நெய்யுண்ணோம் பாலுண்ணோம்
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
எந்த ஒரு காரியத்தைச் செய்வதானாலும் கடைபிடிக்க வேண்டியது, தவிர்க்க வேண்டியது என இரண்டு வழிமுறைகள் உண்டு. சமீபத்தில் நம்மை பயமுறுத்தி வரும் கொரோனாவின் பிடியிலிருந்து தப்பிக்க கைக்கழுவுதல், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றைச் செய்தோம். பொது இடங்களுக்குச் சொல்லுதல், கூட்டத்தில் ஒருவர் மேல் ஒருவர் இடித்துக் கொண்டு நிற்றல் ஆகியவற்றை தவிர்த்தோமல்லவா? அவ்வாறே இந்நோன்பினுக்கு செய்யக்கூடியவை தவிர்க்க வேண்டியவை என சில சொல்லப்பட்டிருக்கிறது.
ஆயர்பாடியிலே பால் தயிர், வெண்னை, நெய் என்பன மிகுந்து இருக்குமல்லவா? இப்பெண்கள் பால் தயிர் கொண்டுதான் தங்கள் அன்றாட பணியை செய்யவேண்டியவர்களாய் இருப்பர். என்றாலும் நெய்யுண்ணோம் பாலுண்ணோம் எங்கிறார்கள்.
இப்படி தமக்கு பிடித்தமானதை விட்டுக்கொடுக்கும் பயிற்சி இருந்தால் நமக்கு வைராக்கியம் வளர்கிறது. இவ்வைராக்கியமே அனைத்து காரியங்களிலும் வெற்றிக்கு அடிப்படையாக அமைகிறது. இறை அனுபவத்திற்கும் அதுவே அடிப்படை. இதில் நம்மைச் சுற்றியுள்ள சிற்றின்பமாகிய உலக விஷயங்களில் ஈடுபாடு கொள்ளாமல் பேரின்பமாகிய இறைவனை நாட வேண்டும் என்பதே கருத்து.
அதுமட்டுமல்ல மையிடெழுதோம், மலரிட்டு நாம் முடியோம், அதாவது எங்களை அலங்கரித்துக் கொள்ள மாட்டோம். செய்யாதனச் செய்யோம்’ முன்னோர்கள் செய்யக்கூடாது என்று தடுத்தவைகளைச் செய்யோம். அனுபவத்தின் காரணமாக செய்யத்தகுந்தவையல்ல என சிலவற்றை காலம் காலமாகச் சொல்லிவருவார்கள். அதன் உண்மைப் பொருளை அறிய முற்படுதல் தவறல்ல. ஆனால் அதை உணராது தவிர்த்தல் தவறு. முன்னோர் சொல்லின் முக்கியத்துவத்தை நாம் இன்று கொரோனாவின் பிடியில் அறிந்தோமல்லவா?
அடுத்ததாக தீக்குரளை சென்றோதோம். இன்று இந்த புறஞ்சொல்லுதல் எவ்வளவு மலிவாகிவிட்டது. இப்படி கோபம், பொறாமை போன்ற உணர்வைத் தூண்டக் கூடியவற்றை செய்யோம்.
சரி, செய்யக் கூடியது என்ன? நாட்காலே நீராடி, விடியற் காலையில் நீராட வேண்டும். நோயின்றி இருக்க இது முக்கியமல்லவா?
அடுத்து பையத் துயின்ற பரமன் அடி பாடி, நாம் அடுத்தநாள் ஒரு இரயிலையோ, விமானத்தையோ பிடிக்கவேண்டும் என்றால் முழுமையாக அமைதியாகத் தூங்க முடியுமா? அதுவே நாளை ஞாயிறுக்கிழமை என்றால் எப்படி நிம்மதியாகத் தூங்குவோம். அப்படி எந்த பரபரப்பும் இல்லாமல் இறைவன் பாற்கடலில் பையத் துயில்கிறான். என்றாலும் உலக இயக்கத்திதை நடத்திக் கொண்டே இருப்பவனாக, பரமனாக, ஒப்பற்றவனாகவே விளங்குகிறான். அவன் புகழைப் பாடினாலே நாம் அவன் அருள் பெற முடியும் என்பதையே ஆண்டாள் இப்பாடலில் காட்டுகிறாள்.
‘ஐயமும் பிச்சையும் ஆந்துணையும் கைக்காட்டி’ இங்கு ஐயம் என்பது துறவியர் போன்றோர் நம்மை அணுகும் போது நாம் இடுவது. ஐயமிட்டு உண் என்று சொல்லவில்லையா?
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
என்பது குறள். பிச்சை என்பது அவர் கேட்காமலே அவரது நிலைக்கண்டு நாம் கொடுப்பது. இப்படி ஐயமும் பிச்சையையும் செருக்கு இல்லாமல், நம்மால் இயன்றவரை கொடுக்க வேண்டும். இதுவே நாமுய்யும் வழி என்று பாடுகிறாள் ஆண்டாள்.
கொரோனாவில் பீடிக்கப்பட்டிருக்கும் இன்றைய நிலையை எண்ணிப் பாருங்கள். வைராக்கியம் எவ்வளவு முக்கியம். செய்யக் கூடாததை தவிர்க்கவும் செய்யவேண்டியதைச் செய்யவும் அடிப்படைத் தேவை இவ்வைராக்கியம். முடிந்தவரை தருமம் செய்யுங்கள். இறைவன் அருள்வான் என்ற நம்பிக்கையோடு காத்திருங்கள் என்பதை அன்றே ஆண்டாள் சொல்லிவைத்ததை எண்ணுங்கள்.
No comments:
Post a Comment