மொழிவளமும் பக்திச் சுவையும் இரண்டற கலந்திருக்கும் ‘திருப்பாவை’ பாசுரங்களை, பாடலுக்கு பொருள் விளக்கமாக அல்லாமல், தமிழோடும் பக்தியோடும் அணுகுவதே இப்பதிவின் நோக்கம்
Monday, 27 February 2023
நெய்யுண்ணோம் பாலுண்ணோம்
Saturday, 25 February 2023
சீர்மல்கும் ஆய்பாடி செல்வ சிறுமீர்காள்
Thursday, 23 February 2023
திருப்பாவையில் கண்ணன் நாமாவளி
Sunday, 19 February 2023
பாடல் அமைப்பு
Saturday, 18 February 2023
ஆய்ச்சி பாவனை
ஆண்டாள் கண்ணனை அடைய விரும்புகிறாள். எப்படி அடைவது. இதற்கு
முன் யாரெல்லாம் கிருஷ்ணானுபவத்தை அடைந்தவர்கள். அவர்கள் எப்படி அவனை அடைந்தார்கள்
என்று எண்ணுகிறாள். அற்புதமான கிருஷ்ணானுபவத்தை அவன் நாமம் சொல்லியே மிக எளிதாக அடைந்தவர்கள்
ஆயர்பாடியைச் சேர்ந்த ஆய்ச்சியர் என்பதை அறிகிறாள். அவ்வாறே தானும் கண்ணனை அடைய எண்ணுகிறாள்.
ஆண்டாளோ கலியுகத்தைச் சேர்ந்தவள், கண்ணன் பிறந்ததும், ஆய்ச்சியர்
அவனை அடைந்ததும் துவாபர யுகத்தில். என்றாலும் கண்ணனின் லீலைகளையும், ஆய்ச்சியர் அனுபவத்தையும்
கேட்டு கேட்டு வளர்ந்த ஆண்டாள், கண்ணன் மேல் கொண்ட காதலால் தன்னை பாவை நோன்பிருந்து
கண்ணனை அடைய எண்ணும் ஒரு ஆய்குல பெண்ணாகவே வரித்துக் கொள்ளுகிறாள்.
அவள் மொழி ஆய்ச்சியர் மொழியாக மாறுகிறது, அவள் நடை உடையெல்லாம்
ஆச்சியர் போலாகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரே ஆயர்பாடி ஆகிறது, வடபத்ர சுவாமியே கண்ணனாகிறார்.
தம் தோழியரெல்லாம் ஆய்குல பெண்களாகின்றனர். இதோ அவர்களை யெல்லாம் எழுப்பிக் கொண்டு
கண்ணனை அடைய பாடுகிறாள் ‘பாவை’.
அவளது இந்த கிருஷ்ணானுபவமே, அவளது உள்ளத்தின் கண்ணன் நினைவுகளே
மொழிவழியாக வார்த்தைகளாகி, மிகச் சிறந்த பாசுரங்களாக, திருப்பாவையாக நமக்கெல்லாம் வழிகாட்டுகிறது.
இங்கு நம் நினைவிற்கு வரக்கூடியது இராமாயணத்தில் ஒரு அற்புதமான
காட்சி, இராமன் காட்டுக்குச் செல்கிறான். உடன் சீதையும் இலக்குவணனும் புறப்படுகின்றனர்.
இலக்குவணன் புறப்படும் முன் தன் தாய் சுமித்திரையிடம் விடைபெற்றுக் கொள்கிறான் சுமித்திரை
“இலக்குவனா இனி இராமன் இருக்கும் வனமே உனக்கு அயோத்தி, இராமனே உனது தந்தை, சீதையே உன்
தாய். இனி இராமனின் சேவகனாக உடன் செல். என்கிறாள்.
இங்கும் ஒன்றை மற்றொன்றாக பாவித்தல் சொல்லப்பட்டிருக்கிறது. என்றாலும் இலக்குவணனின் பாவனைக்கும் ஆண்டாளின் பாவனைக்கும்
வித்தியாசம் உண்டு. ஆண்டாள் கண்ணனுடன் ஆயர்பாடியில் வளர்ந்த ஆய் குல பெண்ணாகவே தன்னை
வரித்துக் கொண்டு பாவைப் பாடலை பாடியிருப்பாள். முதல் 29 பாடல்களிலும் அவள் பெரியாழ்வார்
வளர்த்த பெண் என்பதை அறியவே முடியாது. முப்பதாவது பாடலில் மட்டும் தன்னை பட்டர்பிரானின்
கோதையாக வெளிப்படுத்திக் கொள்கிறாள்.
மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாள்
மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாள்
மார்கழி மாதத்திற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. மனிதருக்கு
மார்கழி மாதம் என்பது தேவருக்கு பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் விடியலுக்கு
முந்தைய பொழுது. அறிவியல் பார்வையிலும் மனிதரின் செயல்பாடுகள் பிரம்மமுகூர்த்த நேரத்தில்
மிகச்சிறப்பாக அமையும் என கண்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
எனவே மார்கழி மாதம் முழுதும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில்
(காலை 4 மணி முதல் 5.30 வரை) எழுந்து இறைவனை துதித்தல் என்பது பழக்கத்தில் இருந்துவருகிறது
இன்றும் மார்கழி மாதத்தின் முதல் நாளிலிருந்து தினம் ஒரு
பாடலாக மாதம் முழுவதும், திருப்பாவையின் 30 பாடல்களும் அதிகாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும்
பாடப்படுகிறது. முக்கியமாக 18 ஆம் நாள் ஆகிய
திருவாதிரை நட்சத்திரம் கூடிய நிறைமதி நாள் அன்று முதல் இறைவனுக்கு பள்ளி எழுச்சியும்,
அவன் நாமங்களைச் சொல்லி போற்றியும் பாடுவது வழக்கமாக இருக்கிறது.
பாவை இலக்கியம்
பாவை இலக்கியம்
பாவை இலக்கியம் என்பது பிள்ளைத்தமிழ் இலக்கியம் போன்று
தமிழுக்கே உரிய ஒரு சிற்றிலக்கிய வகை. இது பாவை நோன்பு மேற்கொள்ளும் பெண்கள் தம் தோழியரை
அழைத்துக் கொண்டு பொய்கையில் நீராடி நோன்பு துவங்கும் நிகழ்வினைச் சொல்தாக அமையும்.
பாவை நோன்பு பற்றி சங்க இலக்கியங்களில் கூட குறிப்புகள்
இருக்கின்றன. இது தை நீராடல் என்றும் அம்பா
நீராடல் என்றும் ஐங்குறுநூறு, கலித் தொகை ஆகிய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிபாடலில் பாவை நோன்பினைப்பற்றி விளக்கமாகவே குறிக்கப்பட்டுள்ளது.
நாடு செழிக்கவும் நல்ல கணவரை அடையவும், மார்கழி மாத பௌர்ணமியும்
திருவாதிரையும் கூடிய நாளில் பெண்கள் இந்நோன்பினை கடைபிடிப்பர். இதில் பெண்கள் தம்
தோழியரையும் அழைத்துக் கொண்டு அதிகாலையில் ஆற்றங்கரையில் நீராடி, ஈரமான ஆற்று மணலில்
ஒர் உருவம் செய்து சக்தியாக அதனை பாவித்து நோன்பிருப்பர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டாளும், மாணிக்கவாசகரும் இவ்வழக்கத்தை புதுப்பித்தனர்
என்றே கூறலாம். பாவை நோன்பு என்ற பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் இலக்கியத்தில்
சமய கருத்துக்களை விளக்கும் விதமாக இப்பாவைப் பாடல்கள் இருக்கின்றன. இதில் ஒன்று திருவெம்பாவை,
மற்றது திருப்பாவை. மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் தன்னை பெண்ணாக எண்ணிக் கொண்டு சிவபெருமானின்
அருள் வேண்டி பாடுகிறார். ஆண்டாள் திருப்பாவையில் தான் விரும்பிய கண்ணனுக்காக இப்பாவை
நோன்பினை நோற்கிறாள்.
இப்பாவை பாடலின் சொல், பொருள் நயத்தை, அருந்தமிழின் அழகை,
கூறப்பட்டுள்ள தத்துவத்தை அறிந்து படிப்பது இன்பம் பயப்பதாகும்.
Thursday, 16 February 2023
தீந்தமிழ் திருப்பாவை
தமிழ் இலக்கியத்தில் 6 ஆம் நூற்றண்டு முதல்
9 ஆம் நூற்றாண்டு வரையான காலத்தை பக்தி இலக்கிய காலம் என்பர். இக்காலத்தில் ஆழ்வார்களும்
நாயன்மார்களும் இறைவன் மேல் பல பாடல்கள் பாடி, சமயத்தோடு தமிழையும் வளர்த்தனர்.
ஆழ்வார்கள் பன்னிருவரில் பெரியாழ்வார் என்று
போற்றப்பட்ட விஷ்ணுசித்தர் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர், இவர் திருப்பல்லாண்டு, பெரியாழ்வார்
திருமொழி போன்ற அற்புதமான இலக்கியங்களை படைத்துள்ளார். இவர் கண்ணன் மேல் கொண்ட பக்தியால்
தன்னை தாயாக எண்ணிக்கொண்டு தாலாட்டு முதல் நீராட்டு வரை பல நிலைகளில் கண்ணனை நெக்குருகி
பாடியுள்ளார்.
விஷ்ணுசித்தர் மிகுந்த பக்தியோடு ஸ்ரீவில்லிபுத்தூரில்
வடபத்ரசாயி பெருமாளுக்கு கோவில் கட்டி, அங்கே நந்தவனம் அமைத்து, இறைவனுக்கு பூமாலை
அணிவிக்கும் சேவையை செய்து வருகிறார். இவர் ஒருநாள், நந்தவனத்தில் துளசி மாடத்தின்
அருகே ஒரு பெண் குழந்தையை கண்டெடுக்கிறார். பூமாலையையே தொட்டுப் பழகிய அவரது கைகளுக்கு
அக்குழந்தையும் ஒரு பூமாலைப் போலவே இருக்கிறது. எனவே கோதா என்று பெயரிட்டு தன் பெண்ணாக
வளர்க்கிறார். தமிழையும் கிருஷ்ண பக்தியையும் ஊட்டியே கோதையை வளர்க்கிறார் பெரியாழ்வார்.
கண்ணனின் திருநாமத்தையும் அவனது லீலைகளையும்
கேட்டு கேட்டு வளர்ந்த அவள் அவனையே அடையவேண்டும் என்று பக்தியின் உச்ச நிலையை அடைகிறாள்.
விஷ்ணுசித்தராக இருந்தவர், தனது உயர்ந்த பக்தியின்
காரணமாகவே பெரியாழ்வார் என்று போற்றப் பட்டார். அவர் வளர்த்த பெண்ணல்லவா இவள்! உலக
மனிதரை மணக்க விழையாமல் கண்ணனையே அடைய எண்ணுகின்றாள்.
பெரியாழ்வார் தொடுத்த பூமாலைகளெல்லாம் எவ்வாறு
கண்ணனை அடைந்தனவோ அவ்வாறே அவர் வளர்த்த கோதையாகிய தானும் அவனையே அடையவேண்டும் என்று
அவள் விரும்பினாளோ!!
கண்ணனையே தனது மணாளனாக வரித்துக் கொண்ட அவள்
வடபத்ர சாயிக்கு அணிவிக்கத் தொடுத்த பூமாலைகளையெல்லாம் தான் அணிந்து கொடுத்து சூடிக்
கொடுத்த சுடர்கொடியாகிறாள்.
பூமாலை மட்டுமா சூடிக் கொடுத்தாள்? அற்புதமான
இப்பாமாலையை நாமனைவரும் உய்யுமாறு பாடியும் கொடுத்தாளல்லவா?
திருப்பாவையை இயற்றும் பொழுது ஆண்டாள் ஒரு சின்னஞ்
சிறு சிறுமி. ஆனால் அவளது மொழி அறிவை நம்மால் வியக்காமலிருக்க முடியாது. திருப்பாவை
கடினமான பா வகையான கொச்சகக் கலிப்பா வகையைச் சார்ந்தது. ‘திரு’ப்பாவை என்று சொல்வதாலேயே
மேலான ஒன்றை அடைவதற்கான பாவைப் பாடல் என்பது புலனாகும். மேலும் திருப்பாவையில் ஆழ்ந்த
வைணவ சரணாகதி தத்துவம் கூறப்பட்டிருக்கிறது. அதனால்தான் திருப்பாவையை கோதோபநிஷத் என்றும் வேதமனைத்திற்கும்
வித்து என்றும் பெரியோர் வழங்கினர்.
தீந்தமிழ் திருப்பாவை
முன்னுரை
ஆண்டாள் திருவடிகளே சரணம்
சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்அவனரு ளாலே அவன்தாள் வணங்கி
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்வேதமனைத்துக்கும் வித்தாகும் – கோதைதமிழ்ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரைவையம் சுமப்பதும் வம்பு. வேதபிரான்பட்டர்