Saturday, 22 April 2023

பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ்மாலை

பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ்மாலை

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பாற்கடலைக் கடைந்தவனாகிய மாதவனும், கேசியை அழித்ததால் கேசவன் எனபோற்றப்பட்டவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகிய முகமுடைய, நேர்த்தியான அணிகலங்களணிந்த ஆயர்பாடி பெண்கள் சென்றுஅடைந்து வணங்கி, அருள் பெற்ற நெறியை, ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தவளும், தாமரை மலர்மாலையை அணிந்தவளும், பட்டர்பிரான் என்றழைக்கப்பட்ட பெரியாழ்வாரின் மகளுமான கோதை ஆண்டாள் தீந்தமிழால் செய்து தந்த இச்சங்கத் தமிழ் மாலையான இம்முப்பது பாடல்களையும் உணர்ந்து படிப்பவர்கள், சங்கு சக்கரதாரியாக நாங்கு தோள்களும், கருணையால் சிவந்த கண்கள் அமைந்த அழகிய முகமுடையவனும், செல்வத்திற்கதிபதியான ஸ்ரீதேவியை தன்நெஞ்சில் கொண்டவருமான திருமாலால் எங்கும், எப்பொழுதும், மூவுலகிலும், ஈரேழ் பிறவியிலும் உண்மைச் செல்வமாகிய அவன் திருவருள் பெற்று இன்புருவர் என்பது ஆண்டாள் வாக்கு. சங்கம் என்றால் கூட்டம் என்று ஒரு பொருள் உண்டு. இங்கு சங்கத் தமிழ் மாலை என்பது கூட்டமாக பலரும் சேர்ந்து துதித்து பாடதக்கதான முப்பது பாசுரங்ககளான திருப்பாவையை குறிக்கிறது.

அப்படியே திருப்பாவை பாடல்களை படிப்பவர்கள், கேட்பவர்கள் அனைவரும் கண்ணனின் கருணையையும் ஆண்டாளின் அருளையும் பெறுவர் என்பது திண்ணம்.

திருவாடிப் பூரத்து செகத்து உதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்து அளித்தாள் வாழியே
மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!


இறைவா நீ தாராய் பறை

இறைவா நீ தாராய் பறை

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

கறவை மாடுகளை மேய்த்துச் சென்று, மேச்சல் காட்டில் விட்டப்பின், நாங்கள் சேர்ந்திருந்து உண்போம். எங்களுக்குத் தெரிந்தது அது ஒன்றே! என்றாலும் அறிவற்றவர்களாகிய எங்கள் குலத்தில், நீ பிறந்ததனால் புண்ணியம் செய்தவர்களானோம்.

நாங்கள் அறிவற்றவர்கள். மாடு மேய்ப்பதைக்கூட சரியாகச் செய்யாதவர்கள். காட்டில் விட்டதும் நாங்கள் உண்போமேத் தவிர அம்மாடுகள் பிரிந்து போய்விடாமல் தக்கதை மேய்ந்தனவா? என்பதைக்கூட காணத் தெரியாது. என்றாலும், மிக எளிமையானவர்களாகிய எங்கள் குலத்தில் நீ பிறந்ததால் நாங்கள் உய்யும் வழியை அடைந்தோம்.

குறையொன்றுமில்லாதவனாகிய கோவிந்தனே! உன்னோடு நாங்கள் கொண்ட இவ்வுறவு ஒழிக்க ஒழியாது. அறியாமையினால் நாங்கள் உன்னை ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபம் கொள்ளாமல்! இறைவா! நீ எங்களுக்கு வேண்டியதை அருள்வாய்!

இப்பாடலில் கண்ணனை இறைவனாகக் காட்டுகிறாள் ஆண்டாள். இறைவா! என்றே அழைத்து எம் விருப்பத்தை தருவாயாக! என்று வேண்டுகிறாள். நாங்கள் அறிவில்லாதவர்கள் என்று தம் சிறுமையை உணர்ந்தும், இறைவன் குறையொன்றுமில்லாத கோவிந்தன் என்ற மிகப்பெரிய உண்மையைத் தெளிந்தும் ஆண்டாள் இப்பாடலில் அவன் பாதாரவிந்தத்தில் சரணாகதியை வேண்டுகிறாள்.

என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

என்று முன்பே சொன்னாளல்லவா! அவ்விருப்பத்தை எமக்கருள்வாய் என்று வேண்டுகிறாள்.

முன் பாசுரத்தில் இறைவனின் பெருமையயும் அதே நேரத்தில், பக்தர்களுக்கு இறங்கி அருளும் அவன் கருணையையும் உணர்ந்தவர்கள், இப்பாடலில் அவன் பெருமையின் முன் தம் சிறுமையை எண்ணுகிறார்கள். நாமோ சிறிதும் அறிவில்லாதவர். உண்மை ஞானம் இல்லாதவர்கள். ஞானமில்லாததால் உன்னை சிறுபேர் அழைத்தோம். நாங்கள் எப்படி அழைத்தாலும் அது உன் முழு பெருமையைக்காட்டாது. அதனால் கோபம் கொள்ளாதே! நீ குறையொன்றுமில்லாத கோவிந்தன். பசுக்களாகிய இவ்வுலக மக்களைக் காக்கும் கோவிந்தன். உன்னுடனான எங்கள் உறவு அழியாதது. ஜீவர்களாகிய நாங்கள் பரமனாக இருக்கும் உன்னை அடைவதே உய்யும் வழி. அதனால் உன்னைச் சரணடைந்தோம் உனக்கு கைங்கர்யம் செய்யும் பேற்றினை எமக்கருள்வாய் என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

அதுமட்டுமல்ல, இந்த வைகறைப் பொழுதில் வந்து உன் பொறாமரையடியை சேவித்து போற்றுவதன் காரணத்தை கேள். இடைகுலத்தில் பிறந்த நீ இடையர்களாகிய எங்களின் சேவையை ஏற்காமல் தள்ளக்கூடாது. மனித குலம் நன்மையுற தர்மத்தை போதித்தவனே! எங்களுக்காக இராமனாக இவ்வுலகில் பிறந்து அறம் காத்து நின்றவனே!

பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் என்று சொன்னவனல்லவோ கண்ணன். அப்படி மனித குலத்தில் பிறந்து வழிகாட்டிய நீ எங்கள் சேவகத்தை ஏற்காமல் தள்ளக்கூடாது.

இன்று மட்டுமல்ல கண்ணா! ஏழேழ் பிறவியிலும் உனக்கு உற்றவர்களாகவே இருக்க வேண்டும். எவ்வளவு பிறவி கர்மத்தின் காரணமாக நாங்கள் எடுக்க விளைந்தாலும், உனக்கே நாம் பணிசெய்யவேண்டும், மற்ற உலக இன்பங்களில் எங்கள் விருப்பத்தை மாற்றி, எம்மனம் எப்போதும் உன்னடியையேச் சேர அருள்வாய்! என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே.

என்று இவ்வையகத்தில் வணங்கி சரணடைந்தவருக்கு இறங்கி அருள்செய்யக்கூடிய திருப்பதிரிப்புலியூர் சிவனே! நான் புழுவாகப் பிறவி எடுக்க நேர்ந்தாலும் உன்னடி என்மனத்திலிருந்து வழுவாதிருக்க வரம் தரவேண்டும்! என்று தானே திருநாவுக்கரசரும் வேண்டுகிறார்.

இப்படி மனிதருக்காக இறங்கி கண்ணனாக பிறந்து அருள் செய்த இறைவனை, அவன் அவதார காலத்தில் அவனுடன் ஆடிப் பாடிய ஆயர் சிறுமியாகவே தன்னை நினைத்துக் கொண்டு மனத்தால் ஆயர் பெண்ணாகவே வாழ்ந்து உருகியிருக்கிறாள் ஆண்டாள். பல நூற்றாண்டுகளாய் இறையருளைப் பெற தம்முன்னோர் காட்டிய நெறியாம் சரணாகதியை எளியவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் அருமையான தீந்தமிழால் பாமாலை சாற்றியிருக்கிறாள்.

மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிர்வோம்!

மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிர்வோம்!

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

கூடாதவரை வெல்லும், அழிக்கும் என்றல்ல வெல்லும் என்று காட்டியிருக்கிறாள் ஆண்டாள். பகை, மாற்று, அல்லது எதிர்மாறையான எண்ணம் கொண்டவரையும் அவர் எண்ணத்தை மாற்றி வெல்லக் கூடியவன். தானே பெரியவன் என்ற அகம்பாவத்துடன் இருந்த இந்திரனின் செருக்கை அழித்து அவனை ஆட்கொண்டு கோவிந்தனாக நின்றானல்லவா! அதனால் தான் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! என்றழைக்கிறாள் ஆண்டாள்.

இப்பாடல் முதல் அடுத்த மூன்று பாடல்களிலும் இந்த கோவிந்த நாம சங்கீர்தனம் அமைந்திருப்பது சிறப்பு. சாதாரணமாக கோவிந்த நாமம் சொல்லும் பொழுது மூன்று முறை கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!! என்றழைப்பது மரபு. இன்றும் இதை நாம் செவிமடுக்க இயலும்.

கோவிந்தன் என்றால் பசுக்களை காக்கக்கூடியவன் என்பது பொருள். பசு என்பது ஜீவாத்மாக்களைக் குறிக்கும். உலக உயிர்களாகிய பசுக்களைக் காக்கும் பரமாத்மா! கோவிந்தன் எனப்படுகிறான் இதனாலும் கோவிந்த நாமம் சொல்லுதல் முக்தி அளிக்கும் எனக் கருதப்படுகிறது.

நாங்கள் உன்னை பாடிப் பெரும் பரிசு, மிக அருமையானதாக உலகமே புகழக்கூடியதாக இருக்கும். சூடகம், கையில் அணியும் வளையல், தோள்வளையே தோள்களில் அணியும் வளைந்த அணிகலன். தோடு என்றாலும் செவிப்பூ என்றாலும் காதில் அணியக்கூடியது, பாடகம் என்பது காலில் அணியக்கூடியது இவ்வாறு பல அணிகலங்கள் நாங்கள் அணிவோம்.

முன்பு மையிட்டெழுதோம் மலரிட்டு நாமுடியோம் என்றவர்கள், இன்று பல அணிகலனும் அணிவோம் எங்கிறார்கள். இந்த அணிகலங்கள் என்பவை வைணவ சமயத்தின் சங்கு சக்கரம் போன்ற முத்திரைகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம். உனது அடியவர் என்பதை அடையாளங்காட்டும் முத்திரைகளை அணிவோம். முன்பு இறைவன் அருளைப் பெற வைராக்கியத்துடன் உலக இன்பங்களைத் துறந்தவர்கள், பின்பு அவன் அருள் கிட்டியதால் அவன் அடியவர் என்று அடையாளத்தை மகிழ்வோடு அணிகிறார்கள்.

இதை இன்னும் வேறு விதமாகவும் காணலாம். இறைவனை அறியும் முன்பு, மெய் ஞானம் பெறும் முன்பு உலக இன்பங்களையெல்லாம் தமக்கானதாக அனுபவிக்கும் பொழுது அதைத் துறந்தால் மட்டுமே, இறைவனை அடைய முடியும் என்று துறந்தார்கள். இறைவன் அருள் கிட்டி உண்மை உணர்ந்தவர்கள் அதே உலகியல் நடவடிக்கைகளை கூட அவன் அருளாலே அவனுக்கானதாக செய்யும் பொழுது அதிலும் அவனையேக்கண்டு இன்புறுவார்கள் என்பதாகக் காணலாம்.

ஆடை உடுப்போம் அதன் பின்னே பால்சோறு மூட நெய் பெய்து, அது முழங்கை வழிவார உண்போம் என்று கூறவில்லை, ஆனால் கூடியிருந்து குளிர்வோம் என்று கூறுகிறாள் ஆண்டாள். உணவு என்பது மற்றவர்களுக்கு ஈந்து மகிழக்கூடியது. உலகின் உயிகலெல்லாம் அவன் என்று கண்டால் ஒவ்வொரு உயிருக்கு செய்யும் கைங்கர்யமும் அவனுக்கானதாகிறதன்றோ! அவ்வாறு உலக உயிர்களில் உன்னைக்கண்டு உன்னுடன் கூடி இருந்து குளிர்வோம்!

நம்மை நாம் அறிந்து மெய் ஞானத்துடன் இறைவனை உணர்ந்து இவ்வுலகில் உள்ள அனைத்திலும் அவனையே கண்டுக் கொண்டால் பிற உயிர்களிடம் அன்பைத் தவிர வேறென்ன காட்ட இயலும்.

இப்படி மிக அருமையான இறை தத்துவத்தை மிக எளிதாக கடைபிடித்து நாமெல்லோரும் உய்ய அருள் காட்டுகிறாள் ஆண்டாள்.

Wednesday, 19 April 2023

ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்

ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்

கண்ணன் சிங்காதனத்தில அமர்ந்திருக்கிறான். இவ்வளவு நாட்கள் நோன்பிருந்ததின் நோக்கமே அவன் பாதம் பற்றுவதுதானே! பரவசமாகிற ஆண்டாள் அவன் திருப்பாதமலர்களை, அவன் அவதாரப் பெருமைகளை தமிழ் மணக்கப் போற்றி பாடுகிறாள்.

அவள் தமிழில் உறுகிவிட்டான் போலும் கண்ணன். என்ன வேண்டும் கேள்? எனக் கேட்டானோ! அவளும் கண்ணனை உணர்ச்சி பெருக்கோடு, மாலே! மணிவண்ணா! ஆலினிலையாய்! என்றழைத்து அவனிடம் பாவை நோன்பிருந்து தாங்கள் வேண்டுவதாய் சிலவற்றை பட்டியலிடுகின்றாள்

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!

மால் என்றால் கருமை என்று ஒரு பொருள். மாலே! கருமையானவனே! மணிவண்ணா! கருநீல மணியினைப் போன்ற கருமைநிறத்தோனே!

மால் என்றால் பெருமை என்ற பொருளும் உண்டு. மிகுந்த பெருமை உடையவன். அவனது பெருமை உயர்வற உயர் நலங்கொண்டது. மிகப்பெரியவன் அப்படி பரம்பொருளாய் இருக்கக்கூடியவன், பக்தர்கள் அழைத்தால் இறங்கி வந்து அருளக்கூடியவன். கண்ணனாய், மணிவண்ணனாய் இறங்கி வந்து அருள்கின்றானல்லவா!

இவ்வாறு இறைவனின் பெருமையும் அவனது எளிமைமையும் குறிப்பதாக அமைகிறது இவ்வரிகள்.

அதுமட்டுமல்ல, ஊழிகாலத்தில் இறைவன் கருமை நிறத்தானாய் ஆலிலைமேல் பிரளயத்தில் மிதந்துக் கொண்டிருப்பாராம். ஆண்டாளும் முன் பாசுரத்தில் ஊழிமுதல்வன் உருவம் போல் மெய் கருத்து என்று தானே பாடியிருக்கிறாள். அதனால் தான் ஆலிலையும் இறைவனை என்றும் பிரியாத ஆதிஷேஷன் வடிவமாக பார்க்கப்படுகிறது.

இப்படி கருமை நிறத்தவனே! ஆலினிலையாய்! என்றழைப்பது அவன் ஊழி முதல்வனாய் நிற்பதைக்காட்டுகிறது. மணிவண்ணா! நாங்கள் அழைத்ததும் வரக்கூடியவனாக எளிமையானவனாய் இருக்கும் நீயே ஊழிமுதல்வனாகவும் இருக்கிறாய். உன்னிடம் இல்லாதது எதுவும் உண்டோ! எங்களுக்கு அருள்வாய் என்கிறாள். இறைவனின் பெருமையையும் நமது சிறுமையையும் உணர்வது சரணாகதியில் ஒரு முக்கியப் படி.

ஊழி முதல்வனாய் அழித்தும் மீண்டும் படைத்தும் நிற்கக்கூடிய இறைவனை வேண்டி, மாயையில் விளைந்த சில பொருட்களையா கேட்பாள் ஆண்டாள். அவள் கேட்கும் ‘பொருள்’ என்ன என்பதைப் பார்ப்போம்.

முதலிலேயே, மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்! என்று எம் முன்னோர்கள் வழிவழியாக செய்தார்கள். அவ்வாறே நாங்களும் பாவை நோன்பிருப்பதற்கு எங்களுக்கு வேண்டியதைக் கேட்கிறோம். நீ அருள்வாயாக எனக் கேட்கிறாள்.

முன்னோர்கள் செய்ததை கடைபிடிப்பது என்பது வைணவ தத்துவத்தின் மிக முக்கிய நெறி. முன் பாசுரத்திலும் ‘செய்யாதன செய்யோம்’ என்றாளல்லவா! முன்னவர் காட்டிய நெறி வழுவாமல் அவர்களைப் பற்றி நடக்கவேண்டும் என்பதையும் குறிப்பதாய் அமைகிறது பாடல். முன்னவர் என்பது ஆண்டாளுக்கு முன்னவராகிய ஆழ்வார்களைக் குறிப்பதாக கொள்வர். அவர்கள் காட்டிய நெறியில் சரணாகதி அடைவதே ஆண்டாள் நமக்குக் காட்டும் வழி.

ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள்

பாஞ்ச சன்னியம் என்னும் சங்கு இறைவனின் பஞ்ச ஆயுதங்களில் ஒன்று. கண்ணன் தன் குருவான சாந்தீபனி முனிவரின் சொல்லுக்கேற்ப பஞ்சகன் என்ற அசுரனைக் கொன்று அவனை சங்காக்கி தன்கையில் கொண்டாராம். அதனால் அச்சங்கம் ஒலிக்கும் பொழுது அனைவரையும் நடுங்கச் செய்யுமாம். பாஞ்ச சன்னியம் தீயவருக்கெல்லாம் நடுக்கத்தை உண்டாக்கும். சரணடைந்தவருக்கோ நற்கதியைக் காட்டும். உலகத்தையெல்லாம் நடுங்கச் செய்யும் பாஞ்சசன்னியம் போன்ற சங்குகள் நிறைய வேண்டுமாம் ஆண்டாளுக்கு. ஏன்?

முன்பாசுரத்தில் ‘வெள்ளை விளிச்சங்கை’ நாம் பார்த்தோம்! இறைவன் எழுந்தருளி இருக்கும் கோவில்கள் திறக்கப்பட்டதை அறிவித்து பக்தர்களை விளிப்பதால் விளிச் சங்கம் என்று பார்த்தோமல்லவா! அப்படி உலக ஜீவர்கள் அனைவரையும் நாங்கள் அழைக்க வேண்டும். அழைத்து உன் திருப்பாதங்களில் சரணடையும் வழி காட்ட வேண்டும் எனவே பல சங்குகள் வேண்டும். சங்கம் ஓம்கார நாதத்தைக் குறிப்பதாகவும் கூறுவர்.

உன் பெருமையை பறைசாற்ற எங்களுக்கு பெரிய பறைகள் மிகுதியாக வேண்டும். பல்லாண்டிசைப்பார்கள் பலர் வேண்டும் எனக் கேட்கிறாள். வைணவ சரணாகதியில் பாகவதர்கள் என்றழக்கப்படும் பக்தர்கள் அனைவருடன் சேர்ந்தே இறைவனை அடைய வேண்டும். இது தனிமனிதராக செய்யப்படுவதல்ல. ஞான யோகம் என்பது தனிமனிதர் கடைபிடித்து அடைய வேண்டியது. ஆண்டாள் காட்டும் பக்தியோகம் பலரோடும் இணைந்து செய்யவேண்டியது. அதனால் இறைவனுக்கு பல்லாடிசைப்போர் பலர் வேண்டும் எனக் கேட்கிறாள்.

கோல விளக்கு, நமது அறியாமை இருளகற்றி ஞான ஒளி காட்ட விளக்குகள். இங்கு விளக்குகள் என்பது ஆச்சாரியர்கள் அதிலும் முதன்மை ஆச்சாரியராக கருதப்படும் நப்பின்னை விளக்காக இருந்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்பது ஆண்டாளின் வேண்டுதல்.

கொடியே, விதானமே. கொடி என்பது அடையாளச் சின்னம். கோவில்களில் கொடி என்பது இறைவனின் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத் தொழிலையும் குறிப்பதாக அமைந்திருக்கும். அதனால் கொடிமரத்தை இறைவனாக பாவித்து வழிபடுவதுண்டு.

விதானம் என்பது மேற்கூரை. உலக இன்பத் துன்பங்களிலிருந்து எங்களைக் காக்க இறைவன் அருள் என்ற விதானம் வேண்டும்.

வைணவ தத்துவத்தின் படி, முன்னவர் காட்டிய வழியில் பாகவதர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரே எண்ணமாக இறைவனைச் சரணாகதி அடைய வேண்டும் என்பதாக இப்பாடல் அமைகிறது.

இப்படி இறையனுபவம் பெற்றதும் நாம் செய்யும் அன்றாட காரியங்கள் கூட இறைவனுக்கானதாகவே இருக்கும் என்பதை அடுத்தப்பாடல் அழகாக காட்டுகிறது.

வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே!

வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே!

கண்ணா! ஒருத்தி மகனாய் பிறந்தாய், ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்தாய்! தேவகியின் மகனாக அவதறித்த நிமிடமே மாயம் செய்து ஓரிரவில் யமுனா நதிதீரத்தில் யசோதையின் மகனாக ஒளித்து வளர்ந்தானல்லவா!

அப்படி நீ வளர்வதை தாங்கிக் கொள்ள முடியாத கம்சன் உனக்கு தீங்கு நினைக்க, சிறுவனான நீயோ அவன் நோக்கத்தை, கருத்தை பிழையாக்கி அவன் வயிற்றில் நெருப்பிட்டாற்போல் மரண பயத்தால் கலங்கச் செய்து உயர்ந்தவனாய் நின்றாய். உன்னைப் போற்றி நாங்கள் வந்தோம். எங்களை ஏற்று கொண்டு கருணை செய்வாயானால், திருமகளின் செல்வமாகிய உன்னையும் உன் கைங்கர்யத்தையும் பெற்று எங்கள் வருத்தமெல்லாம் தீர்ந்த்து மகிழ்வோம் என்று கண்ணனிடம் தம் விருப்பத்தை வேண்டுகிறாள் ஆண்டாள்.

கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே!
இந்த வயிற்றில் நெருப்பு என்பது என்ன?

‘பிள்ளைகளை வெளியில் அனுப்பிவிட்டு வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டது போல் உள்ளது’ என்று பெரும்பாலும் பெண் குழந்தைகளின் பெற்றோர் கூறுவதைப் பல நேரங்களில் நாம் கேட்டிருப்போம்.

இப்படி கூறும் வழக்கம் சில குளிர் பிரதேசங்களில் காணப்படும் ஒரு வழக்கத்தை ஒட்டி ஏற்பட்டது. காஷ்மீர் போன்ற குளிர் பிரதேசங்களில் இன்று கூட ஒரு சட்டியில் நெருப்பை வைத்து அதை தங்கள் கழுத்திலிருந்து வயிறு வரை கட்டித் தொங்க விட்டுக்கொண்டு அதை கம்பளி போர்வையால் மூடியவாறு தங்கள் அன்றாட காரியங்களைச் செய்வர். வயிற்றுப் பகுதிவரைத் தொங்கவிட்டால் தான் குளிர் நெஞ்சைத் தாக்காது. இதமாக இருக்கும். இது அந்த கடுங்குளிரைத் தாங்க அவர்கள் செய்யும் வழக்கம். ஆனால் அப்படி நெருப்பைக் கட்டிக் கொண்டு நடக்கும் போது சர்வ ஜாக்கிரதையாக நடக்கவேண்டும். இல்லையென்றால் விபரீதமாகிவிடும். எனவே அவர்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பர்.

இப்படி கவனம் சிதறாமல் பயத்துடன் இருக்கச் செய்வதைத் தான் வயிற்றில் நெருப்பக் கட்டிக் கொள்ளல் என்பர். கம்சனுக்கு மரண பயத்தை உண்டாக்கிக் கொண்டே இருந்ததால் கண்ணன் அவன் வயிற்றில் நெருப்பாகி நின்றானாம்.

அதுமட்டுமல்ல பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பு ஆக்கவும் செய்வது அழிக்கவும் வல்லது. ஐம்பூதங்களால் ஆன நம் உடலில் நெருப்பின் முக்கியத்துவம் மிகவும் அதிகமானது. நமது உடல் மனம் புத்தி அல்லது ஆளுமை ஆகிய அனைத்திற்கும் அடிப்படையானது நம்முடலில் இருக்கும் நெருப்பு. உடலில் சூடிருந்தால் தானே நாம் வாழ்கிறோம் என்பது நிச்சயமாகிறது. இந்த நெருப்புகள் சரியாக பயன் படுத்தப்படும் போது நம் வாழ்விற்கு காரணமாகின்றன. தவறாக பயன்படுத்தப்படும் போது மரணத்திற்கும் வழிவகுக்கின்றன. கம்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற கண்ணனை எதிரியாக நினைத்ததால் அவனுக்கு மரண பயத்தை உண்டாக்கி அவனை அழித்தான் கண்ணன்.

இவ்விருப்பாடல்களிலும் கண்ணனைக் இறைவனாகக் கண்டு அவன் அவதாரங்களைப் போற்றி பாடி மகிழ்ந்த ஆண்டாள், மீண்டும் ஆயர் சிறுமியாக தங்கள் நோன்பிற்கு வேண்டுவனவாற்றை பட்டியலிடுகிறாள். அவள் வேண்டுவன என்னவாயிருக்கும் எல்லாம் கண்ணனுடன் தொடர்புடையதாகத்தானே இருக்கும். பார்ப்போம்.

Saturday, 15 April 2023

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

சங்க இலக்கியங்களில் ஐந்து நில காட்சிகளும் மிக அழகாக பாடப்பட்டிருக்கும். அப்படியே இந்த பாடலில் ஒரு அழகான குறஞ்சி நிலக் காட்சி காட்டப்பட்டிருக்கிறது. ஆண்டாளோ மிகச் சிறுமி, ஸ்ரீவில்லிபுத்தூரைத் தாண்டி அறியாதவள். ஆயர் பெண்ணாகத் தன்னை எண்ணிக் கொண்டுதானே பாடல்களை பாடுகிறாள். என்றாலும் அவள் படைக்கும் இவ்வியற்கை காட்சி நம்மை வியக்க வைக்கும். இன்று கூட நம்மில் பலர் சிங்கத்தை அதன் கூட்டில் பார்த்திருப்போம், காட்டில் பார்த்திருப்போமா என்பது சந்தேகமே!

ஒரு நல்ல மழைக்காலத்தில் ஆண் சிங்கம் ஒன்று தன் பெண்சிங்கத்துடன் கூட்டில் உறங்கிக் கிடக்கிறது. அது தீ போன்ற தன் கண்களை விழித்து, தன் பிடறிமயிர் சிலிர்க்க முறித்துக் கொண்டு வீரமாக கர்ஜித்து எழுந்து வருவது போல, காயாம்பூ போன்று நீல நிறங்கொண்ட கண்ணா உன் இடம் விட்டு நீயும் எழுந்து வந்து சிங்காசனத்தில் எழுந்தருளி நாங்கள் வந்த காரியத்தை ஆராய்ந்து அருள் என வேண்டுகிறாள்.

இப்பாடல் நமக்கு நரசிம்ம அவதாரத்தை நினைவூட்டுகிறதல்லவா! பிரகலாதனைக் காக்க, இரண்யனை அழிக்க ‘வேரி மயிர்பொங்க, மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு’ தூணிலிருந்து வெளிப்பட்டு வந்தானல்லவா! பிரகலாதனுக்காக இறங்கியதைப் போல் எங்களுக்காகவும் இறங்கி நாங்கள் வந்த காரியத்தை ஆராய்ந்து அருள்.

இவர்கள் வந்த காரியம் என்ன? என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான், இன்றுயாம் வந்தோம் என்று அடுத்த பாடலில் அதையும் சொல்லுகிறாள். உன் சேவகத்தையே பறையாக வேண்டி வந்தோம். எமக்கிறங்கி அருள் என்று வேண்டிய ஆண்டாளின் குரல் கண்ணனுக்கு கேட்டு விடுகிறது. இதோ அவன் எழுந்து வந்துவிட்டான். அவன் அடி போற்றி ஆண்டாள் பாடும் பாடலை அடுத்து காண்போம்.

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!

கண்ணா உன் இருப்பிடம் விட்டு எழுந்து எங்கள் மன சிம்மாசனத்தில் வந்து அமர். அமர்ந்து, நாங்கள் வந்த காரியம் கேட்டு ஆராய்ந்து அருள் என்று அழைக்கிறாள் ஆண்டாள். கண்ணனும் அவள் குரல் கேட்டு எழுந்து வருகிறான். அவன் அடிமேல் அடி வைத்து நடந்து வருகிறான். அவன் நடையழகை காண்கிறாள் ஆண்டாள்.

ஈரடியால் மூவுலகையும் அளந்த கால்களல்லவா அவை. அன்று மகாபலி சக்ரவர்த்தியின் ஆணவத்தை அழிக்க வாமனனாக வந்தவன் திருவிக்கிரமனாக உயர்ந்து உலகளந்து நின்றான். அதி பலசாலியான மகாபலி சக்கரவர்த்தியும் அபிமான பங்கனாய் நின்றான்! அப்படி அவனை கர்வபங்கம் செய்த அடிகளல்லவா இவை. சரணாகதி என்று அச்சேவடிக்குத்தானே சேவகம் செய்ய வேண்டப்போகிறாள் அவள். அதனால் அவன் அடியைப் போற்றுகிறாள். 
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!

ஆண்டாள் கண்ணனின் அவதார பெருமைகளையெல்லாம் பேச ஆரம்பிக்கிறாள் அடுத்ததாக

சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி!

வாமன அவதாரத்தில் மூன்றாம் அடி வைக்க இடமில்லாமல் போனதால் அன்று நிறைவு செய்யாது விட்டதை நிறைவு செய்யும் விதமாக இராமனாக 14 வருடங்கள் காட்டில் நடந்தானல்லவா.

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே

என்று சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் காட்டப்பட்டிருக்கிறது. ஆண்டாளும் அதையே எண்ணினாள் போலும், அதனால்தான் முதல் அடியில் உலகளந்த கால்களைப் பாடியவள் அடுத்த அடியில் தென்னிலங்கைக்குச் சென்று இராவணனை அழித்த அவன் வெற்றியைப் பேசுகிறாள்.

இராமாவதாரம் என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டி. பல நிலைகளிலும் மனிதர் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான நெறிகளைக் காட்டுகிறது இராம காதை. எனவே தான் எல்லாம் வல்லவனான பெருமாள் அவதார நிலைக்கு கட்டுப்பட்டு முறைதவறாது இலங்கைக்குச் சென்று இராவண வதத்தை முடித்தான் என்று சொல்வதுண்டு. அதனால் தான் ஆண்டாளும் சென்றங்கு செற்றாய் என்று அவன் வெற்றியைப் போற்றுகின்றாள்.

அடுத்த வரியில் ஆயர் சிறுவனாய், கண்ணன் அவதாரத்தையே பேசுகிறாள். கம்சன் அனுப்பிய அரக்கன் சக்கர வடிவில் வந்து காத்திருக்க, கண்ணன் தன் சின்ன பாதங்களால் உதைத்து அவனை வதைத்தானல்லவா! கண்ணன் நடந்து வரும் போது மிகப்பெரிய காரியம் செய்த அந்தச் சின்னஞ்சிறு பாதங்கள் ஆண்டாளுக்கு தெரிகின்றது.

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!

பொன்றுதல் என்றால் கண்ணுக்கேத் தெரியாமல் அழிந்துப் போதல். ஆம் அப்படித் தான் சக்கரமாய் வந்த அசுரன் அழிந்தான். அவன் மட்டுமா! இதோ நம் பிறவிச் சக்கரத்தையும் அவ்வாறே தூளாக்கி அழித்து காக்க வல்லது அவன் பாதங்களல்லவா! அவன் புகழ் பாட நம் பிறவி சக்கரம் அழியும் எனவே புகழ் போற்றி என்கிறாள்.

கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி!

கன்று வடிவிலும் விளாம்பழ மரமாகவும் இரு அரக்கர்கள் சின்னக் கண்ணனை அழிக்க கம்சனால் அனுப்பப்படுகிறார்கள். கண்ணன் சிறுவன் கன்றுகளுடன் மேய்ச்சல் காட்டில் விளையாடிக்கொண்டிருக்கிறான். என்றாலும் கன்றோடு கன்றாக வந்த அசுரனை அவனா அறியமாட்டான். கன்றை தூக்கி விளாம்பழ மரத்தினைப் பார்த்து எறிய இருவரும் அழிகிறார்கள். அப்படி அவர்களை வதம் செய்து விட்டு ஒன்றும் அறியாதவன் போல் குழலூதிக் கொண்டு தன் பசுக்கூட்டத்தில் ஒரு காலை மடக்கி புன்முறுவலோடு நின்றானாம் சிறுவன் கண்ணன்.

மாடு மேய்க்கும் கண்ணன் தன் குழலுடன் இருக்கும் அழகை இன்றும் கொண்டாடுகிறோம் அல்லவா. அதனால் தான் ஆண்டாளும் எறிந்த கைகளைப் பாடாமல் அழகாய் நின்ற திருவடிகளையே ‘கழல் போற்றி’ என்று பாடுகிறாள்.

திருவடி சேவகம் தானே இவள் வேண்டி வருவது. அவள் கருத்தெல்லாம் பாதமலர்களிலேயே இருப்பதில் ஆச்சரியமல்லவே!

அடுத்து கோவலர்களைக் காக்க கோவர்த்தனத்தை குடையாக பிடித்து கோவிந்தனாக நின்றானல்லவா!

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!

ஆம்! நீயே கதி என்று நம்பிவந்த அக்கோவலரை காத்து நின்ற உன் குணம் போற்றி. கர்வம் தொலைந்து நின்ற இந்திரனை மன்னித்தருளிய உன் குணம் போற்றி! நீ குண சீலனல்லவா! எங்களுக்கும் நீ அருள வந்திருக்கிறாய். உன் குணம் போற்றி என்று பாடுகிறாள் ஆண்டாள்.

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி!

பசுக்கள் ஒரு நாட்டின் செல்வங்களாக கருதப்பட்டன. அவற்றை கவர பகைவர் நினைப்பது உண்டு. அப்படி பகை வரும் பொழுது, இருக்கும் இடத்திலிருந்தே வேல் கொண்டு தாக்கி பகையை விரட்டுவது கோவலர் செய்கை. அப்படி எங்களைக் காப்பதற்காக இருக்கும் நின்கையில் வேல் போற்றி! என்று அவன் ஆயுதத்தையும் பாடுகிறாள் ஆண்டாள்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு
அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

பெரியாழ்வார், கண்ணன் சேவடிக்கு திருக்காப்புச் சொல்லி பாஞ்ச சன்னியத்திற்கும், ஆழிச் சக்கரத்திற்குமல்லவா பல்லாண்டு சொல்கிறார். அவள் வளர்த்த பெண்ணல்லவா, கண்ணன் கை வேலையும் போற்றுகிறாள்.

வாயாற, மனதாற, தமிழாற பாடிப் போற்றியவள்

என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

என்று தமது நோக்கத்தையும் சொல்லுகிறாள். உனக்கு கைங்கர்யம் செய்வதுதான் நாங்கள் வேண்டும் பறை. நீ இரங்கி அருள்வாய் கண்ணா! என்று வேண்டுகிறாள்.

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றுஎன்றுஉன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்


இந்த போற்றிப் பாடலை தினம் தினம் பாட அவன் அருள் பெறலாம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

Thursday, 13 April 2023

போற்றியாம் வந்தோம்

போற்றியாம் வந்தோம்

அடுத்த இரண்டு பாடல்களிலும் உன்னையே கதி என்று நாங்கள் சரணடைந்தோம். உன் கருணை பார்வையால் எங்கள் பாவங்களையெல்லாம் போக்கி அருள் என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து — ஏலோர் எம்பாவாய்.

இவ்வள்ளல் பெரும் பசுக்களை நாம் முன்பே பார்த்தோம் அல்லவா? ஒரு கலத்தில் பாலை ஊற்றினால் அது மிகுந்து வழியும். ஆனால் இப்பசுக்கள் பாலை சொரியும் வேகத்தில். மிகுதியாக பால் இருப்பின் வேகமாக சொரியும் அல்லவா! அந்த வேகத்தில் பால் எதிர் திசையில் மேலேறி பொங்குகிறதாம்.

ஆயர்பாடியில் வள்ளல் பெரும் பசுக்கள் மிகுந்து இருப்பது போல் வைணவ சமயத்தில் ஆச்சாரியர்கள் மிகுந்த ஞானம் உடையவர்களாக இருப்பர். மடை திறந்த வெள்ளமாய் ஞானத்தை அருளக்கூடியவர்கள். அவர்களை அடைந்த பக்குவப்பட்ட சீடர்கள் ஆச்சாரியருக்கு ஏற்ற கலங்களாய் ஞானத்தைப் பெற்று எதிர் பொங்கி மீதளிப்பவராய் இருப்பர்.

இப்படி மிகுந்த பால் பொழியும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அதிகமான எண்ணிக்கையில் கொண்ட நந்தகோபனின் மகனாக எங்களுக்காக இறங்கி வந்து அருள்பவனே! நீ கண்மலர்வாய். நீ பரம் பொருள். இவ்வுலகின் தோற்றத்திற்கு காரணமான சுடர், நீ வலிமையுடையவன், பெரியவன் என்றாலும் எங்களுக்காக கண்ணனாக இறங்கி அருள்பவன்.

பகைவர்கள் தம் வலிமை இழந்து சரண் என்று உன் வாசற் படியில் வந்து நிற்பதைப்போல் நாங்கள் உன் வாசல் வந்து நிற்கின்றோம். வலிமை தொலைத்த பகைவர் போல் உன்னை சரணடைந்தோம் என்றாலும் அவர்கள் ஆற்றாது வந்து நின்றார்கள். நாங்களோ நீயே சரணடைய வேண்டியவன் என்பதை உணர்ந்து உன்னைப் போற்றி வந்தோம் என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.

அடுத்தப் பாடலில்

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

இங்கு அங்கண் என்ற சொல் இரு இடத்தில் பயின்று வந்து அழகிய இடமாகிய பரந்த உலகம் என்ற பொருளும் அழகிய கண் என்ற பொருளும் தருவது அறிய தக்கது.

வலிமை தொலைந்த பகைவர் மட்டுமல்ல, அழகிய பரந்த உலகின் வலிமைமிக்க அரசர்களும் கூட நீயே உயர்ந்தவன் என்பதை உணர்ந்து தமது அபிமானம், கர்வம் பங்கப்பட்டுப் போக உன்னைச் சரணடைந்ததைப் போல் நாங்களும் ‘நான்’ என்ற எங்கள் அகங்காரம் அற்று போக, எல்லாவற்றையும் துறந்து, நீயே சரண் என்று வந்துள்ளோம்.

மகாபாரதத்தில் துர்யோதனனும் அர்ஜுனனும் கண்ணனைக் காண வருகிறார்கள். அவன் துணை நாடி வருகிறார்கள். துர்யோதனன் தலை பக்கமும் அர்ஜுனன் பவ்யனாக திருவடி நிழலிலும் நிற்கிறார்கள். கண் மலர்ந்த கண்ணன் அர்ஜுனனைத்தானே முதலில் பார்த்தான். அர்ஜுனனுக்கு தன்னையும் துர்யோதனனுக்கு தன் படையையும் அளித்தானல்லவா! இப்படி திருவடி அடைபவருக்குத் தன்னையே தருபவனல்லவா!!

அவ்வாறே உன் பாதங்களைச் சரணடைந்த எங்களை, கிங்கிணி வாய்போல் சிறிதாக திறந்திருக்கும் உன் தாமரை கண்களால் காணமாட்டாயோ! சூரியனும் சந்திரனும் ஒன்றாக எழுந்ததைப் போல் ஒருகண்ணில் உலகை காக்க வெப்பமும் மறுகண்ணில் தண்ணளியும் கொண்டு உன்னிரு அழகிய கண்களால் எங்களை நோக்கினால் எங்கள் சாபங்கள் எல்லாம் தீர்ந்து அழியும் அல்லவா!

நம்மால் நடக்கக் கூடியது எதுவுமில்லை என்று காரியங்களின் பலனில் கருத்தை வைக்காமல், அனைத்தும் அவனுக்காகவே என்று எண்ணி அவனை சரணடைந்தால், பகவான் உன் பாவங்களை எல்லாம் போக்கி மோட்சத்தை அருள்வான் என்பது சரம மந்திரத்தின் கருத்து.

இப்படி மிக அற்புதமாக சரம ஸ்லோகத்தில் சொன்னது போல் சரணடைவதைத்தானே இவ்விருப்பாடல்களும் நமக்கு எளிதாக காட்டுகின்றன. இப்பாடல்களைப் பாடினாலே, இப்பாடல்களில் உள்ள அவன் நாமங்களைச் சொன்னாலே உண்மையான மெய் அறிவை நாம் பெறுவோமல்லவா!!