்தைப் போல் மின்னி, வலம்புரி சங்கான பஞ்ச சன்னியம் போல் அதிர்ந்து முழங்கி பொழிவாய் என்றும் கூறுகிறாள். இங்கு வினை உவமை சொல்லப்படுகிறது. வினை மட்டுமே ஒப்புமை படுத்தப்பட்டுள்ளது.

‘பத்மநாபன் ‘கையில் உள்ள சக்கரத்தைப் போல் மின்னி, சங்கை போல் முழங்கி என்று சொல்கிற அழகும் கவனிக்கத்தக்கது. ஊழி காலத்தில் இறைவன் அழிப்பது மட்டும் செய்வதில்லை. மீண்டும் அனைத்தையும் படைக்கவும் செய்கிறான் அல்லவா? பத்மநாபன் என்றால் நாபியிலே தாமரை மலரைக் கொண்டவன் என்பது பொருள். தாமரையில் உறைபவன் பிரம்மன், படைப்புக் கடவுள். எனவே ஊழி முதல்வன் உருவம் போல் என்று ஆரம்பித்தவள் பதமநாபனை சொல்வதும் பொறுத்தம் தானே!!

அதுவும் ‘பாழியந் தோளுடைப் பற்பநாபன்’. தோளுக்கு ஒரு சிறப்பு உண்டு. துன்பத்தில் ஒருவர் இருந்தால் நாம் என்ன சொல்வோம். அவருக்கு தோள் கொடுக்க வேண்டும் என்போம். சாய்ந்து கொள்ள தோள் வேண்டும் என்று சொல்வதில்லயா? ஏன் தோள். ஆதரவாக அனைக்கும் போது தோளில் சாய்ந்து அவ்வுயிர் ஆறுதலடைகிறது. இறைவனின் தோள் அனைத்து ஜீவராசிகளையும் இரட்சிக்கக்கூடியது. உயிர்கள் அவன் காலடியைத்தான் அடைகின்றன. ஆனால் அவற்றை தன் தோளில் தாங்கி அரவனைக்கிறான் இறைவன். எனவே பாழியந் தோளுடை பத்மநாபன் கையில்’ என்று பாடுகிறாள்

அடுத்து,

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

இங்கு சொல்லப்பட்டிருக்கும் சார்ங்கம் என்ற வில் விஷ்ணுவினுடைய வில். படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கு உதவியாக இந்த அண்டங்களையெல்லம் படைத்தவர் விஸ்வகர்மா. இவர் தேவலோகத்தின் சிற்பி. இவர் ஒரு அற்புதமான மூங்கிலிலிருந்து இரண்டு விற்களை செய்கிறார். ஒன்று பினாகம் எங்கிற சிவ தனுசு மற்றொன்று சார்ங்கம் எங்கிற விஷ்ணு தனுசு. இவை இரண்டிற்குமான கதை மிக வும் சுவாரஸ்யமானது, படித்தறிய வேண்டியது. இந்த சிவ தனுசுவைத்தான் இராமர் உடைத்து சீதையை மணந்தது.

வலிமைவாய்ந்த இந்த சார்ங்கம் என்ற விஷ்ணுவின் வில் பரசு இராமர் மூலமாக இராமருக்கு கிடைக்கிறது. கரன் என்ற அசுரனை வதைக்க இராமர் இதை பயன் படுத்தினார் என்று சொல்கிறது கம்ப இராமாயணம். இவ்வில் அற்புதமான வில். ஒரே ஒரு அம்பு, பலவாக மிகுந்து மழைப்போல் பொழியுமாம். அது நீர் தீ என வேண்டிய வடிவத்தில் பொழியும். இதை வருணனே பாதுகாக்கிறான். அதன் சிறப்பை நன்கு உணர்ந்தவன் என்பதால் மிகுதியாக பொழியும் சார்ங்கத்தின் அம்புமழைப்போல் மழையே நீ பெய்யவேண்டும் என்கிறாள்.

இங்கு வினை உவமையாயின் அது நலம் பயக்காது அல்லவா. சரமழை அழித்தது. ஆனால் ஆண்டாள் கேட்பதோ ‘வாழ பெய்யும்’ மழை. எனவே இங்கு பயன் உவமிக்கப் படுகிறது என்பதை அறியலாம். சார்ங்கத்தின் சர மழை அசுரர்களை அழித்து தேவரும் மனிதரும் வாழ வழி வகுத்தது. அது போல் மழையே இவ்வுலகில் உயிர்கள் வாழ நீ பெய்திடாய் என்று பாடுகிறாள்.

திருப்பாவை முழுவதுமே நாம் முன்பே பார்த்த படி நமது அறிவிற்கும், பக்திக்கும், ஞானத்திற்கும் ஏற்ப பலவாறு பொருள் கொள்ள முடியும். அதனால் தான் இராண்டாயிரம் படி, நாலாயிரம் படி, ஆராயிரம் படி என பல உரைகளை பெரியவர்கள் எழுதியுள்ளனர்.

ஆழிமழைக்கண்ணா என்பதை ‘ஆழிமழைக்கு அண்ணா’ என்று கொண்டு, இப்பாசுரம் இராமானுஜரைக் குறிப்பதாகவும் சொல்வதுண்டு. அவரே மழைப்போல் கருணையுடன் வைணவத்தை அனைவருக்குமானதாக அளித்தார். அதுமட்டுமல்ல ஆண்டாள் தான் செய்வதாக வேண்டிக்கொண்டவற்றை இராமானுஜர் செய்து முடித்ததால் காலத்தாற் முற்பட்ட ஆண்டாளே அவரை அண்ணனாக அழைத்ததாக வரலாறு உண்டு. இப்படி பல அற்புதமான உரைகள் திருப்பாவையின் நயத்தை நாம் சுவைக்கத் தருகின்றன.

அடுத்த பகுதியில் அந்த மாயனை வாயினால் பாடி மனத்தினால் சிந்திப்போம் வாருங்கள்…

Wednesday, 1 March 2023

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்!

ஒரு நாட்டின் அடிப்படைத் தேவையான நீர்வளம் நில வளம், பொருள் வளம் என்று மூன்று வளங்களையும் காட்டும் மிகச்சிறந்த பாடல் இது. இந்தப் பாடலில் செழிப்பான ஒரு இயற்கை காட்சியை ஆண்டாள் நம் கண்முன்னே நிறுத்தியிருப்பாள்.

மழைப் பெய்யவேண்டும், மும்மாரி பெய்ய வேண்டும். அதுவும் தீங்கின்றி பெய்யவேண்டும். ஒரு மாதத்தில் 10 நாட்கள் வெயிலும் ஒருநாள் மழையும் இருந்தால் நிலத்தடி நீர் பெருகி, அவ்விடம் செழிப்பானதாக இருக்கும். உயிரினங்களுக்கு தீமை விளைவிக்காத மழையாக அது இருக்கும்.

பல வருடங்கள் மழையின்றி வறட்சியாலும் சிலவருடங்கள் மிதமிஞ்சிய மழையால் வெள்ளம் பெருகியதாலும் உயிரினங்கள் பட்டத் துன்பத்தை நாமறிவோமல்லவா? அதனால்தான் தீங்கின்றி நாடெல்லாம் மாதம் மும்மாரி பெய்ய வேண்டுகிறாள் ஆண்டாள்.

அப்படி ஆயர்பாடியில் மாதம் மும்மாரி பெய்ததனால் அங்கு நீர்வளம் மிகுந்து வயல்களில் நெற்பயிரானது ஓங்கி வளர்ந்திருந்தது.

இங்கு ஓங்கி என்ற சொல் உலகளந்த பெருமாளுக்கும் செந்நெற் பயிறுக்கும் அடையாக வருவது அறிந்து மகிழத்தக்கது.

திருவிக்கிரம அவதாரத்தில் மிகவும் குள்ளமான உருவம் கொண்ட வாமனன், மகாபலி இட்ட நீர் பட்டதும் மிக மிக உயர்ந்து விஸ்வரூபமெடுத்து உலகளந்த பெருமானாக திருவிக்கிரமனாக உயர்ந்து நின்றார். ஆயர்பாடியிலும் நீர் வளம் மிகுந்து இருந்ததால் நெற்பயிர்கள் எல்லாம் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருக்கின்றன. ஆளுயர கதிர்களல்ல அவை அதையும் தாண்டி வான் தொட உயர்ந்து நிற்கின்றன திருவிக்கிரமனைப் போல. ஒருவேளை ஓங்கி வளர்ந்த உத்தமனின் பாதர விந்தங்களை காண்பதற்காக தானும் ஓங்கி உயர்ந்து வளர்ந்தனவோ இந்நெற்பயிர்கள்!!

அப்படி உயர்ந்து வளர்ந்த நெற்பயிரின் ஊடாக, கயல் உகள. ஊடு, உகள என்பன அழகான தமிழ் வார்த்தைகள். இன்று வழக்கொழிந்து போயின. ஊடு என்றால் இடையே என்பது பொருள். ஊடுபயிர் கேள்வி பட்டிருப்போமில்லையா? முதன்மையாக விளைவிக்கக்கூடிய பயிருக்கு இடையில் வேறு பயிர்களை வளர்த்தல். இது விவசாய முறை. அதுபோல் உகள என்றால் துள்ளிச் செல்லுதல், நழுவிச் செல்லுதல். இந்த நெற் பயிகளிடையே மீன்கள் துள்ளி விளையாடுகின்றன.

இப்படி வயல்களில் மீன்கள் இருப்பது சங்க இலக்கியத்தில் நிறைய இடங்களில் காண முடியும்

வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர! (நற்றினை 210)

விதைப்புக்காக விதை கொண்டு சென்ற வட்டிலில் மீன் எடுத்துக் கொண்டு திரும்புவர் எங்கிறது நற்றினை.

நெடுநீர் பொய்கை பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர் கூட்டுமுதல் பிறழும் – (புறம் 287)


என்ற புறப்பாடலும்

கீழ்நீரால் மீன்வழங்குந்து
மீநீரான் கண்ணன்ன மலர்பூக் குந்து
கழிசுற்றிய விளை கழனி – புறம் 396


அதாவது வயலில், நீரின் அடியில் மீன், மேலே குவளை மலர், இவற்றுக்கிடையே நெற் பயிர் என்று மற்றொரு புறப்பாடலும் வயலில் மீன்கள் வாழும் நீர் வளச்சிறப்பை எடுத்துரைக்கின்றன.

அப்படியே ஆயர்பாடியிலும் வயற்பரப்பில் நெற்பயிர்கள் ஓங்கி வளர்ந்திருக்கின்றன. வயலில் உள்ள நீரில் மீன்கள் துள்ளித் திரிகின்றன. அங்கே மலர்ந்திருக்கும் குவளைப்பூக்களில் தேனுண்ட வண்டுகள் துயில்கின்றன. ‘கண்படுப்ப’ என்ற அழகான தமிழ் சொல்லை இங்கு பயன்படுத்தியிருப்பாள் ஆண்டாள். ‘கண்படுப்ப’ என்றால் துயில் கொள்ள என்று பொருள். தேனின் மிகுதியால் மயங்கிய வண்டுகள் மலர்களை மொய்க்கின்றன. மீன்கள் துள்ளித் திரிவதால் அம்மலர்கள் ஆடுகின்றன. அந்த ஆட்டமே தாலாட்டாக இவ்வண்டுகள் அம்மலரிலேயே தூங்கிவிடுகினறன.

அனுபவித்துப் பாருங்கள் பெரிய வயல்கள், ஓங்கி வளர்ந்த நெற்கதிர்கள், நீரில் மீன்கள் துள்ள, குவளைப்பூக்களில் வண்டுகள் அமர்ந்திருக்க, செழுமையான இவ்வியற்கை காட்சி நம் கண்முன்னே விரிகிறதல்லவா? இப்படி நீர்வளமும் நிலவளமும் மிக்கதாக உள்ளது ஆயர்பாடி. மேலும் ஆயர்பாடியில் பசுக்கள் எல்லாம் வள்ளல்களாக இருந்தன.

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

தயங்காமல் முன்வந்து ‘சீர்த்த முலை பற்றி வாங்க’, பாலை கறக்கக் கூட வேண்டாம். முலையைத் தொட்டாலே தானே கறந்து குடம் நிறைக்குமாம் இப்பசுக்கள். ஆயர்பாடியில் பசுக்கள் ஏராளம். நந்தகோபாலன் வீட்டில் மட்டும் ஏழு இலட்சம் பசுக்கள் இருந்ததாம். இவ்வளவு பசுக்களை எப்படி கறப்பது. சோர்ந்து போக நேரும் தானே? கண்ணன் மேய்த்த மாடுகள் அல்லவா இவை! அவனது வேணு கானம் கேட்டுக்கேட்டு செழுமையாக வளர்ந்தவை அல்லவா இவைகள். அப்படி வளர்ந்த இம்மாடுகள் அவனுக்காக தானாக பாலை சுரந்தன. எனவே பாற்குடத்துடன் அருகே வந்து தொட்டாலே வள்ளல்களாகப் பொழியுமாம் இப்பசுக்கள். இப்படி வள்ளல் பெரும்பசுக்கள் என்று இரண்டு இடங்களில் ஆண்டாள் குறிப்பிடுகின்றாள். 21 ஆம் பாடலில்

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

என்று காட்டுகிறாள். சிறிது முயற்சியுடன் அவனை அடைய எண்ணினாலே அருள்வானல்லவா. இதோ நாங்கள் அடி பணிந்து வந்துள்ளோம், அருள் செய்ய எழுவாயாக என்பதாக அமைந்திருக்கும் அப்பாடல். இங்கு பொருள் வளம் மிக அற்புதமாக சொல்லப்பட்டிருக்கிறது.

இப்படி ஓங்கி உலகளந்த உத்தமனின் பேர் பாடி, அவனை நினைத்து நோன்பிபிருந்தால் செல்வம் பெருகும். அவன் புகழ் பாடக்கூட வேண்டாம், நாமம் சொன்னாலே நீங்காத செல்வம் நிறையும் என்பது ஆண்டாளின் வாக்கு.

இன்றும் இப்பாடலை ‘நீங்காத செல்வம் நிறைந்து வாழ்க’ என்று வாழ்த்தாக பெரியவர்கள் பாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இங்கு பசுக்கள் என்பன ஆச்சாரியர்கள் அல்லது குருவை குறிக்கும். அவர்கள் கண்ணனின் அருளால் என்றும் நீங்காத செல்வமாக இறையருளை அவனது திருவடி கமலத்தை பெற்றவர்கள். நாம் சிறு முயற்சி மட்டும் செய்து அவர்களை அடைந்தாலே போதும், வள்ளல்களாக அவர்கள் நமக்கு ஞானத்தை அருள்வார்கள்

மேலும், இறைவனின் அருளால் ஆச்சாரியர்களிடையே ஞானமாகிய பயிர் ஓங்கி வளர்ந்த்திருக்கிறது. அந்த ஆச்சாரியர்களை அடைந்த மீன்களாகிய சிஷ்யர்கள் ஞானம் தந்த இன்பத்தினால் மகிழ்ந்திருப்பர். மலர்ந்த மலரில் வண்டு உறங்குவது போல் இவர்கள் உள்ளத்தில் இறைவன் நீங்காது குடியிருப்பான் என்பதே இப்பாடலின் உட்கருத்தாய் அமைகிறது.

இவ்வாறாக இறைவனின் நாமம் சொன்னாலே தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும் என்று சொன்ன ஆண்டாள், ஆழி மழைக்கண்ணனை, ‘வாழ உலகினில் பெய்திடாய்’ என்று அழைக்கும் அழகை அடுத்த பாடலில் காண்போம்