Saturday, 22 April 2023

பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ்மாலை

பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ்மாலை

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பாற்கடலைக் கடைந்தவனாகிய மாதவனும், கேசியை அழித்ததால் கேசவன் எனபோற்றப்பட்டவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகிய முகமுடைய, நேர்த்தியான அணிகலங்களணிந்த ஆயர்பாடி பெண்கள் சென்றுஅடைந்து வணங்கி, அருள் பெற்ற நெறியை, ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தவளும், தாமரை மலர்மாலையை அணிந்தவளும், பட்டர்பிரான் என்றழைக்கப்பட்ட பெரியாழ்வாரின் மகளுமான கோதை ஆண்டாள் தீந்தமிழால் செய்து தந்த இச்சங்கத் தமிழ் மாலையான இம்முப்பது பாடல்களையும் உணர்ந்து படிப்பவர்கள், சங்கு சக்கரதாரியாக நாங்கு தோள்களும், கருணையால் சிவந்த கண்கள் அமைந்த அழகிய முகமுடையவனும், செல்வத்திற்கதிபதியான ஸ்ரீதேவியை தன்நெஞ்சில் கொண்டவருமான திருமாலால் எங்கும், எப்பொழுதும், மூவுலகிலும், ஈரேழ் பிறவியிலும் உண்மைச் செல்வமாகிய அவன் திருவருள் பெற்று இன்புருவர் என்பது ஆண்டாள் வாக்கு. சங்கம் என்றால் கூட்டம் என்று ஒரு பொருள் உண்டு. இங்கு சங்கத் தமிழ் மாலை என்பது கூட்டமாக பலரும் சேர்ந்து துதித்து பாடதக்கதான முப்பது பாசுரங்ககளான திருப்பாவையை குறிக்கிறது.

அப்படியே திருப்பாவை பாடல்களை படிப்பவர்கள், கேட்பவர்கள் அனைவரும் கண்ணனின் கருணையையும் ஆண்டாளின் அருளையும் பெறுவர் என்பது திண்ணம்.

திருவாடிப் பூரத்து செகத்து உதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்து அளித்தாள் வாழியே
மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!


இறைவா நீ தாராய் பறை

இறைவா நீ தாராய் பறை

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

கறவை மாடுகளை மேய்த்துச் சென்று, மேச்சல் காட்டில் விட்டப்பின், நாங்கள் சேர்ந்திருந்து உண்போம். எங்களுக்குத் தெரிந்தது அது ஒன்றே! என்றாலும் அறிவற்றவர்களாகிய எங்கள் குலத்தில், நீ பிறந்ததனால் புண்ணியம் செய்தவர்களானோம்.

நாங்கள் அறிவற்றவர்கள். மாடு மேய்ப்பதைக்கூட சரியாகச் செய்யாதவர்கள். காட்டில் விட்டதும் நாங்கள் உண்போமேத் தவிர அம்மாடுகள் பிரிந்து போய்விடாமல் தக்கதை மேய்ந்தனவா? என்பதைக்கூட காணத் தெரியாது. என்றாலும், மிக எளிமையானவர்களாகிய எங்கள் குலத்தில் நீ பிறந்ததால் நாங்கள் உய்யும் வழியை அடைந்தோம்.

குறையொன்றுமில்லாதவனாகிய கோவிந்தனே! உன்னோடு நாங்கள் கொண்ட இவ்வுறவு ஒழிக்க ஒழியாது. அறியாமையினால் நாங்கள் உன்னை ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபம் கொள்ளாமல்! இறைவா! நீ எங்களுக்கு வேண்டியதை அருள்வாய்!

இப்பாடலில் கண்ணனை இறைவனாகக் காட்டுகிறாள் ஆண்டாள். இறைவா! என்றே அழைத்து எம் விருப்பத்தை தருவாயாக! என்று வேண்டுகிறாள். நாங்கள் அறிவில்லாதவர்கள் என்று தம் சிறுமையை உணர்ந்தும், இறைவன் குறையொன்றுமில்லாத கோவிந்தன் என்ற மிகப்பெரிய உண்மையைத் தெளிந்தும் ஆண்டாள் இப்பாடலில் அவன் பாதாரவிந்தத்தில் சரணாகதியை வேண்டுகிறாள்.

என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

என்று முன்பே சொன்னாளல்லவா! அவ்விருப்பத்தை எமக்கருள்வாய் என்று வேண்டுகிறாள்.

முன் பாசுரத்தில் இறைவனின் பெருமையயும் அதே நேரத்தில், பக்தர்களுக்கு இறங்கி அருளும் அவன் கருணையையும் உணர்ந்தவர்கள், இப்பாடலில் அவன் பெருமையின் முன் தம் சிறுமையை எண்ணுகிறார்கள். நாமோ சிறிதும் அறிவில்லாதவர். உண்மை ஞானம் இல்லாதவர்கள். ஞானமில்லாததால் உன்னை சிறுபேர் அழைத்தோம். நாங்கள் எப்படி அழைத்தாலும் அது உன் முழு பெருமையைக்காட்டாது. அதனால் கோபம் கொள்ளாதே! நீ குறையொன்றுமில்லாத கோவிந்தன். பசுக்களாகிய இவ்வுலக மக்களைக் காக்கும் கோவிந்தன். உன்னுடனான எங்கள் உறவு அழியாதது. ஜீவர்களாகிய நாங்கள் பரமனாக இருக்கும் உன்னை அடைவதே உய்யும் வழி. அதனால் உன்னைச் சரணடைந்தோம் உனக்கு கைங்கர்யம் செய்யும் பேற்றினை எமக்கருள்வாய் என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

அதுமட்டுமல்ல, இந்த வைகறைப் பொழுதில் வந்து உன் பொறாமரையடியை சேவித்து போற்றுவதன் காரணத்தை கேள். இடைகுலத்தில் பிறந்த நீ இடையர்களாகிய எங்களின் சேவையை ஏற்காமல் தள்ளக்கூடாது. மனித குலம் நன்மையுற தர்மத்தை போதித்தவனே! எங்களுக்காக இராமனாக இவ்வுலகில் பிறந்து அறம் காத்து நின்றவனே!

பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் என்று சொன்னவனல்லவோ கண்ணன். அப்படி மனித குலத்தில் பிறந்து வழிகாட்டிய நீ எங்கள் சேவகத்தை ஏற்காமல் தள்ளக்கூடாது.

இன்று மட்டுமல்ல கண்ணா! ஏழேழ் பிறவியிலும் உனக்கு உற்றவர்களாகவே இருக்க வேண்டும். எவ்வளவு பிறவி கர்மத்தின் காரணமாக நாங்கள் எடுக்க விளைந்தாலும், உனக்கே நாம் பணிசெய்யவேண்டும், மற்ற உலக இன்பங்களில் எங்கள் விருப்பத்தை மாற்றி, எம்மனம் எப்போதும் உன்னடியையேச் சேர அருள்வாய்! என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே.

என்று இவ்வையகத்தில் வணங்கி சரணடைந்தவருக்கு இறங்கி அருள்செய்யக்கூடிய திருப்பதிரிப்புலியூர் சிவனே! நான் புழுவாகப் பிறவி எடுக்க நேர்ந்தாலும் உன்னடி என்மனத்திலிருந்து வழுவாதிருக்க வரம் தரவேண்டும்! என்று தானே திருநாவுக்கரசரும் வேண்டுகிறார்.

இப்படி மனிதருக்காக இறங்கி கண்ணனாக பிறந்து அருள் செய்த இறைவனை, அவன் அவதார காலத்தில் அவனுடன் ஆடிப் பாடிய ஆயர் சிறுமியாகவே தன்னை நினைத்துக் கொண்டு மனத்தால் ஆயர் பெண்ணாகவே வாழ்ந்து உருகியிருக்கிறாள் ஆண்டாள். பல நூற்றாண்டுகளாய் இறையருளைப் பெற தம்முன்னோர் காட்டிய நெறியாம் சரணாகதியை எளியவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் அருமையான தீந்தமிழால் பாமாலை சாற்றியிருக்கிறாள்.

மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிர்வோம்!

மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிர்வோம்!

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

கூடாதவரை வெல்லும், அழிக்கும் என்றல்ல வெல்லும் என்று காட்டியிருக்கிறாள் ஆண்டாள். பகை, மாற்று, அல்லது எதிர்மாறையான எண்ணம் கொண்டவரையும் அவர் எண்ணத்தை மாற்றி வெல்லக் கூடியவன். தானே பெரியவன் என்ற அகம்பாவத்துடன் இருந்த இந்திரனின் செருக்கை அழித்து அவனை ஆட்கொண்டு கோவிந்தனாக நின்றானல்லவா! அதனால் தான் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! என்றழைக்கிறாள் ஆண்டாள்.

இப்பாடல் முதல் அடுத்த மூன்று பாடல்களிலும் இந்த கோவிந்த நாம சங்கீர்தனம் அமைந்திருப்பது சிறப்பு. சாதாரணமாக கோவிந்த நாமம் சொல்லும் பொழுது மூன்று முறை கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!! என்றழைப்பது மரபு. இன்றும் இதை நாம் செவிமடுக்க இயலும்.

கோவிந்தன் என்றால் பசுக்களை காக்கக்கூடியவன் என்பது பொருள். பசு என்பது ஜீவாத்மாக்களைக் குறிக்கும். உலக உயிர்களாகிய பசுக்களைக் காக்கும் பரமாத்மா! கோவிந்தன் எனப்படுகிறான் இதனாலும் கோவிந்த நாமம் சொல்லுதல் முக்தி அளிக்கும் எனக் கருதப்படுகிறது.

நாங்கள் உன்னை பாடிப் பெரும் பரிசு, மிக அருமையானதாக உலகமே புகழக்கூடியதாக இருக்கும். சூடகம், கையில் அணியும் வளையல், தோள்வளையே தோள்களில் அணியும் வளைந்த அணிகலன். தோடு என்றாலும் செவிப்பூ என்றாலும் காதில் அணியக்கூடியது, பாடகம் என்பது காலில் அணியக்கூடியது இவ்வாறு பல அணிகலங்கள் நாங்கள் அணிவோம்.

முன்பு மையிட்டெழுதோம் மலரிட்டு நாமுடியோம் என்றவர்கள், இன்று பல அணிகலனும் அணிவோம் எங்கிறார்கள். இந்த அணிகலங்கள் என்பவை வைணவ சமயத்தின் சங்கு சக்கரம் போன்ற முத்திரைகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம். உனது அடியவர் என்பதை அடையாளங்காட்டும் முத்திரைகளை அணிவோம். முன்பு இறைவன் அருளைப் பெற வைராக்கியத்துடன் உலக இன்பங்களைத் துறந்தவர்கள், பின்பு அவன் அருள் கிட்டியதால் அவன் அடியவர் என்று அடையாளத்தை மகிழ்வோடு அணிகிறார்கள்.

இதை இன்னும் வேறு விதமாகவும் காணலாம். இறைவனை அறியும் முன்பு, மெய் ஞானம் பெறும் முன்பு உலக இன்பங்களையெல்லாம் தமக்கானதாக அனுபவிக்கும் பொழுது அதைத் துறந்தால் மட்டுமே, இறைவனை அடைய முடியும் என்று துறந்தார்கள். இறைவன் அருள் கிட்டி உண்மை உணர்ந்தவர்கள் அதே உலகியல் நடவடிக்கைகளை கூட அவன் அருளாலே அவனுக்கானதாக செய்யும் பொழுது அதிலும் அவனையேக்கண்டு இன்புறுவார்கள் என்பதாகக் காணலாம்.

ஆடை உடுப்போம் அதன் பின்னே பால்சோறு மூட நெய் பெய்து, அது முழங்கை வழிவார உண்போம் என்று கூறவில்லை, ஆனால் கூடியிருந்து குளிர்வோம் என்று கூறுகிறாள் ஆண்டாள். உணவு என்பது மற்றவர்களுக்கு ஈந்து மகிழக்கூடியது. உலகின் உயிகலெல்லாம் அவன் என்று கண்டால் ஒவ்வொரு உயிருக்கு செய்யும் கைங்கர்யமும் அவனுக்கானதாகிறதன்றோ! அவ்வாறு உலக உயிர்களில் உன்னைக்கண்டு உன்னுடன் கூடி இருந்து குளிர்வோம்!

நம்மை நாம் அறிந்து மெய் ஞானத்துடன் இறைவனை உணர்ந்து இவ்வுலகில் உள்ள அனைத்திலும் அவனையே கண்டுக் கொண்டால் பிற உயிர்களிடம் அன்பைத் தவிர வேறென்ன காட்ட இயலும்.

இப்படி மிக அருமையான இறை தத்துவத்தை மிக எளிதாக கடைபிடித்து நாமெல்லோரும் உய்ய அருள் காட்டுகிறாள் ஆண்டாள்.

Wednesday, 19 April 2023

ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்

ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்

கண்ணன் சிங்காதனத்தில அமர்ந்திருக்கிறான். இவ்வளவு நாட்கள் நோன்பிருந்ததின் நோக்கமே அவன் பாதம் பற்றுவதுதானே! பரவசமாகிற ஆண்டாள் அவன் திருப்பாதமலர்களை, அவன் அவதாரப் பெருமைகளை தமிழ் மணக்கப் போற்றி பாடுகிறாள்.

அவள் தமிழில் உறுகிவிட்டான் போலும் கண்ணன். என்ன வேண்டும் கேள்? எனக் கேட்டானோ! அவளும் கண்ணனை உணர்ச்சி பெருக்கோடு, மாலே! மணிவண்ணா! ஆலினிலையாய்! என்றழைத்து அவனிடம் பாவை நோன்பிருந்து தாங்கள் வேண்டுவதாய் சிலவற்றை பட்டியலிடுகின்றாள்

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!

மால் என்றால் கருமை என்று ஒரு பொருள். மாலே! கருமையானவனே! மணிவண்ணா! கருநீல மணியினைப் போன்ற கருமைநிறத்தோனே!

மால் என்றால் பெருமை என்ற பொருளும் உண்டு. மிகுந்த பெருமை உடையவன். அவனது பெருமை உயர்வற உயர் நலங்கொண்டது. மிகப்பெரியவன் அப்படி பரம்பொருளாய் இருக்கக்கூடியவன், பக்தர்கள் அழைத்தால் இறங்கி வந்து அருளக்கூடியவன். கண்ணனாய், மணிவண்ணனாய் இறங்கி வந்து அருள்கின்றானல்லவா!

இவ்வாறு இறைவனின் பெருமையும் அவனது எளிமைமையும் குறிப்பதாக அமைகிறது இவ்வரிகள்.

அதுமட்டுமல்ல, ஊழிகாலத்தில் இறைவன் கருமை நிறத்தானாய் ஆலிலைமேல் பிரளயத்தில் மிதந்துக் கொண்டிருப்பாராம். ஆண்டாளும் முன் பாசுரத்தில் ஊழிமுதல்வன் உருவம் போல் மெய் கருத்து என்று தானே பாடியிருக்கிறாள். அதனால் தான் ஆலிலையும் இறைவனை என்றும் பிரியாத ஆதிஷேஷன் வடிவமாக பார்க்கப்படுகிறது.

இப்படி கருமை நிறத்தவனே! ஆலினிலையாய்! என்றழைப்பது அவன் ஊழி முதல்வனாய் நிற்பதைக்காட்டுகிறது. மணிவண்ணா! நாங்கள் அழைத்ததும் வரக்கூடியவனாக எளிமையானவனாய் இருக்கும் நீயே ஊழிமுதல்வனாகவும் இருக்கிறாய். உன்னிடம் இல்லாதது எதுவும் உண்டோ! எங்களுக்கு அருள்வாய் என்கிறாள். இறைவனின் பெருமையையும் நமது சிறுமையையும் உணர்வது சரணாகதியில் ஒரு முக்கியப் படி.

ஊழி முதல்வனாய் அழித்தும் மீண்டும் படைத்தும் நிற்கக்கூடிய இறைவனை வேண்டி, மாயையில் விளைந்த சில பொருட்களையா கேட்பாள் ஆண்டாள். அவள் கேட்கும் ‘பொருள்’ என்ன என்பதைப் பார்ப்போம்.

முதலிலேயே, மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்! என்று எம் முன்னோர்கள் வழிவழியாக செய்தார்கள். அவ்வாறே நாங்களும் பாவை நோன்பிருப்பதற்கு எங்களுக்கு வேண்டியதைக் கேட்கிறோம். நீ அருள்வாயாக எனக் கேட்கிறாள்.

முன்னோர்கள் செய்ததை கடைபிடிப்பது என்பது வைணவ தத்துவத்தின் மிக முக்கிய நெறி. முன் பாசுரத்திலும் ‘செய்யாதன செய்யோம்’ என்றாளல்லவா! முன்னவர் காட்டிய நெறி வழுவாமல் அவர்களைப் பற்றி நடக்கவேண்டும் என்பதையும் குறிப்பதாய் அமைகிறது பாடல். முன்னவர் என்பது ஆண்டாளுக்கு முன்னவராகிய ஆழ்வார்களைக் குறிப்பதாக கொள்வர். அவர்கள் காட்டிய நெறியில் சரணாகதி அடைவதே ஆண்டாள் நமக்குக் காட்டும் வழி.

ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள்

பாஞ்ச சன்னியம் என்னும் சங்கு இறைவனின் பஞ்ச ஆயுதங்களில் ஒன்று. கண்ணன் தன் குருவான சாந்தீபனி முனிவரின் சொல்லுக்கேற்ப பஞ்சகன் என்ற அசுரனைக் கொன்று அவனை சங்காக்கி தன்கையில் கொண்டாராம். அதனால் அச்சங்கம் ஒலிக்கும் பொழுது அனைவரையும் நடுங்கச் செய்யுமாம். பாஞ்ச சன்னியம் தீயவருக்கெல்லாம் நடுக்கத்தை உண்டாக்கும். சரணடைந்தவருக்கோ நற்கதியைக் காட்டும். உலகத்தையெல்லாம் நடுங்கச் செய்யும் பாஞ்சசன்னியம் போன்ற சங்குகள் நிறைய வேண்டுமாம் ஆண்டாளுக்கு. ஏன்?

முன்பாசுரத்தில் ‘வெள்ளை விளிச்சங்கை’ நாம் பார்த்தோம்! இறைவன் எழுந்தருளி இருக்கும் கோவில்கள் திறக்கப்பட்டதை அறிவித்து பக்தர்களை விளிப்பதால் விளிச் சங்கம் என்று பார்த்தோமல்லவா! அப்படி உலக ஜீவர்கள் அனைவரையும் நாங்கள் அழைக்க வேண்டும். அழைத்து உன் திருப்பாதங்களில் சரணடையும் வழி காட்ட வேண்டும் எனவே பல சங்குகள் வேண்டும். சங்கம் ஓம்கார நாதத்தைக் குறிப்பதாகவும் கூறுவர்.

உன் பெருமையை பறைசாற்ற எங்களுக்கு பெரிய பறைகள் மிகுதியாக வேண்டும். பல்லாண்டிசைப்பார்கள் பலர் வேண்டும் எனக் கேட்கிறாள். வைணவ சரணாகதியில் பாகவதர்கள் என்றழக்கப்படும் பக்தர்கள் அனைவருடன் சேர்ந்தே இறைவனை அடைய வேண்டும். இது தனிமனிதராக செய்யப்படுவதல்ல. ஞான யோகம் என்பது தனிமனிதர் கடைபிடித்து அடைய வேண்டியது. ஆண்டாள் காட்டும் பக்தியோகம் பலரோடும் இணைந்து செய்யவேண்டியது. அதனால் இறைவனுக்கு பல்லாடிசைப்போர் பலர் வேண்டும் எனக் கேட்கிறாள்.

கோல விளக்கு, நமது அறியாமை இருளகற்றி ஞான ஒளி காட்ட விளக்குகள். இங்கு விளக்குகள் என்பது ஆச்சாரியர்கள் அதிலும் முதன்மை ஆச்சாரியராக கருதப்படும் நப்பின்னை விளக்காக இருந்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்பது ஆண்டாளின் வேண்டுதல்.

கொடியே, விதானமே. கொடி என்பது அடையாளச் சின்னம். கோவில்களில் கொடி என்பது இறைவனின் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத் தொழிலையும் குறிப்பதாக அமைந்திருக்கும். அதனால் கொடிமரத்தை இறைவனாக பாவித்து வழிபடுவதுண்டு.

விதானம் என்பது மேற்கூரை. உலக இன்பத் துன்பங்களிலிருந்து எங்களைக் காக்க இறைவன் அருள் என்ற விதானம் வேண்டும்.

வைணவ தத்துவத்தின் படி, முன்னவர் காட்டிய வழியில் பாகவதர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரே எண்ணமாக இறைவனைச் சரணாகதி அடைய வேண்டும் என்பதாக இப்பாடல் அமைகிறது.

இப்படி இறையனுபவம் பெற்றதும் நாம் செய்யும் அன்றாட காரியங்கள் கூட இறைவனுக்கானதாகவே இருக்கும் என்பதை அடுத்தப்பாடல் அழகாக காட்டுகிறது.

வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே!

வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே!

கண்ணா! ஒருத்தி மகனாய் பிறந்தாய், ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்தாய்! தேவகியின் மகனாக அவதறித்த நிமிடமே மாயம் செய்து ஓரிரவில் யமுனா நதிதீரத்தில் யசோதையின் மகனாக ஒளித்து வளர்ந்தானல்லவா!

அப்படி நீ வளர்வதை தாங்கிக் கொள்ள முடியாத கம்சன் உனக்கு தீங்கு நினைக்க, சிறுவனான நீயோ அவன் நோக்கத்தை, கருத்தை பிழையாக்கி அவன் வயிற்றில் நெருப்பிட்டாற்போல் மரண பயத்தால் கலங்கச் செய்து உயர்ந்தவனாய் நின்றாய். உன்னைப் போற்றி நாங்கள் வந்தோம். எங்களை ஏற்று கொண்டு கருணை செய்வாயானால், திருமகளின் செல்வமாகிய உன்னையும் உன் கைங்கர்யத்தையும் பெற்று எங்கள் வருத்தமெல்லாம் தீர்ந்த்து மகிழ்வோம் என்று கண்ணனிடம் தம் விருப்பத்தை வேண்டுகிறாள் ஆண்டாள்.

கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே!
இந்த வயிற்றில் நெருப்பு என்பது என்ன?

‘பிள்ளைகளை வெளியில் அனுப்பிவிட்டு வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டது போல் உள்ளது’ என்று பெரும்பாலும் பெண் குழந்தைகளின் பெற்றோர் கூறுவதைப் பல நேரங்களில் நாம் கேட்டிருப்போம்.

இப்படி கூறும் வழக்கம் சில குளிர் பிரதேசங்களில் காணப்படும் ஒரு வழக்கத்தை ஒட்டி ஏற்பட்டது. காஷ்மீர் போன்ற குளிர் பிரதேசங்களில் இன்று கூட ஒரு சட்டியில் நெருப்பை வைத்து அதை தங்கள் கழுத்திலிருந்து வயிறு வரை கட்டித் தொங்க விட்டுக்கொண்டு அதை கம்பளி போர்வையால் மூடியவாறு தங்கள் அன்றாட காரியங்களைச் செய்வர். வயிற்றுப் பகுதிவரைத் தொங்கவிட்டால் தான் குளிர் நெஞ்சைத் தாக்காது. இதமாக இருக்கும். இது அந்த கடுங்குளிரைத் தாங்க அவர்கள் செய்யும் வழக்கம். ஆனால் அப்படி நெருப்பைக் கட்டிக் கொண்டு நடக்கும் போது சர்வ ஜாக்கிரதையாக நடக்கவேண்டும். இல்லையென்றால் விபரீதமாகிவிடும். எனவே அவர்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பர்.

இப்படி கவனம் சிதறாமல் பயத்துடன் இருக்கச் செய்வதைத் தான் வயிற்றில் நெருப்பக் கட்டிக் கொள்ளல் என்பர். கம்சனுக்கு மரண பயத்தை உண்டாக்கிக் கொண்டே இருந்ததால் கண்ணன் அவன் வயிற்றில் நெருப்பாகி நின்றானாம்.

அதுமட்டுமல்ல பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பு ஆக்கவும் செய்வது அழிக்கவும் வல்லது. ஐம்பூதங்களால் ஆன நம் உடலில் நெருப்பின் முக்கியத்துவம் மிகவும் அதிகமானது. நமது உடல் மனம் புத்தி அல்லது ஆளுமை ஆகிய அனைத்திற்கும் அடிப்படையானது நம்முடலில் இருக்கும் நெருப்பு. உடலில் சூடிருந்தால் தானே நாம் வாழ்கிறோம் என்பது நிச்சயமாகிறது. இந்த நெருப்புகள் சரியாக பயன் படுத்தப்படும் போது நம் வாழ்விற்கு காரணமாகின்றன. தவறாக பயன்படுத்தப்படும் போது மரணத்திற்கும் வழிவகுக்கின்றன. கம்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற கண்ணனை எதிரியாக நினைத்ததால் அவனுக்கு மரண பயத்தை உண்டாக்கி அவனை அழித்தான் கண்ணன்.

இவ்விருப்பாடல்களிலும் கண்ணனைக் இறைவனாகக் கண்டு அவன் அவதாரங்களைப் போற்றி பாடி மகிழ்ந்த ஆண்டாள், மீண்டும் ஆயர் சிறுமியாக தங்கள் நோன்பிற்கு வேண்டுவனவாற்றை பட்டியலிடுகிறாள். அவள் வேண்டுவன என்னவாயிருக்கும் எல்லாம் கண்ணனுடன் தொடர்புடையதாகத்தானே இருக்கும். பார்ப்போம்.

Saturday, 15 April 2023

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

சங்க இலக்கியங்களில் ஐந்து நில காட்சிகளும் மிக அழகாக பாடப்பட்டிருக்கும். அப்படியே இந்த பாடலில் ஒரு அழகான குறஞ்சி நிலக் காட்சி காட்டப்பட்டிருக்கிறது. ஆண்டாளோ மிகச் சிறுமி, ஸ்ரீவில்லிபுத்தூரைத் தாண்டி அறியாதவள். ஆயர் பெண்ணாகத் தன்னை எண்ணிக் கொண்டுதானே பாடல்களை பாடுகிறாள். என்றாலும் அவள் படைக்கும் இவ்வியற்கை காட்சி நம்மை வியக்க வைக்கும். இன்று கூட நம்மில் பலர் சிங்கத்தை அதன் கூட்டில் பார்த்திருப்போம், காட்டில் பார்த்திருப்போமா என்பது சந்தேகமே!

ஒரு நல்ல மழைக்காலத்தில் ஆண் சிங்கம் ஒன்று தன் பெண்சிங்கத்துடன் கூட்டில் உறங்கிக் கிடக்கிறது. அது தீ போன்ற தன் கண்களை விழித்து, தன் பிடறிமயிர் சிலிர்க்க முறித்துக் கொண்டு வீரமாக கர்ஜித்து எழுந்து வருவது போல, காயாம்பூ போன்று நீல நிறங்கொண்ட கண்ணா உன் இடம் விட்டு நீயும் எழுந்து வந்து சிங்காசனத்தில் எழுந்தருளி நாங்கள் வந்த காரியத்தை ஆராய்ந்து அருள் என வேண்டுகிறாள்.

இப்பாடல் நமக்கு நரசிம்ம அவதாரத்தை நினைவூட்டுகிறதல்லவா! பிரகலாதனைக் காக்க, இரண்யனை அழிக்க ‘வேரி மயிர்பொங்க, மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு’ தூணிலிருந்து வெளிப்பட்டு வந்தானல்லவா! பிரகலாதனுக்காக இறங்கியதைப் போல் எங்களுக்காகவும் இறங்கி நாங்கள் வந்த காரியத்தை ஆராய்ந்து அருள்.

இவர்கள் வந்த காரியம் என்ன? என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான், இன்றுயாம் வந்தோம் என்று அடுத்த பாடலில் அதையும் சொல்லுகிறாள். உன் சேவகத்தையே பறையாக வேண்டி வந்தோம். எமக்கிறங்கி அருள் என்று வேண்டிய ஆண்டாளின் குரல் கண்ணனுக்கு கேட்டு விடுகிறது. இதோ அவன் எழுந்து வந்துவிட்டான். அவன் அடி போற்றி ஆண்டாள் பாடும் பாடலை அடுத்து காண்போம்.

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!

கண்ணா உன் இருப்பிடம் விட்டு எழுந்து எங்கள் மன சிம்மாசனத்தில் வந்து அமர். அமர்ந்து, நாங்கள் வந்த காரியம் கேட்டு ஆராய்ந்து அருள் என்று அழைக்கிறாள் ஆண்டாள். கண்ணனும் அவள் குரல் கேட்டு எழுந்து வருகிறான். அவன் அடிமேல் அடி வைத்து நடந்து வருகிறான். அவன் நடையழகை காண்கிறாள் ஆண்டாள்.

ஈரடியால் மூவுலகையும் அளந்த கால்களல்லவா அவை. அன்று மகாபலி சக்ரவர்த்தியின் ஆணவத்தை அழிக்க வாமனனாக வந்தவன் திருவிக்கிரமனாக உயர்ந்து உலகளந்து நின்றான். அதி பலசாலியான மகாபலி சக்கரவர்த்தியும் அபிமான பங்கனாய் நின்றான்! அப்படி அவனை கர்வபங்கம் செய்த அடிகளல்லவா இவை. சரணாகதி என்று அச்சேவடிக்குத்தானே சேவகம் செய்ய வேண்டப்போகிறாள் அவள். அதனால் அவன் அடியைப் போற்றுகிறாள். 
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!

ஆண்டாள் கண்ணனின் அவதார பெருமைகளையெல்லாம் பேச ஆரம்பிக்கிறாள் அடுத்ததாக

சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி!

வாமன அவதாரத்தில் மூன்றாம் அடி வைக்க இடமில்லாமல் போனதால் அன்று நிறைவு செய்யாது விட்டதை நிறைவு செய்யும் விதமாக இராமனாக 14 வருடங்கள் காட்டில் நடந்தானல்லவா.

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே

என்று சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் காட்டப்பட்டிருக்கிறது. ஆண்டாளும் அதையே எண்ணினாள் போலும், அதனால்தான் முதல் அடியில் உலகளந்த கால்களைப் பாடியவள் அடுத்த அடியில் தென்னிலங்கைக்குச் சென்று இராவணனை அழித்த அவன் வெற்றியைப் பேசுகிறாள்.

இராமாவதாரம் என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டி. பல நிலைகளிலும் மனிதர் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான நெறிகளைக் காட்டுகிறது இராம காதை. எனவே தான் எல்லாம் வல்லவனான பெருமாள் அவதார நிலைக்கு கட்டுப்பட்டு முறைதவறாது இலங்கைக்குச் சென்று இராவண வதத்தை முடித்தான் என்று சொல்வதுண்டு. அதனால் தான் ஆண்டாளும் சென்றங்கு செற்றாய் என்று அவன் வெற்றியைப் போற்றுகின்றாள்.

அடுத்த வரியில் ஆயர் சிறுவனாய், கண்ணன் அவதாரத்தையே பேசுகிறாள். கம்சன் அனுப்பிய அரக்கன் சக்கர வடிவில் வந்து காத்திருக்க, கண்ணன் தன் சின்ன பாதங்களால் உதைத்து அவனை வதைத்தானல்லவா! கண்ணன் நடந்து வரும் போது மிகப்பெரிய காரியம் செய்த அந்தச் சின்னஞ்சிறு பாதங்கள் ஆண்டாளுக்கு தெரிகின்றது.

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!

பொன்றுதல் என்றால் கண்ணுக்கேத் தெரியாமல் அழிந்துப் போதல். ஆம் அப்படித் தான் சக்கரமாய் வந்த அசுரன் அழிந்தான். அவன் மட்டுமா! இதோ நம் பிறவிச் சக்கரத்தையும் அவ்வாறே தூளாக்கி அழித்து காக்க வல்லது அவன் பாதங்களல்லவா! அவன் புகழ் பாட நம் பிறவி சக்கரம் அழியும் எனவே புகழ் போற்றி என்கிறாள்.

கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி!

கன்று வடிவிலும் விளாம்பழ மரமாகவும் இரு அரக்கர்கள் சின்னக் கண்ணனை அழிக்க கம்சனால் அனுப்பப்படுகிறார்கள். கண்ணன் சிறுவன் கன்றுகளுடன் மேய்ச்சல் காட்டில் விளையாடிக்கொண்டிருக்கிறான். என்றாலும் கன்றோடு கன்றாக வந்த அசுரனை அவனா அறியமாட்டான். கன்றை தூக்கி விளாம்பழ மரத்தினைப் பார்த்து எறிய இருவரும் அழிகிறார்கள். அப்படி அவர்களை வதம் செய்து விட்டு ஒன்றும் அறியாதவன் போல் குழலூதிக் கொண்டு தன் பசுக்கூட்டத்தில் ஒரு காலை மடக்கி புன்முறுவலோடு நின்றானாம் சிறுவன் கண்ணன்.

மாடு மேய்க்கும் கண்ணன் தன் குழலுடன் இருக்கும் அழகை இன்றும் கொண்டாடுகிறோம் அல்லவா. அதனால் தான் ஆண்டாளும் எறிந்த கைகளைப் பாடாமல் அழகாய் நின்ற திருவடிகளையே ‘கழல் போற்றி’ என்று பாடுகிறாள்.

திருவடி சேவகம் தானே இவள் வேண்டி வருவது. அவள் கருத்தெல்லாம் பாதமலர்களிலேயே இருப்பதில் ஆச்சரியமல்லவே!

அடுத்து கோவலர்களைக் காக்க கோவர்த்தனத்தை குடையாக பிடித்து கோவிந்தனாக நின்றானல்லவா!

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!

ஆம்! நீயே கதி என்று நம்பிவந்த அக்கோவலரை காத்து நின்ற உன் குணம் போற்றி. கர்வம் தொலைந்து நின்ற இந்திரனை மன்னித்தருளிய உன் குணம் போற்றி! நீ குண சீலனல்லவா! எங்களுக்கும் நீ அருள வந்திருக்கிறாய். உன் குணம் போற்றி என்று பாடுகிறாள் ஆண்டாள்.

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி!

பசுக்கள் ஒரு நாட்டின் செல்வங்களாக கருதப்பட்டன. அவற்றை கவர பகைவர் நினைப்பது உண்டு. அப்படி பகை வரும் பொழுது, இருக்கும் இடத்திலிருந்தே வேல் கொண்டு தாக்கி பகையை விரட்டுவது கோவலர் செய்கை. அப்படி எங்களைக் காப்பதற்காக இருக்கும் நின்கையில் வேல் போற்றி! என்று அவன் ஆயுதத்தையும் பாடுகிறாள் ஆண்டாள்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு
அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

பெரியாழ்வார், கண்ணன் சேவடிக்கு திருக்காப்புச் சொல்லி பாஞ்ச சன்னியத்திற்கும், ஆழிச் சக்கரத்திற்குமல்லவா பல்லாண்டு சொல்கிறார். அவள் வளர்த்த பெண்ணல்லவா, கண்ணன் கை வேலையும் போற்றுகிறாள்.

வாயாற, மனதாற, தமிழாற பாடிப் போற்றியவள்

என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

என்று தமது நோக்கத்தையும் சொல்லுகிறாள். உனக்கு கைங்கர்யம் செய்வதுதான் நாங்கள் வேண்டும் பறை. நீ இரங்கி அருள்வாய் கண்ணா! என்று வேண்டுகிறாள்.

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றுஎன்றுஉன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்


இந்த போற்றிப் பாடலை தினம் தினம் பாட அவன் அருள் பெறலாம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

Thursday, 13 April 2023

போற்றியாம் வந்தோம்

போற்றியாம் வந்தோம்

அடுத்த இரண்டு பாடல்களிலும் உன்னையே கதி என்று நாங்கள் சரணடைந்தோம். உன் கருணை பார்வையால் எங்கள் பாவங்களையெல்லாம் போக்கி அருள் என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து — ஏலோர் எம்பாவாய்.

இவ்வள்ளல் பெரும் பசுக்களை நாம் முன்பே பார்த்தோம் அல்லவா? ஒரு கலத்தில் பாலை ஊற்றினால் அது மிகுந்து வழியும். ஆனால் இப்பசுக்கள் பாலை சொரியும் வேகத்தில். மிகுதியாக பால் இருப்பின் வேகமாக சொரியும் அல்லவா! அந்த வேகத்தில் பால் எதிர் திசையில் மேலேறி பொங்குகிறதாம்.

ஆயர்பாடியில் வள்ளல் பெரும் பசுக்கள் மிகுந்து இருப்பது போல் வைணவ சமயத்தில் ஆச்சாரியர்கள் மிகுந்த ஞானம் உடையவர்களாக இருப்பர். மடை திறந்த வெள்ளமாய் ஞானத்தை அருளக்கூடியவர்கள். அவர்களை அடைந்த பக்குவப்பட்ட சீடர்கள் ஆச்சாரியருக்கு ஏற்ற கலங்களாய் ஞானத்தைப் பெற்று எதிர் பொங்கி மீதளிப்பவராய் இருப்பர்.

இப்படி மிகுந்த பால் பொழியும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அதிகமான எண்ணிக்கையில் கொண்ட நந்தகோபனின் மகனாக எங்களுக்காக இறங்கி வந்து அருள்பவனே! நீ கண்மலர்வாய். நீ பரம் பொருள். இவ்வுலகின் தோற்றத்திற்கு காரணமான சுடர், நீ வலிமையுடையவன், பெரியவன் என்றாலும் எங்களுக்காக கண்ணனாக இறங்கி அருள்பவன்.

பகைவர்கள் தம் வலிமை இழந்து சரண் என்று உன் வாசற் படியில் வந்து நிற்பதைப்போல் நாங்கள் உன் வாசல் வந்து நிற்கின்றோம். வலிமை தொலைத்த பகைவர் போல் உன்னை சரணடைந்தோம் என்றாலும் அவர்கள் ஆற்றாது வந்து நின்றார்கள். நாங்களோ நீயே சரணடைய வேண்டியவன் என்பதை உணர்ந்து உன்னைப் போற்றி வந்தோம் என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.

அடுத்தப் பாடலில்

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

இங்கு அங்கண் என்ற சொல் இரு இடத்தில் பயின்று வந்து அழகிய இடமாகிய பரந்த உலகம் என்ற பொருளும் அழகிய கண் என்ற பொருளும் தருவது அறிய தக்கது.

வலிமை தொலைந்த பகைவர் மட்டுமல்ல, அழகிய பரந்த உலகின் வலிமைமிக்க அரசர்களும் கூட நீயே உயர்ந்தவன் என்பதை உணர்ந்து தமது அபிமானம், கர்வம் பங்கப்பட்டுப் போக உன்னைச் சரணடைந்ததைப் போல் நாங்களும் ‘நான்’ என்ற எங்கள் அகங்காரம் அற்று போக, எல்லாவற்றையும் துறந்து, நீயே சரண் என்று வந்துள்ளோம்.

மகாபாரதத்தில் துர்யோதனனும் அர்ஜுனனும் கண்ணனைக் காண வருகிறார்கள். அவன் துணை நாடி வருகிறார்கள். துர்யோதனன் தலை பக்கமும் அர்ஜுனன் பவ்யனாக திருவடி நிழலிலும் நிற்கிறார்கள். கண் மலர்ந்த கண்ணன் அர்ஜுனனைத்தானே முதலில் பார்த்தான். அர்ஜுனனுக்கு தன்னையும் துர்யோதனனுக்கு தன் படையையும் அளித்தானல்லவா! இப்படி திருவடி அடைபவருக்குத் தன்னையே தருபவனல்லவா!!

அவ்வாறே உன் பாதங்களைச் சரணடைந்த எங்களை, கிங்கிணி வாய்போல் சிறிதாக திறந்திருக்கும் உன் தாமரை கண்களால் காணமாட்டாயோ! சூரியனும் சந்திரனும் ஒன்றாக எழுந்ததைப் போல் ஒருகண்ணில் உலகை காக்க வெப்பமும் மறுகண்ணில் தண்ணளியும் கொண்டு உன்னிரு அழகிய கண்களால் எங்களை நோக்கினால் எங்கள் சாபங்கள் எல்லாம் தீர்ந்து அழியும் அல்லவா!

நம்மால் நடக்கக் கூடியது எதுவுமில்லை என்று காரியங்களின் பலனில் கருத்தை வைக்காமல், அனைத்தும் அவனுக்காகவே என்று எண்ணி அவனை சரணடைந்தால், பகவான் உன் பாவங்களை எல்லாம் போக்கி மோட்சத்தை அருள்வான் என்பது சரம மந்திரத்தின் கருத்து.

இப்படி மிக அற்புதமாக சரம ஸ்லோகத்தில் சொன்னது போல் சரணடைவதைத்தானே இவ்விருப்பாடல்களும் நமக்கு எளிதாக காட்டுகின்றன. இப்பாடல்களைப் பாடினாலே, இப்பாடல்களில் உள்ள அவன் நாமங்களைச் சொன்னாலே உண்மையான மெய் அறிவை நாம் பெறுவோமல்லவா!!

Sunday, 9 April 2023

மலர்மார்பா! வாய் திறவாய்!! திருவே துயிலெழாய்!!

மலர்மார்பா! வாய் திறவாய்!! திருவே துயிலெழாய்!!

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

குத்து விளக்கெரிகிறது. அங்கிருக்கும் கட்டில் யானைத் தந்தங்களால் ஆனது. அதன் மேலிருக்கும் மெத்தையோ, அழகு, மணம், மென்மை, குளுமை, தூய்மை ஆகிய ஐந்து விதமான சிறப்புகள் கொண்டது. அதன் மேல் கொத்தாக அலர்ந்த பூவணிந்த கூந்தலை உடைய நப்பின்னை…

முதல் நான்கு வரிகளிலும் நப்பின்னையைப் பற்றிய வர்ணனைதான். என்றாலும் கண்ணனைத்தான் அழைக்கிறாள். அப்படிப்பட்ட நப்பின்னையை அணைத்ததனால் மலர்ந்த மார்பினை உடையவனே உன் வாய் திறவாய்!

நப்பின்னையை மணக்க கண்ணன் 7 ஏறுகளைத் தழுவி அடக்கினான் என்பது வரலாறு. அதனால் நப்பின்னை அவனது வீர மனைவியாகக் கருதப்படுகிறாள். எனவே அவளுக்கு யானைத் தந்ததினாலான கட்டில்.

அக்கட்டிலில் அன்னத்தின் சிறகு, இலவம் பஞ்சு, கோரைப்புல், மலர்கள், மயிலிறகு போன்ற ஐந்து வகைப் பொருட்களால் செய்யப்பட்ட ஐந்து வித சிறப்புகள் கொண்ட மெத்தை. அம்மெத்தையில் கொத்தலர் பூங்குழலியாக நப்பின்னை படுத்திருக்கிறாள்.

அவள் கூந்தலில் பூச்சூடி இருக்கிறாள். அப்பூக்களெல்லம் செடியில் இருக்கும் போது மலரவில்லையாம் அவள் கூந்தலில் தான் அலர்ந்தனவாம். அப்படி கொத்துக் கொத்தாக மலர்ந்த பூக்களை அணிந்திருக்கிறாள் அவள்.

இப்படிப்பட்ட நப்பின்னையை அணைத்துக் கிடந்ததால் மலர்ந்த மார்பினனாக இருந்தானாம் கண்ணன். ஒருவன் எப்பொழுது விரிந்த மார்பினனாக இருப்பான். ஒன்று வீரத்தில் மற்றொன்று காதலில். இவன் ஏழு எருதுகளை அடக்கிய வீரன், நப்பின்னையின் காதலில் கட்டுண்டவன். எனவே மலர்ந்த மார்பினனாக இருப்பது இயல்பு தானே!

அடுத்து மைத்தடங் கண்ணினாய் என்று நப்பின்னையின் கண்ணழகைக் காட்டுகிறாள் ஆண்டாள். மையிட்டதால் இவள் கண்களில் தடம் இருந்ததா? அல்லது மைநிற கண்ணனையே கண்டதால் அவன் நிறம் இவள் கண்களில் மைத்தடமாக படிந்து விட்டதா? எப்படியும் அவள் மைந்தடங்கண்ணினள்.

மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

நீ உன் மணாளனை எப்போதும் துயிலெழவே விட மாட்டாயோ! அவனை சிறு பொழுதும் பிரிய மாட்டாயோ! இச்செயல் உனது தன்மைக்கும், குணத்திற்கும் உகந்ததல்ல, உனது பெருமைக்கும் உகந்ததல்ல என்கிறாள். இங்கு தத்துவம் அல்ல என்பது கண்ணனுடன் கலந்து இருக்கக் கூடிய நப்பின்னையின் தன்மைக்கு அது உகந்ததல்ல என்கிறாள்.

அடுத்த பாடலில்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.

முப்பத்து மூன்று தேவர்களும் பரிவாரங்களும் அசுரர்களால் துன்பத்திற்காளாகும் போது அவர்களுக்காக அவதாரம் செய்து அவர்களைக் காப்பவன். இராமாவதாரத்தில் இராவணனை அழிக்க, தசரதன் மகனாக தானும், ஜனகர் மகளாக பிராட்டியும் தேவர்களெல்லாம் குரங்கு படைகளாகவும் பிறந்து அவர்களுக்கெல்லாம் முன் சென்று இராவணனை வதைத்து தேவர்களைக் காத்தானல்லவா! அப்படி அவர்களுக்கு முன் சென்று அவர்களின் நடுக்கத்தை தவிர்க்கச் செய்யும் வலிமைப் பொறுந்தியவன். வாமனனாக மகாபலியின் முன்நின்று தேவர்களை காத்தானல்லவா! அதனாலும் அவன் முன் சென்று நடுக்கத்தைப் போக்குபவன்.

அதுமட்டுமல்ல, இறைவனின் படைப்பான இவ்வுலகத்தை தேவர்கள் கடமைத் தவறாது காப்பர். வருணன் மழையாகவும் சூரியன் வெப்பமாகவும் கடமைதவறாது காப்பதில்லையா? இருந்தாலும் தன் அடியவருக்கு ஒரு துன்பமென்றால் அத் தேவர்களைக்காட்டிலும் முன்பாக விரைந்து வந்து, அவர்கள் நடுக்கத்தைப் போக்குபவன். இப்படியும் கொள்ளலாம்.

செப்பமுடையாய், யார் யாருக்கு எது எது வேண்டுமோ, எது தகுதியுடையதோ அதை ஆராய்ந்து சரியாக அருளும் நேர்மையுடையவன். ஆற்றலுடையவன். பகைவருக்கு பயத்தை உண்டாக்குபவன். இறை நெறிக்கு, அவன் அடியவருக்கு துன்பம் செய்பவரே இங்கு செற்றார் எனப்படுகிறார். அப்படி பட்டவர்களுக்கு வாழ்வில் பயத்தை உண்டாக்கக்கூடியவன்.

அப்படி பயத்தை உண்டாக்கினாலும் விமலனாக இருக்கிறார். மலம் என்றால் குற்றம் விமலன் என்பது குற்றமற்றவன் என்பதாகும்.

அடுத்து, மிகுந்த அழகும் பூரண குணங்களும் கொண்ட நப்பின்னையை, திருவே! என்றழைக்கிறாள்! திருமாலுக்கு திருவாக விளங்கக்கூடியவள் தாயார். மால் என்றால் பெருமை திருமால் என்பதால் திருவைக் கொண்டதால் பெருமைக்குறியவன் என்றாகிறது. இப்படி தாயாருடன் இருப்பதாலேயே பெருமைமிகுந்தவனான கண்ணனைத்தான் ஆண்டாள் வேண்டுகிறாள்.

திருவே உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மைநீராட்டு. இன்று கூட மார்கழி நாட்களிலும் நோன்பு நாட்களிலும் கண்ணாடி சீப்பு, விசிறி, முறம் போன்றவை வைத்துக் கொடுக்கும் வழக்கம் உண்டு. விசிறி போல், நமக்காக செய்யும் காரியம் ஆனாலும் சிறிதாவது பிறருக்கும் உதவவேண்டும். அது மட்டுமல்ல புற அழகைக் காட்டும் கண்ணாடி உள்ளிருக்கும் இறைவனையும் காட்டவேண்டும், எனவே அவற்றுடன் கண்ணனையும் தந்தருளாய்!

கண்ணா, தகுதியானதைப் பார்த்து அருளக்கூடியவனே உன்னையே சரணென்று வந்தோம், எங்களுக்காக நீ எழுந்து அருள்வாய்!

இப்படி, மைத்தடங்கண்ணினாய், கொத்தலர் பூங்குழல் நப்பின்னை நங்காய், திருவே! என்று பிராட்டியையும், மலர்மார்பா, கப்பம் தவிர்க்கும் கலியே! செப்பமுடையாய்! திறலுடையாய்! வெப்பம் கொடுக்கும் விமலா! என்று கண்ணனையும் அழைக்கும் ஆண்டாள், இவ்விரு பாடல்களிலும் கண்ணனையும் பிராட்டியையும் இணைத்தே பாடுகிறாள். முக்கியமாக நப்பின்னையுடன் கலந்து இருக்கும் கண்ணனையேப் பாடுகிறாள் ஆண்டாள்.

இறைவனின் சக்தியின் வடிவமே தாயார். தாயாரின் புருஷகாரமே இறைவன். இருவரும் பிரிந்திருப்பதே இல்லை. உயிர்களின் உன்னத நோக்கமாகிய இறைவனை அடைய தாயாரே வழிகாட்டுகிறாள் என்பது வைணவ தத்துவம்.

ஸ்ரீமன் நாராயண சரனௌ சரணம் பிரப்த்யே
ஸ்ரீமதே நாராயணாய நம:

என்கிற த்வய மந்திரம் இதையே குறிக்கிறது. ஸ்ரீ என்றால் இலக்குமி. ஸ்ரீ யுடன் கூடியவனாக இருக்கக்கூடிய நாராயணனின் பாதங்களே சரணம் என்று பற்றுகிறேன். பிராட்டியும் பெருமாளும் சேர்ந்திருக்கும் கோலத்தில் சகல கைங்கர்யங்களும் செய்வதையே வேண்டுகின்றேன் என்பது பொருள்.

எம்பிரானும் பிராட்டியும் சேர்ந்தநிலையில் அவர்களுக்கு கைங்கர்யம் செய்வதையே வேண்டுகிறாள். ஆண்டாள். இங்கு அடைய வேண்டியவனும் தாயாருடன் சேர்ந்த கண்ணனே! அருள வேண்டியதும் தாயாருடன் சேர்ந்த கண்ணனே!

எனவே, கண்ணனை அடைய வழிகாட்ட வேண்டிய நீ இவ்வாறு கண்ணனை எமக்கருளாமலிருக்கலாமா? அது உன் தன்மைக்கு உகந்ததல்லவே!

அதுமட்டுமல்ல நீ எங்கள் தாயாக இருக்கிறாய். குழந்தைகள் கேட்பதை தாய் மறைத்துக்கொள்வாளா? அது தாய்க்கு பெருமையல்லவே! எனவே கண்ணன் அருள் பெற நீ உதவுவாயாக என்று வேண்டுகிறாள்

இங்கு இராவணனைப் போல் இணைந்தவர்களைப் பிரிக்க நினைக்கவில்லை ஆண்டாள். அணைத்தவாறே வாய் திறவாய்! என்கிறாள். மலர்ந்த மார்பினனாய் இருக்கும் போது வாய் திறந்தால் நன்மையல்லவா உண்டாகும்.

வாய் திறவாய் என்றால், அவன் என்ன சொல்லவேண்டும் என்று ஆண்டாள் கேட்கிறாள்!

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ,
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:

என்ற சரம சுலோகத்தில் கண்ணன் சொன்னதைப் போலவே இன்று கண்ணனையே சரணாகதி என்று வந்த இவர்களுக்கு ‘மா சுசஹா’ என்று கூறி அவன் அருள வேண்டும் என்று தான் ஆண்டாள் வாய் திறவாய்! என்கிறாள்.

`மாசுசஹா' என்றால் ’எதற்கும் கவலைப்படாதே... உனக்கு எது நடந்தாலும் நான் துணையிருக்கிறேன்’ என்று பொருள்'' என்றார். போர்களத்தில் கண்ணன் அர்சுனனுக்கு சொல்லும் கீதோபதேசத்தில் இவ்வாறு சொல்கிறார். கருமத்தில் பலனைத் துறந்து என்னையே கதி என்று சரணடை, உனது பாபங்களை எல்லாம் போக்கி, மோட்சத்தைக் கொடுக்கிறேன். கவலைக் கொள்ளாதே! என்பதே இதன் கருத்து.

வைணவ சரணாகதியில் மந்திரோபதேசமாக மூன்று மந்திரங்கள் உண்டு.

1. ஓம் நமோ நாராயணாய ‘
என்ற எட்டெழுத்து மந்திரம்.

2. ஸ்ரீமன் நாராயண சரனௌ சரணம் பிரப்த்யே
ஸ்ரீமதே நாராயணாய நம:
என்கிற த்வய மந்திரம்

3. ஸர்வ தர்மான் பரித்யஜ்ய
மாமேகம் சரணம் வ்ரஜ,
அஹம் த்வா சர்வ பாபேப்யோ
மோக்ஷயிஷ்யாமி மா சுச:
என்ற சரம சுலோகம்.

இதன் உள்ளார்ந்த அர்த்தங்கள் பல பக்கங்களில் பெரியவர்களால் விளக்கப்படுகின்றது. திருப்பாவை இச்சரணாகதி தத்துவத்தை மிக எளிதாக கடைபிடிக்க வழிகாட்டுகிறது. இவ்விருப் பாடல்களும் த்வய மந்திரத்தின் விளக்கமாக அமைந்துள்ளது.

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை
நப்பின்னை சூடிய மலர்கள் கொத்து கொத்தாக அலர்ந்திருந்தனவாம்.

மலர்களின் பல நிலைகளை முன்பே பார்த்தோம். ‘போது’ என்று சொல்லக்கூடிய மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலையடைவது தான் அலர்தல். இங்கு ஒரு அழகான பாடல் அறிந்து மகிழதக்கது.

அவிழ்ந்தன தோன்றி; அலர்ந்தன காயா;
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை; மகிழ்ந்து இதழ்
விண்டன கொன்றை; விரிந்த கருவிளை;
கொண்டன காந்தள் குலை

இதில் தோன்றி, காயா, முல்லை, கொன்றை, கருவிளை, காந்தள் ஆகியன் மலர்கள். அவிழ்ந்தன, அலர்ந்தன, நெகிழ்ந்தன, இதழ் விண்டன, விரிந்தன, குலை கொண்டன என்பதெல்லாம் மலர்தலைக்குறிக்கும் பலச் சொற்கள் இப்பாடல் பொருள் பின்வரு நிலை அணியாக அமைந்துள்ளது. காயா அலர்ந்ததாம். காந்தள் குலையாக கொத்தாக மலர்ந்ததாம், இப்படித்தான் நப்பின்னையின் கூந்தலிலும் மலர்கள் கொத்து கொத்தாக அலர்ந்தனவாம். அதனால்தான் கந்தம் கமழும்குழலியாக இருந்தாளோ!!!

Friday, 7 April 2023

கந்தம் கமழும் குழலி! பந்தார் விரலி!

கந்தம் கமழும் குழலி! பந்தார் விரலி!

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

முதல் பாடலில் கண்ணனை எழுப்பினார்கள். ஆனால் அவன் எழவில்லை. பலதேவன் கூடவே இருப்பாரே அவர் மூலம் கண்ணனை எழுப்பலாமே! என பலதேவனையும் எழுப்பினார்கள். என்றாலும் கண்ணன் எழவில்லை. அப்பொழுதுதான் அவர்களுக்கு ஒன்று புலப்படுகிறது. கண்ணன் நப்பின்னையுடனல்லவா உறங்குகின்றான். அவளோ, கண்ணனை சிறிதும் பிரியாதவாளாயிற்றே! முதலில் அவளையல்லவா எழுப்பவேண்டும் என்று தெளிந்தவர்களாய் நப்பின்னையை எழுப்புகிறார்கள்.

அப்படி எழுப்பும் போதும் நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்! என்று அழைக்கிறார்கள். முதல் பாடலில் ஒரு தலைவனாக மக்களுக்கு வேண்டியதெல்லாம் கேட்காமலே தரக்கூடிய அறம் செய்யும் நந்தகோபாலா என்றழைத்தார்களல்லவா? அப்படிப்பட்ட தலைவனின் மருமகளே! என்றழைக்கும் போது அவள் தர மறுக்க முடியாதல்லவா?

அதுமட்டுமல்ல நாந்தகோபன் எப்படிப்பட்டவன், உந்து மதக்களிற்றன். களிறு என்றாலே வலிமைப் பொறுந்தியது, அதிலும் மதங்கொண்ட களிற்றின் வேகம் மிக அதிகமாயிருக்கும். அப்படி மதங்கொண்டு, உந்தி தள்ளி வர ஆயத்தமாயிருக்கிற களிற்றைப் போல் வலிமையானவன், பகைவரைக்கண்டு அச்சம் கொள்ளாத தோள்களை உடையவன். அப்படி வலிமையோடு எங்களைக் காக்கும் நந்தகோபனின் மருமகளே என்று அழைப்பதனால் அவன் பெருமையை இவள் நிலைநாட்ட வேண்டுமல்லவா! எனவே இவர்கள் கேட்பதைத் தயங்காது கொடுத்துக் காப்பாள் என்ற நம்பிக்கை இவர்களுக்கு.

ஒரு பெண்ணிற்கு தாய்வீட்டுப் பெருமை என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குறியது தான். என்றாலும் ஒரு பெண்ணின் அடையாளம் அவள் புகுந்தவீடுதான். அதனாலும் அவளை நந்தகோபன் மருமகளே! என்றழைக்கிறார்கள்.

கந்தம் கமழும் குழலி! இறைவன் வாசனைப்பொருள் அதில் வாசமாக இருப்பது தாயார். அவனது வாசம் அவள் கூந்தலில் நிறைந்திருப்பதால் கந்தம் கமழும் குழலி என்றழைக்கின்றனர்.

வந்தெங்கும் கோழி அழைத்தன காண், மாதவி பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவினக் காண்! என்று விடிந்ததன் அடையாளம் சொல்லி எழுப்புகிறார்கள்.

கோழி, விடிந்ததும், வெளிச்சத்தைக் கண்டதும் கூவக்கூடியது. அப்படி கோழிகள் பலவும் எல்லா இடங்களிலும் கூவ ஆரம்பித்துவிட்டன. நீ எழுந்து கதவைத் திறக்க மாட்டாயோ! அதுமட்டுமல்ல மாதவிப்பந்தலில் அமர்ந்து குயில்களும் கூவ ஆரம்பித்துவிட்டன.

கோழி கூவி எழுதல் இன்றும் கூட நாம் கேள்விப்படுவது தான். இன்று கோழி கூவி எழுந்தாலே மிகப் பெரிய விஷயம்.

இங்கு கோழிகள் அழைத்தன என்கிறாள். முந்தைய பாடலில் வெள்ளை விளிச் சங்கைப் பார்த்தோம் அல்லவா! அங்கு வெள்ளைச் சங்கு விளித்ததால் அது விளிச் சங்கம் ஆயிற்று! கோவில் திறந்து விட்டதை அடியவருக்கு அறிவிக்க சங்கு ஊதி அழைக்கப்பட்டது. பின் தங்கள் திருக்கோவில் சங்கிடுவதற்காக பல வெண்பல்தவத்தவர் சென்றதைப் பார்த்தோம்.

எனவே இப்பொழுது பல கோவில்கள் திறந்துவிட்டன எனத் தெரிகிறது. இங்கு கோழி அழைபது என்பது எல்லா கோவில்களிலும் எழும் நாதத்தைக் குறிக்கிறது. கண்ணா எழுந்தருளி எங்களுக்கு அருள வேண்டும் என்று எல்லா கோவில்களிலும் இறைவன் நாமம் ஒலிக்கின்றதாம்.

மாதவி பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவினக் காண்! குயில் இருக்கிறதே அது தனக்காக கூடுகூட கட்டிக் கொள்ளாத சோம்பேறி. அது நன்றாக விடிந்த பிறகுதான் கூவும். இலைகள் அடர்ந்திருக்கும் மாதவிக் கொடியில் இருந்து அவை கூட பலமுறை கூவிவிட்டன.

இங்கு குயில் கூவுதல் என்பது அடியவர்கள் வந்து அருள் வேண்டி இறைஞ்சுவதைக் குறிக்கின்றது. கண்ணா! பக்தர்கள் எல்லோரும் பலமுறை உன் நாமம் சொல்லி வேண்டுகின்றனர், நீ எழுந்து அருள் செய்ய வா! என்று அழைக்கிறாள்.

அது சரி, இவ்வளவு தூரம் விடிந்தது நப்பின்னைக்குத் தெரியாமலா உறங்குகிறாள். இருக்கலாம், ஒருவேளை அவள் இருள் நிற கண்ணனை அணைத்தவாறல்லவா தூங்குகிறாள். வெளிச்சம் வந்தது தெரியவில்லையோ!!

அடுத்து,

பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!

நப்பின்னை, கண்ணனுடன் இரவெல்லாம் பந்துவிளையாடினாள் போலும். ஒரு கையில் கண்ணனை அனைத்தவாறும் ஒரு கையில் பந்துடனும் உறங்குகிறாள். எனவே பந்தார்விரலி என்று அழைக்கிறார்கள். இவளுக்குத் தான் பந்தாட பிடிக்கும் என்பது முன்பே அறிந்ததுதானே!

கம்ப இராமாயணத்தில் விஸ்வாமித்திரர், தாடகை வதமானதும் இராமனையும் இலக்குவணனையும் அழைத்துக் கொண்டு மிதிலை தெருவில் நடந்து வந்துக்கொண்டிருக்கிறார். சீதை, அவளது மாளிகையின் உப்பரிகையில் நிற்கிறாள், அந்த பக்கம் அவர்கள் வர, அண்ணலும் நோக்க, அவளும் நோக்க, இராமாயணக் கதை நகர்கிறது

இந்த காட்சிக்கு மிக அழகாக உரை சொல்லியிருப்பார்கள் முன்னோர்கள். உப்பரிகையில் சீதை பூப்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். அக்காலத்தில் மென்மையான பூக்களினால் பந்து செய்து விளையாடுவது பெண்களின் வழக்கம் தானே. அப்பந்தை அவள் தோழி நீலமாலை சற்று வேகமாக அடித்து விட அது சீதையைத் தாண்டிச் சென்று தெருவில் விழுகிறது. அதை காணவே சீதை உப்பரிகையில் வந்து நிற்கிறாள். அதேகணம் இராமன் அப்பக்கம் வர

கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.

ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்ததால் இருவரும் மாறிபுக்கு இதயம் எய்தினர்.

அப்பொழுது பந்தார் விரலியாகத்தானே அவளை பார்த்தான் இராமன். இன்று அதை நினைவு கூறி, பெண்ணே உன் மைத்துனன் பேர் பாடுகின்றோம். நீ, உன் செந்தாமரைக் கையால் சீராக அணிந்த வளையல்கள் ஒலிக்க மகிழ்வோடு திறப்பாயாக என்கிறார்கள். இனிமேலும் அவள் மகிழாதிருப்பாளா!!

மைத்துனன் என்ற சொல் அக்காலத்தில் கணவனையே குறித்து நின்றது. ‘மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்ற கணாக்கண்ட’தாகத்தானே இன்னொறு இடத்திலும் ஆண்டாள் குறிக்கிறாள். பின்பு காலபோக்கில் பல சொற்கள் மாறுவது போல் இச்சொல்லும் பொருள் மாறியிருக்கலாம்.

இராமானுஜர் அத்துழாயைக் கண்டு மெய்சிலிர்த்து விழுந்து வணங்கியதும் அவளைப் பந்தார்விரலியாகப் பார்த்ததினால் தானே! பெரிய நம்பியின் பெண் அத்துழாய், பந்து விளையாடிக் கொண்டிருந்தவள், கையில் பந்துடன் ஓடி வருகிறாள். அதேசமயம் பிட்சைக்காக வந்துக் கொண்டிருந்த திருப்பாவை ஜீயர் என்றழைக்கப்படும் இராமானுஜர் உந்துமதக்களிற்றன் என்ற இப்பாடலை பாடிக்கொண்டே வருகிறார். அவர் பாடினார் என்றால் கண்ணனையும் ஆண்டாளையும் அப்பாடலில் கூறப்பட்டுள்ள அனைத்து உள்ளார்ந்த அர்த்தங்களையும் அனுபவித்துக் கொண்டே தானே பாடுவார். அப்படிப் பட்ட மேன்மையான சிந்தனை நிலையில் கையில் பந்துடன் அத்துழாயைப் பார்த்ததும் அவருக்கு அப்பெண் நப்பின்னையாகவே தெரிகிறாள். உடனே மெய்சிலிர்த்து அவள் காலில் விழுந்துவிடுகிறார். பநதார் விரலிக்கு அப்படி ஒரு பெருமை உண்டு.

இந்த பாடலில் நந்த கோபனின் மருமகளான நப்பின்னையை ஆண்டாளும் தோழிகளும் அழைக்கும் அடைமொழிகளில் இன்னொரு சிறப்பும் உண்டு. முதலில் கந்தம் கமழும் குழலி! என்றார்கள். அவள் கூந்தல் மணம் கமழ்ந்து நுகர்வில் இன்பம் தந்தது. அடுத்து அவளது பந்தார் விரலை, செந்தாமரைக் கையைப் பார்க்கின்றனர். காணலில் இன்பம் கொண்டனர். அவள் கைகளில் சீராக அமைந்த வளையல்கள் ஒலிக்க செவிக்கின்பம் உண்டாயிற்று. அவள் மைத்துனன் பேர் பாடவும் வாக்கில் இனிமையை உணர்ந்தனர். சொல்ல சொல்ல இனிக்குமல்லவா அவன் பெயர். இப்படி எல்லா புலங்களாலும் இறையனுபவம் பெற்ற அவர்கள் கண்ணனைக் கண்டதும் மெய்க்கின்பம் எய்துவார்களல்லவா? அதனால் தான் நப்பின்னை பிராட்டியே! கண்ணனை எங்களுக்குக் கொடுத்து, நாங்கள் உய்ய அருளவேண்டும் என்றழைக்கிறார்கள். இங்கு கண்ணனை அடைதல் என்பது. அவனே புருஷோத்தமன். ஜீவர்கள் எல்லாம் அவனை அடையவேண்டியவர்கள் என்பதாக காணவேண்டும்.

Thursday, 6 April 2023

நந்த கோபாலா எழுந்திராய்! எம்பெருமாட்டி யசோதா! அறிவுராய்

நந்த கோபாலா எழுந்திராய்! எம்பெருமாட்டி யசோதா! அறிவுராய்

அடுத்ததாக, நந்தகோபாலன், யசோதை, கண்ணன், பலதேவன் என்ற வரிசையில் எழுப்புவதாக அமைகிறது பாடல். இந்த வரிசையில் ஒரு அழகு உண்டு. வீட்டில் சின்னக் குழந்தை அம்மா அருகில் தானே படுக்கும். அது போல் தான் முதலில் நந்தகோபன் மாளிகை. அவரைத் தாண்டித்தான் உள் நுழைய முடியும் அடுத்ததாக தாய் யசோதை அடுத்து கண்ணன், அவனுக்கு எந்தபக்கத்திலிருந்தும் துன்பம் வந்துவிடக்கூடாது என்று காப்பதற்காக பலதேவன் மாளிகை கடைசியாக அமைந்திருக்குமாம்.

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.

அம்பரம் என்ற சொல் இரு இடத்தில் வந்திருக்கும். அம்பரம் என்றால் உடை. மனிதருக்கு அடிப்படையான தேவைகளைத் தருபவன் தலைவன் அல்லவா. அப்படி உடை, நீர், உணவு ஆகியன கொடுத்து அறம் தவறாது இருக்கும் தலைவனே நந்த கோபாலா எழுந்திராய். எங்களுக்கு வேண்டியதெல்லாம் நாங்கள் கேட்காமலே தருபவனே! இன்று கண்ணன் அருளையும் நீயே எங்களுக்குத் தரவேண்டும். ஆச்சாரியர் என்பவன் தம் மாணாக்கருக்கு வேதத்தின் பொருள் மட்டுமா சொல்லித் தருவார், இறை அனுபவத்தையும் அடையாளம் காட்டுபவர் அவரே! எனவே கண்ணன் அருள் பெற எங்களுக்கு உதவ வேண்டும். எழுந்திராய்!!

அடுத்ததாக கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே, குல விளக்கே! எம்பெருமாட்டி யசோதா! அறிவுராய்.

கொழுந்து என்பது மரத்தின் கிளைகளின் நுனியில் புதிதாக முளைத்திருக்கும் புதிய இலை கொத்து. ஒரு பெரிய மரம் உயிர்ப்போடு இருக்கிறது என்பதற்கு துளிர்விடும் கொழுந்துகளே சாட்சி. கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே என்றால், தலைவனை கொழுக் கொம்பாக கொண்டு விளங்கும் கொடி போன்ற ஆயர் பெண்களுக்கெல்லாம் எடுத்துக் காட்டாக விளங்கும் ஆயர் குலத்தின் விளக்கே! எம்பெருமாட்டி யசோதா என்று அழைக்கின்றனர். யசோதை என்பது இலக்குமி தேவியைக் குறிப்பதாகவும் கூறுவர்.

அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமான்’ இங்கு அம்பரம் என்பது பூமிக்கு உடைபோல் இருக்கும் ஆகாயத்தைச் சுட்டுகிறது. ஆகாயத்தை கிழித்தவாறு உயர்ந்து வளர்ந்து உலகை அளந்த தேவர்களின் தலைவனே! மறுபடியும் திருவிக்கிரம அவதாரம் சொல்லப்படுகிறது. அதிதி, தனது குழந்தைகளாகிய தேவர்கள் அசுரர்களிடம் தோற்று துன்புறுகிறார்கள் என்பதால் தேவர்களைக்காக்க திருமாலை வேண்டுகிறாள். திருமாலும் வாமன அவதாரம் எடுத்து மூவடி மண் கேட்டு உலகளந்த பெருமானாக தேவர்களைக் காக்கிறார். இப்படி ஒரு பெண்ணிற்காக இறங்கிய நீ, எங்களுக்கும் இறங்கி அருள்வாய் என்றே வந்திருக்கிறோம், எழுவாயாக என வேண்டுகின்றனர்.

அடுத்து பலதேவர், இவர் ஆதிஷேஷனின் வடிவமாக பார்க்கப்படுகிறார். இராமாவதாரத்திலே தம்பியாக அவதரித்தவர் கிருஷ்ணாவதாரத்திலே அண்ணனாக அவதரித்திருக்கிறார். பெருமாளை என்றும் பிரியாதவரல்லவா ஆதிஷேஷன். அவரது காலடியை என்றும் தொடர்பவரல்லவா!! பெருமாள் துயின்றால் படுக்கையாகவும், அமர்ந்தால் ஆசனமாகவும், நின்றால் குடையாகவும் இருந்து கைங்கர்யம் செய்பவரல்லவா!! எனவே தான் செம்பொன் கழலடி செல்வா! பலதேவா! உம்பியும் நீயும் உறங்கேலோர் என்பாவாய் என்றழைக்கிறாள். இராமாவதாரத்தில் பதினாங்கு வருடங்கள் உண்ணாமலும் உறங்காமலும் இருந்து அவன் துயில் கொள்ள காவல் காத்த நீ இன்று எங்களுக்காக அவனை எழுப்பி உதவ மாட்டாயோ என அழைக்கிறாள்.

இங்கு ஒரு கேள்வி எழும் பலதேவனைப் போல் சுபத்திரை கண்ணனின் தங்கை அல்லவா! சுபத்திரையை ஏன் எழுப்பவில்லை ஆண்டாள்!!

சுபத்திரை வசுதேவருக்கும் அவரது முதல் மனைவியும் பலதேவரின் தாயுமான ரோகினிதேவியாருக்கும் பிறந்த பெண். கம்சவதத்திற்குப் பின் வசுதேவரையும் தேவகியையும் விடுவிக்கிறார் கண்ணன். அதன் பிறகு சுமார் எட்டு வருடங்கள் கழித்து தான் வசுதேவருக்கும் ரோகினிக்கும் மகளாக பிறக்கிறாள் சுபத்திரை. இந்த சுபத்திரையைத்தான் அர்ஜுணன் மணக்க உதவி செய்கிறார் கண்ணன். அப்படி பார்க்கையில் வயதில் மிகவும் இளையவள் சுபத்திரை. அதுமட்டுமல்ல ஆயர்பாடியில் சுபத்திரை இல்லை. கம்ச வதத்திற்கு பின் கண்ணன் துவாரகையை உருவாக்கி அங்கே சென்றுவிட்டான். ஆயர்பாடியில் இல்லை. இதனாலும் ஆண்டாள் சுபத்திரையை பற்றி பாடவில்லையோ!!!

இனி அவள் நப்பின்னையை எழுப்பப் போகிறாள். கண்ணனை எழுப்பப் போகிறாள். அவன் புகழ் பாடி பறை கொள்ள வேண்டப் போகிறாள். அந்த அழகை பார்ப்போம்.

Sunday, 2 April 2023

வாயில் காப்பார், கோவில் காப்பார்

வாயில் காப்பார், கோவில் காப்பார்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!

என்று பாவை நோன்பிற்காக நீராட போவோம், என்றுதானே முதலில் அழைக்கிறாள் ஆண்டாள். தோழியரெல்லம் வந்து விட்டனர். ஆனால் ஆண்டாள் நேராக பாவைக் களமாகிய ஆற்றங்கரைக்குச் செல்லாமல் ஆயர் பாடியின் தலைவனாகிய நந்தகோபரின் மாளிகைக்குச் சென்று அங்கிருப்போரை எழுப்புகிறாள்.

மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது ஆயர் குலப்பெண்ணாகத் தன்னை வரித்துக் கொண்ட ஆண்டாள், கண்ணன் மேல் கொண்ட பக்தியால் அவனை அடைய வேண்டும் என்றெண்ணியவளாய் தம் தோழியரை எழுப்பிக் கொண்டு நீராடி பாவை நோன்பிருக்க நந்தகோபன் மாளிகையில் துயிலும் கண்ணன் அருள் வேண்டிப் பாடுகிறாள் என்பதாக பொருள் கொள்ளலாம்.

அதேசமயம், தோழியரை எழுப்புதல் என்பது தனது முன்னோர்களான பத்து ஆழ்வார்களை வணங்கி அவர்கள் வழிகாட்டலோடு இறைவனை அடைய முயல்வதாகவும் பொருள் கொள்ளலாம்.

தூங்கி கொண்டிருப்பதாக அறியப்படுவது நமது மனம். உலக இன்பங்களில் மூழ்கி உண்மையை உணராதிருக்கும் நம் மனத்தை எழுப்பி உண்மைப் பொருள் உணர்ந்து இறையனுபவம் பெற விளைவதாகவும் பொருள் கொள்ளலாம். இங்கு நீராடுதல் என்பது இறைவனின் கருணை மழையில் நனைதல். அவன் அருள் வெள்ளத்தில் மூழ்கி திளைத்தலையே ஆண்டாள் குறிப்பிடுகின்றாள்.

இறைவன் கருணை மழைப் பொழியக் கூடியவன். நமது முயற்சி என்ற சின்ன உந்துதலோடு நாம் அவன் அருள் வெள்ளத்தில் மூழ்கித் திளைக்க, தீங்கின்றி மாதம் மும்மாரி பொழியும், நீங்காத செல்வம் நிறையும் என்பதே ஆண்டாள் நமக்குக் காட்டுவது.

வாழ்க்கை என்பது இலக்கு அல்ல. இலக்கை நோக்கியப் பயணம். வாழ்க்கை அனுபவம் என்பது பயணத்தின் அனுபவம் தான். இறைவனை நோக்கிய பயணத்தை நாம் எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தான் ஆண்டாள் தன் பாசுரங்களில் காட்டுகிறாள்.

இந்த வாழ்க்கை பயணத்தில் நம்மை நாம் அறிந்துக் கொள்ள, அதன் மூலம் உண்மை பொருளை அறிய நமக்கு வழிகாட்டியாய் இருப்பவர் நமது ஆச்சாரியர்கள்.

நம்மில் பலரும் குழந்தைகளாய் ஆடி, பாடி வளர்ந்து, படித்து, அறிந்து இல்லறத்தில் மகிழ்ந்து, உலக இன்ப துன்பங்களுக்கு ஆட்பட்டு ஒரு கட்டத்தில் நிதானிக்க மறந்து சுழன்று இறைவனை வணங்குவதைக்கூட ஒரு சடங்காகச் செய்ய பழகிவிடுகிறோம். வாழ்வின் உண்மையை அறிய முடியாத நிலையில் சிக்குண்டுவிடுகிறோம்.

அப்படியில்லாமல் இறைவனை அடையும் இந்த வாழ்க்கைப் பயணத்தில் காண்பதெல்லாம் அவனாகவே காணவும் செய்வதெல்லாம் அவனுக்காகவே செய்யவும் வேண்டும் என்பதைத் தான் ஆண்டாள் காட்டுகிறாள்.

பதினாறு பதினேழாம் பாடல்களில் நந்தகோபன் மாளிகையின் காவலர்களை கதவைத் திறக்குமாறு வேண்டி உள்ளிருக்கும் நந்தகோபர் முதல் பலதேவர் வரை எழுப்பி கண்ணன் அருள் வேண்டி பாடுகிறாள்.

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.

கோவில் என்பது இறைவன் குடியிருக்கும் உள்ளம். வாயில் என்பது நமது புலன்கள். நமது மனத்தினை தெளிவுபடுத்தி அதன்மூலம் நம் புலன்களை நெறிபடுத்தி, நமக்கு உள்ளே உறையும் இறைவனை, அவனது உண்மையான அழகை காணவும் நம் புலன்கள் அனைத்தாலும் இறையனுபவமே பெறவும் உதவக்கூடியவர்கள், உலக இன்பம் என்ற மாயக்கதவைத் திறந்து உண்மை அழகைக் காட்டக்கூடியவர்கள் நமது ஆச்சாரியர்கள்.

குருவே! நாங்கள் கதவின் அழகிலேயே மயங்கிக் கிடக்கிறோம். அதனைத் திறந்து எங்களுக்கு உண்மை அழகை காட்டுவீராக என்று குருவை வேண்டுவதாக பொருள் கொள்ளலாம். மாயக்கதவினால் மூடப்பட்டுள்ள உள்ளம் திறக்குமானால் உள்ளே உறையும் இறைவனை நாம் உணரலாம். அப்படி உண்மைப் பொருளை உணரும் பொழுது நமது புலங்களெல்லாம் அவ்விறையனுபவத்தையே அனுபவிக்கும்.

ஆயர் பாடி என்பதை ஜீவர்கள் வாழும் உலகமாகக் கொண்டால், இவ்வுலகிற்கு தலைவனாக விளங்கக்கூடியவர் இறைவன். என்றாலும் இறைவன் ஆச்சாரியர்களுக்கு அடங்கியவன். குருவின் மூலமாகவே இறைவனை அடைய முடியும் என்பது வைணவ தத்துவம். திருப்பாவையில் நந்தகோபர் என்பது ஆச்சாரியரையே குறிக்கும். வேதத்தின் பொருளை நாம் உணரதருபவர் ஆச்சாரியார் எனின் வேதத்தின் பொருளாக விளங்கும் கண்ணனை தருபவர் ஆச்சாரியர்தானே!!

இங்கு கண்ணனாக இருக்கும் பொழுது ஆயர்பாடிக்கு தலைவனாக இருக்கக் கூடிய நந்தகோபரின் ஆளுகைக்கு ஆட்பட்டவனாகவே இறைவன் இருக்கிறான். நந்தகோபரின் அரண்மனையைக் காப்பவனே, கொடிகளும் தோரணங்களும் கட்டப்பட்டிருக்கும் பல வாயில்களைக் காப்பவனே இந்த அழகிய மணிக் கதவைத் திறப்பாயாக. நாங்கள் தூய மனத்தோடு வந்துள்ளோம். கண்ணன் விழித்து எங்களுக்கு அருள வேண்டும். நாங்கள், அவன் துயிலெழப் பாடுவோம். எங்களுக்கு அருள்வதாக முன்பே அவன் வாக்களித்துள்ளான். நீ மீண்டும் மீண்டும் மறுத்துச் சொல்லாமல் கதவைத் திறப்பாயாக! என்று கேட்கிறாள்.

இதை இன்னொரு விதமாக மனத்திற்குச் சொல்வதாகவும் காணலாம். மனமே இறைவனை அடைய வைராக்கியம் கொண்டுவிட்டோம் மீண்டும் மீண்டும் சலனப்படாதே! என்பதாகவும் கொள்ளலாம்.

இங்கு நென்னலே வாய் நேர்ந்தான் என்பதற்கு, முன்பே எங்களுக்கு வாக்களித்துள்ளான் என்பது பொருள். எப்போது வாக்களித்தான், யாரிடம் வாக்களித்தான்!!

பகவத்கீதையின் பக்தி யோகத்தில்

“செயல்களனைத்தையும் எனக்கே அர்ப்பணித்து, என்னையே (அடையத்தக்க) தங்கள் உயர்ந்த நோக்கமாகக் கொண்டு, என்னையே வழிபட்டு, வேறு எதிலும் அர்ப்பணிப்பைச் செலுத்தாமல், என்னையே தியானித்து, (இப்படியே) என்னிலேயே தங்கள் மனத்தை நிலைக்கச் செய்பவர்கள் எவரோ, அவர்களை, (இந்த) மரணத்தின்பாற்படும் உலகம் எனும் கடலில் இருந்து தாமதமில்லாமல் நான் விடுவிப்பேன். 12:6-7

எவ்வித பலனை எதிர்பாராது பகவானிடம் முழு மனதுடன் பக்தி செலுத்துவது “அநன்ய பக்தி “ஆகும். இவ்வாறு பக்தி செலுத்தி பகவானையே சரணாகதி அடைந்த பக்தர்களை காப்பது எனது கடமை என பகவான் உறுதிமொழி தருகிறார்.

கண்ணன் அருளிய கீதைக்கு கண்ணதாசன் விளக்க உரை எழுதியிருப்பார். பக்தியோகம் அவரது வரிகளில்…

ஒருநிலை மனது கொண்டு
ஒருநிலை அறிவை ஏற்றுக்
கருமத்தின் பலன் துறந்து
காலமெல் லாமும் இந்தத்
தருமத்தின் தலைவன் தன்னை
தழுவிய பேர்க ளெல்லாம்
திருவுற்றுத் தினமும் வாழ்வார்
தேருக விஜயா! என்றான்

இப்படி கண்ணன் முன்பே வாக்குறுதி தந்திருக்கிறான். ஏனவே அவன் சொன்னது போல் நாங்கள் தூயோமாய் வந்தோம், எங்கள் நோக்கம் நிறைவேற எங்களுக்கு உதவுவாயாக என்று இறைவனை நமக்கு காட்டக்கூடிய ஆச்சாரியர்களை வேண்டுகின்றாள் ஆண்டாள். இப்படி அற்புதமான பக்தியோகத்தைத் தானே ஆண்டாள் தம்பாடல்கள் முழுவதிலும் காட்டுகிறாள்.