Thursday, 16 February 2023

தீந்தமிழ் திருப்பாவை

முன்னுரை


ஆண்டாள் திருவடிகளே சரணம்

சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்கி

என்று மாணிக்க வாசக பெருமான் அருளினாரல்லவா, அதன் படியே ஆண்டாளின் மிகுந்த அருளாலும், கண்ணனின் எல்லையில்லா கருணையினாலும், நோய் தொற்று பரவியிருந்த கால கட்டத்திலும், ஒரு நான்கு மாத காலமாக ‘திருப்பாவை’ யினை சிந்திக்கும் பேறு பெற்றேன்.

மொழிவளமும் பக்திச் சுவையும் இரண்டற கலந்திருக்கும் ‘திருப்பாவை’ பாசுரங்களை, பாடலுக்கு பொருள் விளக்கமாக அல்லாமல், தமிழோடும் பக்தியோடும் அணுகுவதே இப்பதிவின் நோக்கம். நான் படித்தும் கேட்டும் அறிந்த விஷயங்களே இப்புத்தகத்திற்கு வித்தானதால், சிந்தனைக்கு வித்திட்ட முன்னோர்கள் அனைவருக்கும் எந்தன் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

அருந்தமிழில் உள்ள ஒவ்வொரு இலக்கியமுமே கடல் போல் ஆழமானவை, அற்புதங்கள் நிறைந்தவை. ‘வேதமனைத்திற்கும் வித்து’ எனப்படும் கோதை ஆண்டாளின் ‘திருப்பாவை’ அதில் ஒன்று என்பதில் ஐயமில்லை.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் – கோதைதமிழ்
ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.                                             வேதபிரான்பட்டர்

எனறார் போல் திருப்பாவையை அறியாத தமிழரே இல்லை என்றே சொல்லலாம். இந்த அற்புதக் கடலில் மூழ்கி திளைக்கும் யாரும் அவரவருக்கான முத்துக்களை அள்ளிக்கொள்ளலாம் என்பது சிறப்பு. ஐயைந்துமைந்துமாக முப்பதே பாடல்களில் இலக்கிய நயமும் ஆழ்ந்த சமய கருத்துக்களும் அமைந்துள்ள இப்பாடலில் தமிழையும் பக்தியையும் சேர்ந்தே சுவைப்போம்.

No comments:

Post a Comment